“இரயிலில் செல்லும் கார்கள்”... குஷியாக ட்விட் போட்ட மத்திய அமைச்சர்!! இந்த ஐடியா நல்லா இருக்கே...
மனிதன் கண்டுப்பிடித்ததில் மிக சிறந்த போக்குவரத்து இரயில் என்றால் அதில் மிகையில்லை. இரயில் தண்டவாளங்களை அமைப்பதற்கும், என்ஜின் உள்பட இரயில் பெட்டிகளை உருவாக்குவதற்கும் அதிக காலம் மற்றும் பணி சுமை இருக்கும் என்றாலும், இரயில் போக்குவரத்து பாதுகாப்பானது என அடித்து சொல்லலாம்.
ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்து சாலை விபத்துகளை காட்டிலும், இரயில் விபத்துகள் குறைவாகவே நடைபெற்றுள்ளன. அதேபோல் இரயில் போக்குவரத்தினால் சாலை போக்குவரத்து நெரிசலும் குறைகிறது. குறிப்பாக, பெரும்பாலான கூட்ஸ் பொருட்கள் இரயில்களின் மூலமாக கொண்டு செல்லப்படுகின்றன. இந்த வகையில் தொழிற்சாலையில் இருந்து கார்களும் சமீப காலமாக அதிகளவில் இரயில்கள் மூலமாகவே இடம் மாற்றம் செய்யப்படுகின்றன.

ஏனெனில், தொழிற்சாலையில் இருந்து கார்களை மிக பெரிய கனரக லாரிகளில் டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு அனுப்புவதை காட்டிலும் இரயில்களில் குறைந்த நேரத்தில் அதிக எண்ணிக்கையில் அனுப்ப முடிகிறது. இதனை நன்கு தெரிந்துக்கொண்ட கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது கார்களை இரயில்கள் மூலமாக இடம் மாற்றம் செய்ய முன்வந்துள்ளன. இந்த வகையில் ஹூண்டாய் தான் அதிகளவில் தனது கார்களை இடம் மாற்றம் செய்யும்.
சமீபத்தில் டொயோட்டா நிறுவனமும் தனது ஹைரைடர் மற்றும் இன்னோவா ஹைகிராஸ் கார்களை இரயில்களில் அனுப்பி வைத்துள்ளது. இதனை மத்திய இரயில்வே துறை அமைச்சரே தனது டுவிட்டர் பக்கத்தில் படங்களுடன் உறுதிப்படுத்தியுள்ளார். கர்நாடகாவில் டொயோட்டா தொழிற்சாலை அமைந்துள்ள நிட்வாண்டா பகுதியில் இருந்து ஹரியானா மாநிலத்தின் ஃபாருக் நகருக்கு மொத்தம் 200 கார்கள் சரக்கு இரயில் ஒன்றில் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளன.
ஏற்கனவே கூறியதுபோல், இந்த 200 கார்களில் ஹைரைடர் மற்றும் இன்னோவா ஹைகிராஸ் கார்கள் மட்டுமே அடங்குகின்றன. கர்நாடகா- ஹரியானா இடையேயான தொலைவு மிக நீண்டது என்பதை நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இத்தகைய நீண்ட தூர பயணத்திற்கு கனரக லாரிகளை காட்டிலும் இரயில் போக்குவரத்தே சிறந்ததாக இருக்கும். அதுமட்டுமின்றி, 200 கார்களை கொண்டு செல்ல ஏகப்பட்ட கனரக லாரிகள் தேவைப்படும்.

அவை குறிப்பிட்ட நேரத்தில் சென்றடைந்துவிட்டனவா அல்லது வழியில் ஏதேனும் பிரச்சனையா என ஒவ்வொரு ஓட்டுனரையும் அவ்வப்போது கேட்க வேண்டி இருக்கும். ஆனால் ஒரே இரயிலில் 200 கார்களும் அடக்கமாகிவிட்டன. அத்துடன் இரயில் போக்குவரத்து ஆனது நேரடியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதால், கார்களை பற்றிய கவலை தயாரிப்பு நிறுவனங்களுக்கு இருக்காது.
இரயிலில் டொயோட்டா கார்கள் கொண்டு செல்லப்பட்டிருப்பது குறித்து மத்திய இரயில்வே அமைச்சகத்தின் டுவிட்டர் பக்கத்தில், "டிராக்கில் ஆட்டோமொபைல்கள்! மற்றொரு முயற்சியாக, இரயில்வேஸ் சமீபத்தில் 200 கார்களை கர்நாடகாவின் நிட்வாண்டாவில் இருந்து ஹரியானாவின் ஃபாருக்நகருக்கு ஏற்றப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய நிறுவனங்களான டொயோட்டாவும் சுஸுகியும் கூட்டணியில் இருப்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம்.
இதன் எதிரொலியாக இந்தியாவிலும் டொயோட்டா உடன் கூட்டணியில் உள்ள மாருதி சுஸுகியும் இந்தியன் இரயில்வே துறையின் இரயில்களை நன்கு உபயோகப்படுத்தக்கூடிய நிறுவனமாகும். கடந்த 2013இல் இருந்து கார்களை இடம் மாற்றம் செய்ய இரயில்களை பயன்படுத்தி வரும் மாருதி சுஸுகி இதுவரையில் 3.2 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை இரயில்களில் இடம் மாற்றம் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








