பறக்கும் காருக்கு அப்ரூவல் கிடைச்சாச்சு... நானும், நீங்களும்கூட இனி பறக்கலாம் போலையே!
உலகின் முதல் பறக்கும் மற்றும் சாலையில் ஓடும் காருக்கு அப்ரூவல் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எந்த நாட்டில் அனுமதி வழங்கப்பட்டு இருக்கின்றது?, வாகனத்தின் சிறப்புகள் என்ன?, என்பது போன்ற பறக்கும் கார் பற்றிய அனைத்து முக்கிய விபரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
உலகிலேயே முதல் முறையாக பறக்கும் கார் ஒன்றிற்கு பறக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்காவிலேயே அனுமதி வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் அலெஃப் ஏரோனாடிக்ஸ் (Alef Aeronautics). இது, வாகனம் மற்றும் விமானப் போக்குவரத்தை சார்ந்து இயங்கும் நிறுவனம் ஆகும்.

இந்த நிறுவனமே அமெரிக்கா ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் இடமிருந்து சிறப்பு விமான தகுதி சான்றிதழைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிறப்பு விமான தகுதி சான்று என்பது பறக்கும் காரையே குறிக்கின்றது. இது அதிகாரப்பூர்வமாக அமெரிக்காவின் வான்வெளியில் பறக்கலாம் என்பதற்கான அனுமதியே தற்போது பெறப்பட்டு இருக்கின்றது.
அமெரிக்காவில் பறக்கும் கார்கள் இயங்க அனுமதி வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னதாக விமானம் மற்றும் ஹெலிகாப்டர் போன்றவற்றிற்கு மட்டுமே அந்நாட்டில் பறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது. தற்போது அமெரிக்காவின் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன், செங்குத்தாக தரையிறங்கும் மற்றும் வானில் பறக்கும் வாகனங்களுக்கான பாலிசியை தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

விரைவில் அதனை அறிமுகம் செய்யவும் அது திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த நிலையிலேயே அலெஃப் ஏரோனாடிக்ஸ் உருவாக்கி இருக்கும் பறக்கும் காருக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கின்றது. இதனால் செங்குத்தாக டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங் ஆக முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், அவற்றிற்கு விமானத்தை போல தனி ஓடுதளம் தேவைப்படாது.
அதேவேளையில், தேவைப்பட்டால் இந்த காரை சாலையில் ஓட்டிச் செல்லவும் முடியும். ஆமாங்க, ஆலெஃப் நிறுவனம் இந்த பறக்கும் காரை பறக்கும் காராக மட்டுமின்றி சாலையில் ஓடக் கூடிய வழக்கமான காராகவும் உருவாக்கி இருக்கின்றது. ஆகையால், திடீரென டிராஃபிக்கில் சிக்க நேரிட்டால் காரின் பறக்கும் மோடை ஆக்டிவேட் செய்து டிராஃபிக்கை தவிர்த்து கொள்ளலாம்.

இதன் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இந்த பறக்கும் மற்றும் ஓடும் காரை முழுக்க முழுக்க மின்சார வாகனமாக ஆலெஃப் வடிவமைத்திருக்கின்றது. வீடுகள் அல்லது எந்த சார்ஜிங் மையத்தில் வைத்து வேண்டுமானாலும் அதை சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். ஒரு முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் சாலை பயணிக்கும்போது 322 கிமீ ரேஞ்ஜையும், வானில் பறக்கும்போது 177 கிமீ ரேஞ்ஜையும் பெற்றுக் கொள்ள முடியும்.
இதில் கொடுமை என்னவென்றால் ஒருவர் அல்லது இருவரால் மட்டுமே இந்த காரில் பயணிக்க முடியுமாம். மேலும், இதனை 3 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனைச் செய்ய நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. இதன் இந்திய ரூபாய் மதிப்பு 2 கோடியே 46 லட்சம் ஆகும்.

இந்த அளவு உச்சபட்ச விலையிலேயே அலெஃப் எலெக்ட்ரிக் பறக்கும் கார் விற்பனைக்கு வர இருக்கின்றது. இதனை வர்த்தக ரீதியாகவும் இயக்க நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அவ்வாறு வரும்பட்சத்தில் இந்த காரில் நம்மைப் போன்றோரும் பயணிக்க முடியும். ஆனால், இதுகுறித்து துள்ளியமான விபரங்கள் வெளியிடப்படவில்லை.
விரைவில் அதுகுறித்த விபரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் பறக்கும் காரின் டெலிவரி பணிகள் 2025 ஆம் ஆண்டிற்குள் தொடங்கப்பட இருப்பதாக தெரிவிக்கின்றன. மேலும், ஏற்கனவே 440க்கும் மேற்பட்ட ஆர்டர்கள் இந்த காருக்கு குவிந்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. எனவே விரைவில் உலகின் முதல் பறக்கும் மற்றும் சாலையில் ஓடும் மின்சார கார் பயன்பாட்டிற்கும் வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இது விற்பனைக்கு வர இருக்கும் விலையை வைத்து பார்த்தால் நம்மால் எங்கே இருந்து இதை வாங்க முடியும் என்கிற சந்தேகம் உங்களுக்கு எழும்பி இருக்கும். ஆனால், இது வர்த்தக ரீதியான பயன்பாட்டிற்கு வரும்போது நம்மைப் போன்றோரால் சுலபமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ஆனால், கொஞ்சம் அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். அதேவேளையில், ஆலெஃப் போன்ற இன்னும் பல நிறுவனங்கள் மலிவு விலை பறக்கும் கார்களை தயாரிக்கும் பணியில் களமிறங்கி இருக்கின்றன. அவை பயன்பாட்டிற்கு வரும்பட்சத்தில் கட்டாயம் ஏழை மற்றும் எளிய மக்களாலும் பறக்கும் கார்களில் பயணிக்க முடியும் என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









