தெரு தெருவா போய் குப்பை சேகரிப்பதற்கே இப்படி ஒரு ஆட்டோவா! ஆந்திரா எங்கயோ போயிருச்சு! காசை கொட்டியிருக்காங்க!
ஆந்திர பிரதேச மாநிலத்தின் முதல் அமைச்சர் பதவியில் ஜெகன் மோகன் ரெட்டி (Jagan Mohan Reddy) அமர்ந்து, 4 ஆண்டுகள் முடிவடைந்து விட்டன. கடந்த 2019ம் ஆண்டு முதல் அமைச்சர் பதவியில் அமர்ந்த அவர், வெகு சமீபத்தில்தான் வெற்றிகரமாக 4 ஆண்டுகளை நிறைவு செய்தார்.
முதல் அமைச்சராக பதவியேற்றதில் இருந்தே, ஆந்திர பிரதேச மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் (Electric Vehicles) பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகளை ஜெகன் மோகன் ரெட்டி தொடர்ச்சியாக எடுத்து வருகிறார். இந்த வரிசையில் தற்போது மேலும் ஒரு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுத்தமான ஆந்திர பிரதேசம் (Clean Andhra Pradesh - CLAP) திட்டத்தின் கீழ், 516 எலெக்ட்ரிக் ஆட்டோக்களின் சேவையை முதல் அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். இந்த எலெக்ட்ரிக் ஆட்டோக்களின் ஒட்டுமொத்த மதிப்பு 22.18 கோடி ரூபாய் ஆகும்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள 36 நகராட்சி பகுதிகளில் இந்த எலெக்ட்ரிக் ஆட்டோக்கள் இயங்கவுள்ளன. சுற்றுச்சூழலுக்கு நட்பான வகையில் குப்பைகளை சேகரிக்கும் பணியில் இந்த எலெக்ட்ரிக் ஆட்டோக்கள் ஈடுபடுத்தப்படும் என ஆந்திர பிரதேச மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான நிகழ்ச்சியில், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆந்திர பிரதேச மாநிலம் முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரித்து கொண்டே வருவதுடன், எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு தேவையான முயற்சிகளையும் முதல் அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மேற்கொண்டு வருகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
எலெக்ட்ரிக் கார் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வரும் டெஸ்லா (Tesla) நிறுவனத்தின் இணை நிறுவனரான மார்ட்டின் எபர்ஹர்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூறியிருந்த ஒரு விஷயத்தை இங்கே நினைவு கூறுவது சிறப்பாக இருக்கும். எலெக்ட்ரிக் வாகன துறையில் முதலீடு செய்வதற்கு ஆந்திரா சரியான மாநிலம் அவர் பேசியிருந்தார்.
இதற்கிடையே ஆந்திர பிரதேச முதல் அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, கடந்த காலங்களிலும் இப்படி பல்வேறு வாகனங்களை ஒரே இடத்திற்கு கொண்டு வந்து, சேவையை தொடங்கி வைத்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் இதற்கு ஒரு உதாரணம். அப்போது ஒட்டுமொத்தமாக 1,088 ஆம்புலன்ஸ்களின் சேவையை முதல் அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்.
அவை அனைத்தும் 108 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 104 நடமாடும் மருத்துவ மையங்கள் ஆகும். இதை தொடர்ந்து கடந்த 2021ம் ஆண்டு 175 கால்நடை ஆம்புலன்ஸ்களையும், நடப்பு 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 165 கால்நடை ஆம்புலன்ஸ்களையும் முதல் அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் நோக்கத்தில், ஆந்திராவில் குப்பைகளை சேகரிக்கும் பணியில், எலெக்ட்ரிக் ஆட்டோக்கள் களமிறக்கப்பட்டிருப்பது உண்மையிலேயே நல்ல ஒரு விஷயம்தான். வரும் காலங்களில் இன்னும் அதிக எலெக்ட்ரிக் வாகனங்கள் அங்கு பயன்பாட்டிற்கு வரும் என நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








