இந்த காரில் 1கிமீ பயணிக்க ரூ.1-தான் செலவாகும்... ரொம்ப ரொம்ப கம்மியான செலவில் மின்சார காராக மாறிய சேன்ட்ரோ!
இளைஞர் ஒருவர் பெட்ரோலில் ஓடிக் கொண்டிருந்த ஹூண்டாய் சேன்ட்ரோ காரை மின்சாரத்தில் ஓடும் வாகனமாக மாற்றியிருக்கின்றார். இதற்கான செலவு மற்றும் மின்சார காராக மாறியிருக்கும் சேன்ட்ரோவின் சிறப்புகள் என்னென்ன என்பது பற்றிய முழு விபரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

தற்போது இந்தியர்கள் மத்தியில் மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அதிகரித்து வரும் பெட்ரோல், டீசலின் விலையே மக்கள் மின் வாகனங்களை நோக்கி நகர முக்கிய காரணமாக இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, மின்வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக அரசு சார்பில் மானியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், பெட்ரோல், டீசல் வாகனங்களைக் காட்டிலும் மின்சார வாகனத்தில் பயணிக்க மிகக் குறைவான அளவிலேயே செலவாகும்.

ஆகையால், மக்கள் பலர் மின் வாகன பயன்பாட்டிற்கு வேகமாக மாறிக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான சூழலில் இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னுடைய பெட்ரோலில் ஓடக் கூடிய ஹூண்டாய் சேன்ட்ரோ காரை மின்சாரத்தில் ஓடும் காராக மாற்றியிருக்கின்றார். "இதில் என்ன ஆச்சரியம், எரிபொருளில் இயங்கும் வாகனங்களை மின்சாரத்தில் ஓடும் வாகனமாக மாற்றுவது இந்தியாவில் இது ஒன்றும் முதல் முறை இல்லையே" என நீங்கள் கேட்கலாம்.

நீங்கள் கேட்பது சரிதான் இதற்கு முன்னதாக இந்தியாவில் இதுமாதிரியான வாகன மாடிஃபிகேஷன் சம்பவங்கள் பல அரங்கேறியிருக்கலாம். ஆனால், அவை அனைத்தைக் காட்டிலும் இந்த நிகழ்வு சற்று மாறுபட்டதாகக் காட்சியளிக்கின்றது. ஏனெனில், சேன்ட்ரோ காரை மின்சார வாகனமாக மாற்ற அந்த இளைஞர் வெறும் மூன்றே நாட்களை மட்டுமே எடுத்திருக்கின்றனர். இதுதவிர, காரின் பவரின் ஸ்டியரிங், ஏசி மற்றும் கியர்பாக்ஸ் உள்ளிட்ட அம்சங்கள் மாற்றப்படாமலே அக்கார் மின்சார வாகனமாக மாற்றப்பட்டிருக்கின்றது.
எனவேதான், இந்த நிகழ்வு பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. மேலும், பலரின் கவனத்தையும் ஈர்க்க தொடங்கியிருக்கின்றது. குறிப்பாக மிகக் குறுகிய கால இடைவெளியில் பெட்ரோல் சோன்ட்ரோ எலெக்ட்ரிக் சேன்ட்ரோவாக மாற்றப்பட்டிருக்கும் பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை எவ்வாறு இளைஞர் செய்தார் என்பது மிக துள்ளியமாக விளக்கும் வீடியோவே தற்போது யுட்யூபில் வெளியிடப்பட்டுள்ளது. மேக்கிங் வித் மிஹிர் எனும் யுட்யூப் சேனலிலேயே வீடியோ வெளியிடப்பட்டிருக்கின்றது.

பெட்ரோல் வாகனத்தை மின்சார வாகனமாக மாற்றுவது எப்படி என்கிற சூத்திரத்தையும் அவர் அவ்வீடியோவில் கூறியிருக்கின்றார். குறிப்பாக, மிக சுலபமாக எலெக்ட்ரிக் காராக எரிபொருள் வாகனத்தை மாற்றுவது எப்படி என்கிற வித்தையையே அவர் கூறியிருக்கின்றார். தற்போது, மின்சார வாகனமாக மாற்றப்பட்டிருக்கும் சேன்ட்ரோ இளைஞரின் தாத்தாவுடையது என கூறப்படுகின்றது.

ஏற்கனவே கூறியதைப் போல் இந்த வாகனம் மின்சார வாகனமாக மாறிய பின்னரும் அதன் பவர் ஸ்டியரிங், ஏசி கம்பிரஸ்ஸர் அப்படியே வேலை செய்யும் நிலையில் உள்ளன. எஞ்ஜினின் குறிப்பிட்ட சில பாகங்கள் அகற்றப்பட்ட பின்னரும் அது சீராக இயங்கும் வகையில் உள்ளது. எஞ்ஜினை முழுமையாக அகற்றினால் வேலை அதிகமாகும் என்பதாலும், அதனால் செலவும் அதிகரிக்கும் என்பதனாலயே பாதி பகுதியை மட்டும் அவர் அகற்றியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்காக பன்முக யுக்திகளை இளைஞர் கையாண்டிருக்கின்றார்.

எஞ்ஜினின் மேற்பகுதி பகுதி மட்டுமே அகற்றப்பட்டுள்ளது. அந்த இடத்தில் புதிதாக ஓர் மின் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கின்றது. எஞ்ஜினில் உள்ள பிஸ்டன்களை இயங்கச் செய்யுமாறு அந்த மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதுவே காரையும் இயங்கச் செய்ய வைத்து, மேலும், ஏசி, ஹெட்லைட் மற்றும் பவர் விண்டோக்களும் இயங்க உதவியாக இருக்கின்றது.

இந்த மாதிரியான ஸ்மார்ட்டான ஒர்க்கின் காரணத்தினாலேயே இந்த சேன்ட்ரோ கார் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், இத்தகைய சுலபமான யுக்தியின் காரணத்தினாலயே இளைஞரால் வெறும் மூன்றே நாட்களில் சேன்ட்ரோவை எலெக்ட்ரிக் கார் அவதாரத்திற்கு மாற்ற முடிந்திருக்கின்றது. குறிப்பிட்ட சில வேலைகளை கார் மெக்கானிக்கின் உதவியுடன் அவர் செய்திருக்கின்றார்.

இளைஞரின் இந்த செயலின் வாயிலாக யார் வேண்டுமானாலும் தங்களின் எரிபொருளில் இயங்கும் கார்களை அசால்டாக மின்சார காராக மாற்றிக் கொள்ளலாம் என்பது தெரிய வந்திருக்கின்றது. குறிப்பாக, எஞ்ஜினை முழுமையாக அகற்றாமலேயே மின்சார காராக மாற்றிக் கொள்ள முடியும் என்பதை இளைஞர் நிரூபித்துக் காட்டியிருக்கின்றார்.

மின்சார காராக மாறியிருக்கும் சேன்ட்ரோவில் 6 kW, 72V BLDC மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மின் மோட்டார் 350ஏ கெல்லி கன்ட்ரோல்லருடன் பொருத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்த மின் மோட்டாருக்கு தேவையான மின்சாரத்தை வழங்கும் விதமாக 72V 100Ah லித்தியம் ஃபெர்ரோஸ்பேட் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பேட்டரி காரின் பூட் பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதனை ரீ-சார்ஜ் செய்வதற்கான சார்ஜிங் போர்ட், இதற்கு முன்னதாக பெட்ரோல் நிரப்ப வழங்கப்பட்டிருந்த துவாரப்பகுதியில் நிறுவப்பட்டிருக்கின்றது. இந்த மாற்றத்தின் காரணமாக ப்யூவல் டேங்க் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது. சேன்ட்ரோவில் பொருத்தப்பட்டிருக்கும் எல்எஃப்பி பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்வதன் வாயிலாக சுமார் 80 கிமீ முதல் 90 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

சேன்ட்ரோவில் பொருத்தப்பட்டிருக்கும் எலெக்ட்ரிக் மோட்டார் மணிக்கு 60 கிமீ செல்லும் திறன் கொண்டது. இதுதவிர, இக்காரின் பிரேக்கிங் சிஸ்டத்திலும் லேசான மாற்றங்களை அந்த இளைஞர் செய்திருக்கின்றார். எலெக்ட்ரிக் பிரேக் பூஸ்டர் வேக்யூம் பம்பை புதியதாக அவர் பொருத்தியிருக்கின்றார். இது மிக நேர்த்தியாான பிரேக்கிங்கை வழங்க உதவியாக இருக்கும். இந்த ஒட்டுமொத்த மாற்றத்திற்கும் அவர் செய்த செலவு ரூ. 2.4 லட்சம் மட்டுமே என கூறப்படுகின்றது. இதனை தற்போது வெளியாகியிருக்கும் வீடியோவில் அந்த இளைஞரே உறுதிப்படுத்தியிருக்கின்றார்.


Click it and Unblock the Notifications








