புகழ்ந்து தள்ளீட்டாரு... டாடா எலெக்ட்ரிக் காரை வாங்கிய பிரபல நிறுவனத்தின் CEO... யார்னு தெரிஞ்சா அசந்திருவீங்க
டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரை பிரபல நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஒருவர் வாங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் எது என கேட்டால், டாடா நெக்ஸான் (Tata Nexon EV) என பச்சை குழந்தை கூட சரியாக கூறி விடும். இது ஏற்கனவே விற்பனையில் இருந்து வரும் டாடா நெக்ஸான் ஐசி இன்ஜின் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகும். டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு 2 ஆண்டுகள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் இமாலய சாதனை ஒன்றை படைத்துள்ளது. இந்திய சந்தையில் 13,500க்கும் மேற்பட்ட நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்களை டாடா நிறுவனம் விற்பனை செய்திருப்பதுதான் அந்த இமாலய சாதனை.

இந்தியாவில் தற்போதைய நிலையில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் அளவிற்கு வேறு எந்த எலெக்ட்ரிக் காரும் விற்பனையாவது கிடையாது. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில், 30.2 kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 312 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 9.14 வினாடிகளில் எட்டி விடக்கூடிய திறன் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு உண்டு. டிசி ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தினால், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை வெறும் ஒரு மணி நேரத்திற்கு உள்ளாகவே 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து விட முடியும்.

ஆனால் வழக்கமான வீட்டு சார்ஜரை பயன்படுத்தினால் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை 10 சதவீதத்தில் இருந்து 90 சதவீதம் வரை சார்ஜ் செய்வதற்கு சுமார் 8.30 மணி நேரம் வரை ஆகலாம். இந்த சூழலில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட புதிய நெக்ஸான் எலெக்ட்ரிக் காரை நடப்பாண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிசைன், வசதிகள் உள்ளிட்ட அம்சங்களில் மட்டுமல்லாது, இதன் பேட்டரி தொகுப்பும் அப்டேட் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி தற்போது உள்ள பேட்டரியை காட்டிலும் பெரிய பேட்டரி தொகுப்பை டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் பயணிக்கும் தூரமும் (ரேஞ்ச்) அதிகரிக்கலாம்.

இந்த சூழலில் பிரபல நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஒருவர் தற்போது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரை வாங்கியுள்ளார். உங்களுக்கு ஜோஹோ (Zoho) நிறுவனத்தை பற்றி தெரியும் என நம்புகிறோம். இதன் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் ஸ்ரீதர் வேம்பு (Sridhar Vembu). இவரது எளிமையான வாழ்க்கை பற்றிய செய்திகளை நீங்கள் வாசித்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இவர்தான் தற்போது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரை வாங்கியுள்ளார். இந்த தகவலை சமூக வலை தளங்கள் மூலமாக அவர் வெளியிட்டுள்ளார். அத்துடன் புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். ஸ்ரீதர் வேம்புவை பின் தொடர்பவர்கள் இதற்காக அவருக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக ஸ்ரீதர் வேம்பு கூறியிருப்பதாவது: அருகில் உள்ள நகரங்களுக்கு செல்வதற்காக டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரை வாங்கியுள்ளேன். இந்த கார் இனிமையான ஓட்டுதல் அனுபவத்தை வழங்குகிறது. குறிப்பாக இதன் கையாளுமையை நான் விரும்புகிறேன். இவ்வளவு சிறப்பான காரை விற்பனைக்கு கொண்டு வந்ததற்காக டாடா நிறுவனத்தை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.

இவ்வாறு ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார். ஸ்ரீதர் வேம்பு எளிமையான மற்றும் இயற்கையை மாசுபடுத்தாத வாழ்க்கையை வாழக்கூடியவராக அறியப்படுகிறார். இதை நிரூபிக்கும் வகையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரை அவர் தற்போது வாங்கியுள்ளார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இவரை பின்பற்றி இன்னும் பல்வேறு நிறுவனங்களின் உயர் அதிகாரிகளும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரை வாங்கினால் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு நேரடி போட்டி என எந்த மாடலும் விற்பனையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








