Aha NexCruise இருந்தா எந்த இ-காரும் அதிகம் ரேஞ்ஜ் தரும்.. உலக நாடுகளை அசர வைக்கும் இந்தியரின் கண்டுபிடிப்பு!
ஜெய்பூரை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ஆஹா 3டி இன்னோவேஷன்ஸ் (Aha 3D innovations). இந்நிறுவனம் ஓர் மிகக் குட்டியான கருவி ஒன்றை தயாரித்து இருக்கின்றது. அந்த கருவியை மின்சார கார்களில் பயன்படுத்தும்போது அது வழக்கமான ரேஞ்ஜைக் காட்டிலும் அதிக ரேஞ்ஜை பெற உதவும் என கூறப்படுகின்றது.
20 சதவீதம் வரை அதிக ரேஞ்ஜை தரும் என ஆஹா 3டி இன்னோவேஷன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் கூறி இருக்கின்றார். இந்த கண்டுபிடிப்பிற்கு நிறுவனம் ஆஹா நெக்ஸ் க்ரூஸ் (Aha Nex Cruise) என பெயர் சூட்டி இருக்கின்றது. பவர் பேங்க் போன்று இருக்கும் இந்த கருவியே எலெக்ட்ரிக் கார்களை அதிகம் ரேஞ்ஜ் தரக் கூடிய மாற்றும்.

மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும், ஆமை வேகத்திலேயே மின்சார வாகனங்கள் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. அதேவேளையில், கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் இதை மின்னல் வேகத்துடன் ஒப்பிடலாம். அரசின் பலகட்ட முயற்சிகளின் காரணமாக சற்றே எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனைச் சூடுபிடித்து உள்ளது.
அதேவேளையில், இப்போதும் பலர் மின்சார வாகனங்களை வாங்கத் தயக்கம் காட்டுவதை நம்மால் காண முடிகின்றது. போதிய அளவு சார்ஜிங் மையங்கள் இல்லாததே இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, பலர் தாங்கள் எதிர்பார்க்கும் ரேஞ்ஜ் தரக் கூடிய மின்சார கார் சந்தையில் இல்லாததாகக் கருதுகின்றனர்.
இந்த மாதிரியான சூழலிலேயே ஆஹா 3டி இன்னோவேஷன்ஸ் சூப்பரான கருவியை எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக் கண்டுபிடித்திருக்கின்றது. இந்த கருவியைப் பயன்படுத்தாதபோது, உங்கள் வாகனம் ஓர் முழு சார்ஜில் 100 கிமீ ரேஞ்ஜ் தரும் எனில், அக்கருவியை பயன்படுத்தும்போது கூடுதலாக 20 கிமீ ரேஞ்ஜை தரும்.
அதாவது, ஒட்டுமொத்தமாக 120 கிமீ பயணிக்கக் கூடிய வாகனமாக இந்த கருவி உங்களது மின்சார காரை மாற்றிவிடும். இந்த கருவி க்ரூஸ் கன்ட்ரோலராகவும் செயல்படும் என நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதுமட்டுமின்றி இன்னும் பல்வேறு சிறப்பு அம்சங்களை இது வழங்கும் என ஆஹா நிறுவனத்தின் நிறுவனர் ஆகாஷ் தெரிவித்திருக்கின்றார்.
பயணத்தின்போது சிறந்த கட்டுப்பாடு, நகர்புறங்களில் ஈகோ மோடில் பயணிக்கும்போதும் அதிக ரேஞ்ஜை வழங்குதல் உள்ளிட்டவற்றை இந்த கருவி வழங்குமாம். இதுதவிர, ரேஞ்ஜை அதிகரித்து தர வேண்டும் என்பதற்காக சில சமயங்களில் இது வேகக் கட்டுப்பாட்டு கருவியாகவும் செயல்படும். பிரத்யேகமாக டாடா நெக்ஸான் இவி-யைக் கருத்தில் கொண்டே ஆஹா நெக்ஸ் க்ரூஸ் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது.
இருப்பினும், இதனை அனைத்து எலெக்ட்ரிக் கார்களிலும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. ஆஹா 3டி இன்னோவேஷன்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான ஆகாஷ், டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரை பயன்படுத்தி வருகின்றார். இந்த காரின் வாயிலாக அண்மையில் ஓர் ரவுண்ட் ட்ரிப்பாக ஜெய்பூர் தொடங்கி இந்தியா-பாகிஸ்தான் எல்லையான லோஹ்வாலா வரை அவரும், அவரது மனைவியும் பயணித்திருக்கின்றனர்.
இது 1,500 கிமீ தூர பயணம் ஆகும். இந்த பயணத்தின்போது அவர்கள் ஒட்டுமொத்தமாக ரூ. 800 வரை சார்ஜிங்கிற்காக செலவு செய்திருக்கின்றனர். இந்த பயணமே ஆகாஷை நெக்ஸ் க்ரூஸை உருவாக்க காரணமாக அமைந்திருக்கின்றது. மேலும், இந்த கருவியை ஆக்ஸலரேட்டருடன் இணைக்க வேண்டும். கழட்டி மாட்டும் வகையில் இது இணைக்கப்படும்.
இவ்வாறு இணைக்கப்படும் போது இந்த கருவியாக வெயிக்கிள் கன்ட்ரோல் அலகாக மாறிவிடும். இந்த கருவி ஆக்ஸலரேட்டரை உள் வாங்கி தேவையான அளவு மட்டுமே சிக்னலை இயக்கத்திற்காக அனுப்புமாம். இதுவே, அதிக ரேஞ்ஜிற்கு வழிவகுக்கும் செயல் ஆகும். ஒட்டுமொத்தமாக இரு விதமான தேர்வுகளில் இந்த கருவியை விற்பனைக்கு வழங்க ஆகாஷ் திட்டமிட்டு இருக்கின்றனர்.
நெக்ஸ் க்ரூஸே பேசிக் மற்றும் நெக்ஸ் க்ரூஸே ப்ரோ ஆகியவையே அவை ஆகும். முதல் ஒன்றிற்கு ரூ. 19,900ம், இரண்டாவது ஒன்றிற்கு ரூ. 25,990ம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது எப்போதில் இருந்து சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும்?, எங்கு எல்லாம் விற்பனைக்குக் கிடைக்கும்?, என்கிற விபரங்கள் வெளியிடப்படவில்லை. விரைவில் இதுகுறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
இதுபோன்று மின்சார வாகனங்களை அதிகம் ரேஞ்ஜ் தரக் கூடியதாக மாற்றக் கூடிய கருவிகளை மின்சார வாகன தயாரிப்பு நிறுவனங்களே கார்களுடன் சேர்த்து வழங்கினால் சிறப்பானதாக இருக்கும் என்பது எங்களின் கருத்து. அதேவேளையில், இதுபோன்ற புதிய கண்டுபிடிப்புகளுக்கும், கண்டுபிடிப்பாளர்களுக்கும் உகந்த அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என்பதே பலரின் வேண்டுகோளாக இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








