பல்க்கா டெலிவரி பண்ண போறாங்க! மிகப்பெரிய ஆர்டரை வென்ற தமிழக நிறுவனம்! இனி எல்லா எடத்துலயும் அவங்க பஸ்தான்!
இந்தியாவை சேர்ந்த முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று அசோக் லேலண்ட் (Ashok Leyland). தமிழக தலைநகர் சென்னையில்தான் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. அசோக் லேலண்ட் நிறுவனம் பஸ் போன்ற வர்த்தக வாகனங்களை தயாரிப்பதில் புகழ் பெற்று விளங்குகிறது.
இந்த சூழலில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பங்குகள் (Shares) தற்போது உயர தொடங்கியுள்ளன. சுமார் 2 சதவீதம் வரை அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்துள்ளன. குஜராத் மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் (Gujarat State Road Transport Corporation - GSRTC) ஆர்டரை, அசோக் லேலண்ட் நிறுவனம் வென்றிருப்பதுதான் இதற்கு முக்கியமான காரணம்.

குஜராத் மாநில சாலை போக்குவரத்து கழகம் தற்போது அசோக் லேலண்ட் நிறுவனத்திற்கு 1,282 பஸ்களை டெலிவரி செய்வதற்கான ஆர்டரை வழங்கியுள்ளது. கிட்டத்தட்ட 1,300 பஸ்கள் என்பது மிகப்பெரிய ஆர்டர் ஆகும். இந்த ஆர்டரின் கீழ் அசோக் லேலண்ட் நிறுவனம், 55 சீட்டர் பஸ்களை டெலிவரி செய்யவுள்ளது.
இந்த பஸ்களில், பிஎஸ்-6 டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த பஸ்களின் நீளம் 11 மீட்டர் ஆகும். குஜராத் மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் ஆர்டரை வென்றிருப்பது குறித்து, அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான சென்னு அகர்வால் கூறியிருப்பது பின்வருமாறு:
அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பஸ்கள் மிகவும் வலிமையானவை. நீடித்து உழைக்க கூடியவை. அத்துடன் எங்கள் பஸ்களில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளும் கொடுக்கப்படுகின்றன. எனவே பஸ் செக்மெண்ட்டில் தனியார் மட்டுமல்லாது, அரசுகளும் கூட அசோக் லேலண்ட் நிறுவனத்தை விரும்புகின்றன. இவ்வாறு சென்னு அகர்வால் கூறினார்.
முன்னதாக டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனமும் இதேபோன்று பல்வேறு மாநில அரசுகளிடம் இருந்து மிகப்பெரிய அளவில் பஸ்களை டெலிவரி செய்வதற்கான ஆர்டர்களை வென்றுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இவை எல்லாம் மிகப்பெரிய ஆர்டர்கள் என்பதால், பஸ்கள் அனைத்தும் படிப்படியாக டெலிவரி செய்யப்படும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஎம்டிசி எனப்படும் பெங்களூர் பெருநகர போக்குவரத்து கழகம் (BMTC - Bengaluru Metropolitan Transport Corporation) உள்பட பல்வேறு போக்குவரத்து கழங்களிடம், அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பஸ்கள் இருக்கின்றன. குஜராத் மாநில சாலை போக்குவரத்து கழகத்திடமும் கூட ஏற்கனவே அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பஸ்கள் இருக்கின்றன.
இந்த சூழலில்தான் குஜராத் மாநில சாலை போக்குவரத்து கழகம், அசோக் லேலண்ட் நிறுவனத்திற்கு மிகப்பெரிய ஆர்டர் ஒன்றை புதிதாக வழங்கியுள்ளது. எனவே வரும் காலங்களில், குஜராத் மாநில சாலை போக்குவரத்து கழகத்திடம் இருக்க கூடிய அசோக் லேலண்ட் நிறுவன பஸ்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உயரவுள்ளது.


Click it and Unblock the Notifications








