ஜெயிச்சிட்டோம் மாறா!! தாலிபான்களிடம் இருந்து தப்பி இப்படியொரு காரை உருவாக்குவது எல்லாம் சாதாரணம் இல்லை!
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் உருவாக்கிய ஸ்போர்ட்ஸ் கார் கத்தாரில் நடைபெற்றுவரும் ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து கத்தாருக்கு இந்த காரை கொண்டுவருவதற்கு உருவாக்கியவர்கள் எந்த அளவிற்கு சிரமப்பட்டனர் என்பதை ஏற்கனவே பார்த்திருந்தோம்.
உலகின் மிக பெரிய சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சிகளில் ஒன்று ஜெனிவா மோட்டார் கண்காட்சி ஆகும். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறக்கூடிய இந்த கண்காட்சியில் உலகின் பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது லேட்டஸ்ட் வாகனங்களை காட்சிக்கு நிறுத்துவது வழக்கம். சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவா என்ற நகரத்தில் நடைபெறுவதால், இந்த கண்காட்சிக்கு ஜெனிவா சர்வதேச ஆட்டோ கண்காட்சி என்று பெயர்.

ஆனால், இந்த 2023ஆம் வருடத்தில் கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் இந்த மோட்டார் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. கத்தாரில் நடைபெறுவதாலோ என்னவோ... தங்களது திறமைகளை வெளிக்காட்ட, குறிப்பாக ஆசியாவில் நிறைய பேருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வகையில், மிகுந்த எதிர்பார்க்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் தயாரிக்கப்பட்ட முதல் சூப்பர் கார் இந்த கண்காட்சியில் காட்சிக்கு நிறுத்தப்பட்டு உள்ளது.
தாலிபான் அரசாங்கத்தால் செயல்படும் ஆப்கானிஸ்தான் நாட்டின் கார் தயாரிப்பு நிறுவனமாக எண்டாப் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முதல் ஆப்கான் சூப்பர் கார் சிமுர்ஹ் என்ற பெயரில் முக்கிய மோட்டார் கண்காட்சியான தோகா சர்வதேச ஆட்டோ கண்காட்சியில் காட்சிக்கு நிறுத்தப்பட்டு உள்ளது.

எண்டாப் நிறுவனத்தின் சிஇஓ, டிசைனர், முதன்மை பொறியியலாளர் என பல பதவிகளை வகிக்கும் முகமது ரெசா அஹ்மதி தோகா கண்காட்சியில் தனது உருவாக்கமான சிமுர்ஹ் சூப்பர் காரை பார்வையாளர்கள் முன் வெளியீடு செய்துள்ளார். இருப்பினும் கண்காட்சியில், காரை பற்றிய விபரங்கள் எதுவும் பெரியதாக வெளியிடவில்லை. இருப்பினும், நமக்கு ஏற்கனவே இந்த காரை பற்றிய சில விபரங்கள் தெரியும்.
இந்த காரை எண்டாப் முதன்முதலாக இந்த 2023ஆம் ஆண்டின் துவக்கத்தில் மடா9 என்ற பெயரில் உலகிற்கு காட்டியது. இந்த சூப்பர் காரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. தோகா கண்காட்சியில் நிறுத்துவதற்கு முன் வரையில், இந்த கார் மடா9 என்ற பெயரில் தான் அழைக்கப்பட்டு வந்தது. ஆனால், யாராலும் அறியப்படாத வாகனமாக இருக்க வேண்டும் என்பதற்காக, சிமுர்ஹ் என்ற புதிய பெயரில் எண்டாப் வெளியீடு செய்துள்ளது.

இந்த சூப்பர் காரின் வெளிப்பக்க மற்றும் உட்பக்க பேனல்களை மட்டுமே எண்டாப் குழுவினர் உருவாக்கியுள்ளனர். மற்றப்படி, இந்த காரில் 2004இல் உருவாக்கப்பட்ட டொயோட்டா கரோல்லா செடான் காரின் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும், கரோல்லா காரில் இருந்து என்ஜினை அப்படியே எடுத்து பொருத்தாமல் சில, பல மாடிஃபிகேஷன்களை செய்த பிறகே பொருத்தியுள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆப்கானிஸ்தானில் ஒரு குழுவினர் ஒன்றாக இணைந்து சூப்பர் கார் ஒன்றை தயாரிக்க முன்வந்திருப்பதே ஆச்சிரியமான விஷயம். அப்படியிருக்கையில், அவர்கள் தாங்கள் உருவாக்கிய சூப்பர் காரை கத்தார் வரையில் கொண்டுவந்து, உலகளவில் பலரால் உற்றுக் கவனிக்கப்படும் மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்தி இருப்பது அதனை காட்டிலும் பாராட்டக்குரிய விஷயம் என்றுதான் சொல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications









