மழை வெளுத்து வாங்கலாம்... முன்னாடியே தயாரா இருந்துக்கோங்க! முதல்ல இந்த அம்சம் எல்லாம் இருக்கானு பாத்துக்கோங்க!
இந்த முறை வெளுத்து வாங்கின வெயிலை பாத்தா மழையும் இந்த வருஷம் பொளந்து கட்டும்னுதான் எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதவிர, இன்னொரு பக்கம் புதிதாக 'பிபார்ஜாய்' எனும் புயல் இந்தியாவை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்துக் கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றது.
எனவே இந்தியாவுக்கு பெருசா ஏதோ ஒன்னு காத்திருக்கு என்பது தெளிவாக தெரிகின்றது. இந்த மாதிரியான சூழலில் கடுமையான மழைக்கு வாய்ப்பு இருக்கும். இந்த மழை நம்முடைய அன்றாட வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும். இதே போல் நம்முடைய வாகனங்களையும் அது பாதிக்கச் செய்யும்.

எனவே, மழைக் காலத்தில் வாகனங்களைப் பத்திரப்படுத்துவது என்பது அவசியமானது. இதை உணர்ந்தே கடுமையான மழைக் காலங்களின்போது மழையினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து வாகனங்களை பாதுகாக்கும் சில முக்கிய அணிகலன்கள் பற்றிய தகவலை இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
ஜன்னல்களுக்கான விஷர்: தடையில்லா பயணத்திற்கு இந்த அம்சம் வழிவகுக்கும். மழைக் காலத்தில் ஏசியை ஆன் செய்யாமலே பயணிக்கவே பலர் விரும்புவர். இதனால், மழைக்காலத்தில் திடீர் பனிமூட்டம் காருக்குள் ஏற்படும். இதைத் தவிர்க்கவே விண்டோ விஷர்கள் உதவுகின்றன. இது இல்லை எனில் கைகளால் ஜன்னல் கண்ணாடிகளை சுத்தம் செய்ய வேண்டி இருக்கும். வாகனத்தை ஓட்டும்போது இதில் கவனத்தைச் செலுத்துவது சற்று கடினம் ஆகும். ஆகையால், விண்டோ விஷர்களை தாராளமாக பயன்படுத்தலாம்.

ஃபாக் லைட்: பனி மூட்டம் மற்றும் அதிக மழையினால் ஏற்படும் இருட்டு மற்றும் புகை மூட்டங்களில் தெளிவாக பார்வை திறனை பெறவே இது உதவுகின்றது. காடு மற்றும் மலைப் பாதையில் இதன் உதவி முக்கியமாக தேவைப்படுகின்றது. நவீன கால கார்களில் இந்த அம்சம் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகின்றது. கடந்த கால கார்களில் இதை பார்ப்பது மிகவும் கடினமானது. ஆகையால், தனியாகதான் வாங்கி பொருத்திக் கொள்ள வேண்டும்.
வைப்பர் பிளேடு: வைப்பர் பிளேடு நல்ல இயக்க நிலையில் இருக்கிறதா என்பதை சோதித்து பார்த்துக் கொள்ளவும். இதன் தேவை மழைக் காலத்தில் மிக அதிகமாக இருக்கும். ஆகையால், மழைக்கு முன்னரே அதை சரிபார்த்துக் கொள்வது நல்லது. நீண்ட நாட்களாக வைப்பர் பயன்படுத்தப்படாமல் இருந்திருந்தால் அதன் ரப்பர் வெடிப்பு விட்டிருக்கும் அல்லது பயன்படுத்த முடியாத அளவிற்கு இறுகியிருக்கும். ஆகையால், அதை மழைக்கு முன்னரே மாற்றிக் கொள்வது.
கார் கவர்: மழையின் போது எந்தவித பாதிப்பும் இன்றி தொடர்ச்சியாக வாகனம் நிற்கும் எனில் அதில் துரு ஏற்பட ஆரம்பிக்கலாம். ஆகையால், மழை நீர் வாகனம்மீது படாத வண்ணம் பாதுகாப்பதற்கு கார் பாடி கவரை பயன்படுத்தலாம். மழை நீரில் இருந்து மட்டுமல்ல மழையின்போது மரங்களில் இருந்து முறிந்து விடும் சிறு சிறு கிளைகளினால் ஏற்படும் பாதிப்பில் இருந்து அது பாதுகாக்கும்.
மண்ணை தடுக்கும் குவார்டுகள்: காரின் முன் வீல் மற்றும் பின் வீலில் கட்டாயம் இருத்தல் வேண்டும். வீலின் இயக்கத்தால் தூக்கி வீசப்படும் சேறு மற்றும் மழை நீர் வாகனத்தின் அடிப்பகுதியில் தங்காமல் தடுத்துவிடும். இந்த செயல் நடைபெறவில்லை எனில் அனைத்து அழுக்குகளும் வாகனத்தின் அடிப்பகுதியில் தங்கி துருவிற்கு இரையாக தொடங்கிவிடும். ஆகையால், இந்த அம்சத்தை மழைக் காலத்திற்கு முன்னரே உங்கள் காரில் பொருத்திக் கொள்வது நல்ல யுக்தியாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நம்ம தமிழகத்தை எப்போது மழை வெளுத்து வாங்கும் என்பதையே கணிக்க முடியாது. ஆகையால், அது வரும் முன்னரே அதை எதிர்கொள்ள தயாராக இருத்தல் வேண்டும். மேலே பார்த்த அம்சங்கள் மட்டுமின்றி பேட்டரி, எஞ்ஜின் செயல் திறன் மற்றும் டயர் உள்ளிட்டவை நல்ல நிலையில் இருக்கிறதா என்பது சரி பார்த்துக் கொள்ளவும்.


Click it and Unblock the Notifications