ரூ.5 லட்சம் இருந்தால் போதும் இந்த ஆடி கார்களை புக் செய்துவிடலாம்!! சார்ஜ் செய்தால் 580கிமீ-க்கு இயங்கும்!
ஆடி க்யூ8 இ-ட்ரான் மற்றும் க்யூ8 ஸ்போர்ட்பேக் இ-ட்ரான் (Audi Q8 e-tron & Q8 Sportback e-tron) எலக்ட்ரிக் கார்களுக்கான முன்பதிவுகள் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டு உள்ளன. இந்த புதிய ஆடி எலக்ட்ரிக் கார்களை பற்றியும், இவற்றை எவ்வாறு புக் செய்வது என்பதை பற்றியும் இனி விரிவாக பார்க்கலாம்.
மக்கள் பலரால் வாங்கக்கூடிய வகையில் பட்ஜெட் விலையிலான எலக்ட்ரிக் கார்கள் ஒரு பக்கம் வந்து கொண்டிருக்க, மறுப்பக்கம் லக்சரி எலக்ட்ரிக் கார்களும் புதியது புதியதாக அறிமுகமாக துவங்கியுள்ளன. இந்த வகையில், உலகளவில் பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி விரைவில் அதன் புதிய எலக்ட்ரிக் கார்களாக க்யூ8 இ-ட்ரான் மற்றும் க்யூ8 ஸ்போர்ட்பேக் இ-ட்ரான் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது.

இந்த புதிய ஆடி எலக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் வருகிற ஆகஸ்ட் 18ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், இந்த எலக்ட்ரிக் கார்களுக்கான முன்பதிவுகள் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டு உள்ளன. புதிய ஆடி க்யூ8 இ-ட்ரான் மற்றும் க்யூ8 ஸ்போர்ட்பேக் இ-ட்ரான் கார்களை ரூ.5 லட்சம் என்கிற முன்தொகை உடன் விருப்பப்படும் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்யலாம் என ஆடி நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆடியின் இந்த புதிய இ-ட்ரான் எலக்ட்ரிக் கார்கள் ஜாகுவாரின் ஐ-பேஸ் மற்றும் பிஎம்டபிள்யூவின் ஐ.எக்ஸ் எலக்ட்ரிக் கார்களுக்கு போட்டியாக களமிறக்கப்படுகின்றன. புதிய ஆடி க்யூ8 இ-ட்ரான் எலக்ட்ரிக் காரின் பேட்டரியை ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 582கிமீ தொலைவிற்கு பயணிக்க முடியும். அதுவே, க்யூ8 ஸ்போர்ட்பேக் இ-ட்ரான் காரில் அதிகப்பட்சமாக 600கிமீ தொலைவிற்கு பயணம் செய்யலாம்.
க்யூ8 ஸ்போர்ட்பேக் இ-ட்ரான் காரில் கூடுதல் ரேஞ்ச் கிடைப்பதற்கு முக்கிய காரணம், அதன் கூடுதல் காற்றியக்கவியலுக்கு இணக்கமான டிசைன் ஆகும். இந்த ஆடி எலக்ட்ரிக் கார்களின் பேட்டரியை 10%-இல் 80% வரையில் சார்ஜ் நிரப்ப 31 நிமிடங்கள் தேவைப்படும் என கூறப்படுகிறது. மடேரா ப்ரவுன், க்ரோனோஸ் கிரே, கிளாசியர் வெள்ளை, மைதோஸ் கருப்பு, பிளாஸ்மா நீலம், சோனேரா சிவப்பு, மேக்னட் கிரே, சியாம் பழுப்பு மற்றும் மன்ஹட்டான் கிரே என்கிற 9 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் இந்த புதிய ஆடி கார்களை வாங்கலாம்.

அதேபோல், இந்த எலக்ட்ரிக் கார்களின் உட்புற கேபினையும் ஒகாபி ப்ரவுன், பேர்ல் பழுப்பு மற்றும் கருப்பு என்ற நிறங்களில் ஒன்றில் தேர்வு செய்யலாம். ஆடி நிறுவனம் உருவாக்கியதிலேயே விலையுயர்ந்த எலக்ட்ரிக் கார்களாக க்யூ8 இ-ட்ரான் மற்றும் க்யூ8 ஸ்போர்ட்பேக் இ-ட்ரான் விளங்கவுள்ளன. ஆதலால், அனைத்து விதமான தொழிற்நுட்ப அம்சங்களையும் இந்த கார்களில் ஆடி நிறுவனம் வழங்கியுள்ளது.
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், சவுகரியமான பயண அனுபவத்திற்கு தகவமைத்து கொள்ளக்கூடிய ஏர் சஸ்பென்ஷன் இந்த எலக்ட்ரிக் கார்களில் இடம்பெற்றுள்ளது. அத்துடன், எல்இடி டிஆர்எல்-களுடன் டிஜிட்டல் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லேம்ப்கள், பி&ஒ பிரீமியம் 3டி சவுண்ட் சிஸ்டம், 4-ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், சவுகரியமான இருக்கைகள் மற்றும் 360-டிகிரி கேமரா உடன் பார்க் அசிஸ்ட் உள்ளிட்டவையும் புதிய க்யூ8 இ-ட்ரான் கார்களில் இடம்பெற்றுள்ளன.
புதிய க்யூ8 இ-ட்ரான் கார்களுக்கான முன்பதிவுகளை துவங்கியிருப்பது குறித்து ஆடி இந்தியா நிறுவனத்தின் தலைமை அதிகாரி பல்பிர் சிங் தில்லோன் கருத்து தெரிவிக்கையில், "எங்களின் புதிய மின்சார வாகனங்களான க்யூ8 இ-ட்ரான் மற்றும் க்யூ8 ஸ்போர்ட்பேக் இ-ட்ரான் -ஐ அறிமுகப்படுத்த இன்னும் சில நாட்களே உள்ளன. இந்த கார்கள் சில மாதங்களுக்கு முன்புதான் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டன" என்றார்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: தீபாவளி உள்ளிட்ட இந்திய பண்டிகை நாட்களை டார்க்கெட் செய்து இந்த எலக்ட்ரிக் கார்களை ஆடி கொண்டுவருவது தெளிவாக தெரிகிறது. ஏனெனில் ஆடியை போன்று மேலும் சில நிறுவனங்களும் தங்களது புதிய கார்களை மிக விரைவில் நம் நாட்டு சந்தையில் அறிமுகம் தயாராகி வருகின்றன. ஆடி க்யூ8 இ-ட்ரான் கார்களின் விலைகள் இன்னும் இந்தியாவில் அறிவிக்கப்படவில்லை. அவற்றை தெரிந்துக் கொள்ள தொடர்ந்து டிரைவ்ஸ்பார்க் தளத்துடன் இணைப்பில் இருக்கவும்.


Click it and Unblock the Notifications








