பயணிகளுடன் முதல் முறையாக சாலையில் ஓடிய அமேசானின் டிரைவர் இல்லாமல் பயணிக்கும் கார்! எங்கு தெரியுமா?
டிரைவர் இல்லாமல் இயங்கும் காரின் சோதனையோட்டத்தை வெற்றிகரமாக நடத்தியிருப்பதாக அமேசன் (Amazon) நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், பல்வேறு தொழில்துறைகளில் தனது பங்களிப்பை வழங்கி வருவது குறிப்பிடத்தகுந்தது. அந்தவகையில், நிறுவனம் தானாக இயங்கும் (செல்ஃப் டிரைவிங்) வாகன உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகின்றது.
ஸுக்ஸ் (Zoox) எனும் யூனிட் வாயிலாகவே ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் வாகனங்களை அமேசான் தயாரித்து வருகின்றது. இந்த வாகனத்தின் சோதனையோட்டமே வெற்றிகரமாக செய்யப்பட்டிருப்பதாக நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது. அமேசான் நிறுவனத்தின் ஊழியர்களே பயணிகளாக பயன்படுத்தப்பட்டு சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது. டிரைவர் இல்லாமல் இயங்கும் ஸுக்ஸ் கார் பொதுவெளியில் இயங்குவது இதுவே முதல் முறை ஆகும்.

முதல் டெஸ்டே சக்சஸ் ஆயிருச்சு
அதாவது, பொது சாலையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது இதுவே முதல் முறை. கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொதுவெளியில் இந்த தானியங்கி காரை இயக்கிக் கொள்ள அமெரிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியநிலையிலேயே சோதனை ஓட்டம் பணியாளர்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது. அதன் முதல் பயணத்திலேயே வெற்றிகரமாக ஸுக்ஸ் தானியங்கி கார் செயல்பட்டு இருக்கின்றது. இந்த வாகனத்தை ரோபோ டாக்சியாக பயன்படுத்த நிறுவனம் திட்டம் போட்டு இருக்கின்றது.
வெகு விரைவில் வெகுஜன பயன்பாட்டிற்கும் இந்த வாகனம் வர இருக்கின்றது. இதற்கான பணியிலேயே அமேசான் நிறுவனம் தற்போது மிக தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே பொதுவெளியில் ஸுக்ஸ் ரோபோ டாக்சி சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஸுக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகங்கள் கலிஃபோர்னியாவின், ஃபாஸ்டர் சிட்டியின் வெவ்வேறு பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன.

ஊழியர்களே பயணிகளாக மாற்றம்
இந்த அலுவலகங்களுக்கே அதன் ஊழியர்கள் ஏற்றிச் செல்லப்பட்டிருக்கின்றனர். முதற்கட்டமாக இந்த வாகனத்தை தனது ஊழியர்களுக்கு கட்டணமில்லா சேவையாக தொடங்க நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத்தொடர்ந்து, தானியங்கி கார்களில் இருக்கும் கோளாறுகள் கண்டறியப்பட்டு, அவற்றை சரி செய்யவும் நிறுவனம் பிளான் போட்டு இருக்கின்றது. இதேபோல், பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் விரைவில் ஸுக்ஸ் தானியங்கி வாகனங்கள் வர இருக்கின்றன.
எப்போ பயன்பாட்டிற்கு வர உள்ளது?
ஆனால், அது எப்போது என்கிற விபரம் வெளியிடப்படவில்லை. இன்னும் ஒரு சில மாதங்களில் வணிக ரீதியமாக ஸுக்ஸ் டிரைவர் இல்லாமல் இயங்கும் ரோபோ டாக்சிகள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல ரோபோ டாக்சியை உருவாக்குவதில் அதிகம் ஆர்வம் காட்டின. ஆனால், நடைமுறை வாழ்க்கைக்கு அது சாத்தியமில்லாததாக சில நிறுவனங்கள் கருதி, தானியங்கி வாகன உற்பத்தியையே கைவிட்டுவிட்டன.

பேக்கடித்த இரு முன்னணி நிறுவனங்கள்
ஃபோர்டு மற்றும் ஃபோக்ஸ்வேகன் ஏஜி ஆகிய இரு நிறுவனங்களும் கடந்த காலங்களில் ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் வாகன உற்பத்தியில் ஈடுபட்டு, தற்போது விளகி இருக்கின்றன. இந்த மிகப் பெரிய ஜாம்பவான்களே தானியங்கி வாகன உற்பத்தியில் இருந்து பின் வாங்கியது, ஒட்டுமொத்த வாகன உலகிற்கும் பெருத்த அதிர்ச்சியாக அமைந்தது.
அதேவேளையில், ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஆல்ஃபெட் நிறுவனத்தின் வேமோ ஆகிய இரு நிறுவனங்களும் இப்போதும் செல்ஃப் டிரைவிங் கார்களை உருவாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதேபோல், அமேசானும் தானியங்கி காரை உருவாக்குவதில் மிக தீவிரமாக செயல்பட்டு, தற்போது அதில் வெற்றியையும் கண்டிருக்கின்றது. ஸுக்ஸ் உருவாக்கி இருக்கும் இந்த ரோபோ டாக்சியில் காரை கட்டுப்படுத்துவதற்கான எந்த கருவிகளும் இருக்காது.

எந்த கன்ட்ரோலும் இருக்காது
ஸ்டியரிங் வீல், பிரேக், கிளட்ச் மற்றும் ஆக்சலரேட்டர் என எதற்குமான பெடல்களும் இந்த காரில் இருக்காது. இதற்கு பதிலாக சென்சார்கள் மட்டுமே அந்த வாகனத்தில் இடம் பெற்றிருக்கும். அதுவே காரை டிரைவர் இல்லாமல் இயங்க செய்யும். மேலும், பயணிகள் விரும்பும் இடத்தில் டிராப் செய்தல் மற்றும் பிக்-அப் செய்தல் போன்றவற்றையும் அது தானாகவே செய்யும்.
ரொம்ப நாளா ஈடுபட்டு வராங்க
அமேசான் நிறுவனம் ஸுக்ஸ் நிறுவனத்தை 2020 ஆம் ஆண்டிலேயே முழுமையாக கையகப்படுத்தியது. அப்போதில் இருந்தே நிறுவனம் ரோபோ டாக்சியை உருவாக்கும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. 1.3 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு இந்த நிறுவனத்தை அமேசான் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications









