ஏஆர் ரஹ்மன் இசையமைக்க சிநேகனின் வரிகளில் மஹிந்திராவிற்காக தயாரான சூப்பரான பாடல்.. இந்த பாடலை கேட்டுட்டீங்களா!
மஹிந்திரா (Mahindra) நிறுவனம் வெகு விரைவில் இந்திய மின்சார கார் (Electric Car) பிரிவில் புதுமுக இ-கார்களை விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக அந்த நிறுவனம் தார் தார்.இ (Thar.e) எலெக்ட்ரிக் கார் மாடலை நேற்றைய (ஆகஸ்டு 15) தினம் வெளியீடு செய்தது.
ஏற்கனவே மஹிந்திரா எக்ஸ்யூவி 300 (XUV300) கார் மாடலை தழுவி உருவாக்கப்பட்ட எக்ஸ்யூவி 400 (XUV400) எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு வழங்கிக் கொண்டு இருக்கின்ற சூழலில் தார் கார் எஸ்யூவியை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் தார்.இ-யையும் அது வெளியீடு செய்து இருக்கின்றது.

ஆகையால், இதுவும் விரைவில் மஹிந்திரா நிறுவனத்தின் மின்சார கார் (eCar) பிரிவின்கீழ் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் காரை மட்டுமில்லைங்க. இன்னும் சில எலெக்ட்ரிக் கார்களையும் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பது தற்போது உறுதியாகி இருக்கின்றது.
ஆமாங்க, மஹிந்திரா நிறுவனம் தன்னுடைய இன்னும் சில தயாரிப்புகளை எலெக்ட்ரிக் வெர்ஷனில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. அந்தவகையில், மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ.இ (Scorpio.e), பொலிரோ.இ (Bolero.e), எக்ஸ்யூவி.இ (XUV.e) ஆகியவற்றை மின்சார வெர்ஷனில் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதை உறுதி செய்திருக்கின்றது.

சென்ற ஆண்டும் இதேபோல் சில எலெக்ட்ரிக் கார் மாடல்கைளை மஹிந்திரா நிறுவனம் கான்செப்ட் மாடலாக பார்ன் (born) எனும் ரேஞ்ஜின்கீழ் வெளியீடு செய்தது. எக்ஸ்யூவி.இ8 (XUV.e8), எக்ஸ்யூவி.இ9 (XUV.e9), பிஇ.05 (BE.05), பிஇ.07 (BE.07) மற்றும் பிஇ.09 (BE.09) ஆகிய எலெக்ட்ரிக் கான்செட்ப் கார் மாடல்களையே நிறுவனம் வெளியீடு செய்தது.
மஹிந்திரா நிறுவனம் தன்னுடைய எலெக்ட்ரிக் கார்களை புதிய சின்னத்தின்கீழ் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதும் தற்போது உறுதியாகி உள்ளது. இதற்காக ஓர் பாடலையு நிறுவனம் உருவாக்கி இருக்கின்றது. சிநேகன், அன்வித்தா தத் குப்தன் ஆகியோர் வரிகளில், ஏஆர் ரஹ்மான் இசையில் அந்த பாடல் உருவாக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

குறிப்பாக, ஏஆர் ரஹ்மானின் இசை இந்த பாடலுக்கு மிகப் பெரிய வலுவைச் சேர்த்திருக்கின்றது. சலாங் எனும் பெயரில் இந்த கீதம் பாடப்பட்டு இருக்கின்றது. இந்த கீதம் ஏஆர் ரஹ்மானின் இசையையும், மஹிந்திரா காரையும் நேசிப்பவர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கின்றது.
தற்போது உறுதி செய்யப்பட்டு இருக்கும் எலெக்ட்ரிக் கார்கள் சிங்கிள் மோட்டார் அல்லது டூயல் மோட்டார் செட்-அப்பில் வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மோட்டார்கள் ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) மற்றும் வேலியோ (Valeo) போன்ற முன்னணி நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்டவை என கூறப்படுகின்றது.
110 பிஎஸ் மற்றும் 135 என்எம் டார்க், 285 பிஎஸ் மற்றும் 535 என்எம் டார்க் ஆகிய திறன் வெளிப்பாட்டு வசதிக் கொண்ட ஃபோக்ஸ்வேகன் எலெக்ட்ரிக் மோட்டார்களும், 231 பிஎஸ் மற்றும் 380 என்எம் டார்க் திறனை வெளியேற்றக் கூடிய வேலியோ மின்சார மோட்டார் ஆகியவற்றையே மஹிந்திரா அதன் எலெக்ட்ரிக் கார்களில் பயன்படுத்தப்போவதாக தெரிவித்து உள்ளது.
இதுபோன்று குறிப்பிட்ட சில தகவல்கள் மட்டுமே தற்போது வெளியாகி உள்ளன. ஆனால், என்ன மாதிரியான பேட்டரி பேக் இந்த எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட இருக்கின்றன என்பது அறிவிக்கப்படவில்லை. மேலும், எந்த எலெக்ட்ரிக் கார் முதலில் விற்பனைக்குக் கொண்டு வரப்படும்?, அதன் விலை எவ்வளவு இருக்கும் என்பது போன்ற விபரங்களும் வெளியிடப்படவில்லை. விரைவில் அதுகுறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார கார்களுக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த பிரிவில் டாடா மோட்டார்ஸ் மிகப் பெரிய தலைவனாக செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே ஏற்கனவே அதிக பாதுகாப்பான கார்கள் பிரிவில் டாடா மோட்டார்ஸுக்கு தலை வலியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மஹிந்திரா, விரைவில் மின்சார கார்கள் பிரிவிலும் டாடாவிற்கு டஃபான போட்டியை வழங்க உள்ளது.


Click it and Unblock the Notifications
