மத்திய அரசின் கனவு நிஜமாக போகுது!! மொத்த நாடும் இதுக்குதான் காத்துக்கிட்டு இருக்கு!
பாரத் என்சிஏபி (Bharat NCAP) கிராஷ் டெஸ்ட்கள் வருகிற டிசம்பர் 15ஆம் தேதி முதல் துவங்க உள்ளன. டெஸ்ட்டில் முதலாவதாக உட்படுத்தப் படுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள முதல் தொகுப்பு கார்கள் டிச.15இல் சோதனை செய்யப்படும். இந்த வகையில், எந்தெந்த கார்கள் முதலாவதாக பாரத் என்சிஏபி-இல் சோதனை செய்யப்படலாம் என்பதை பற்றி இனி பார்க்கலாம்.
மத்திய அரசாங்கம் இந்தியாவிற்கென பாரத் என்சிஏபி (New Vehicle Assessment Program) அமைப்பை கடந்த 2023 ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்தது. பொதுவாக, என்சிஏபி ஆனது ஓர் கண்டத்திற்கோ அல்லது குறிப்பிட்ட சில நாடுகளுக்காகவோ செயல்படும். இவை இல்லாமல், க்ளோபல் என்சிஏபி என ஒட்டுமொத்த உலகத்திற்கான என்சிஏபி-யும் உள்ளது.

அதேநேரம், அமெரிக்கா, சீனா, தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் தங்கள் நாட்டிற்கென பிரத்யேகமாக என்சிஏபி-ஐ கொண்டுள்ளன. அதாவது, அந்தந்த நாடுகளில் விற்பனையில் உள்ள கார்கள் மட்டுமே அந்தந்த என்சிஏபி-இல் சோதனை செய்யப்படும். இந்த வரிசையில் 5வது நாடாக நம் இந்தியா தனக்கென பாரத் என்சிஏபி-ஐ நியமித்துக் கொண்டுள்ளது.
முன்னதாக, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்கள் க்ளோபல் என்சிஏபி-இல் மட்டுமே சோதனை செய்யப்பட்டு வந்தன. இனி பாரத் என்சிஏபி-யிலும் சோதனை செய்யப்படும். பாரத் என்சிஏபி-இன் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் டம்மிகளுடன், சில கார்கள் கிராஷ் டெஸ்ட் செய்யப்பட்டதுபோல் படங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

அந்த படங்களில் காரின் தோற்றத்தை முழுமையாக காண முடியவில்லை. இருப்பினும், எந்தந்த கார்கள் முதலாவதாக சோதனை செய்யப்படும் என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டுவது போல் இந்த படங்கள் அமைந்துள்ளன. ஹூண்டாய் போன்ற சில கார் நிறுவனங்கள் தங்களது கார்களை பாரத் என்சிஏபி-க்கு அனுப்பவுள்ளதை ஏற்கனவே தெரிவித்து இருந்தன.
இதன்படி, ஹூண்டாய் நிறுவனம் முதற்கட்டமாக 3 கார்களை பாரத் என்சிஏபி-க்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இந்த 3 ஹூண்டாய் கார்களுள் முதலாவதாக, இந்திய மார்க்கெட்டில் சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்த எக்ஸ்டர் எஸ்யூவி கிராஷ் டெஸ்ட்டிற்கு உட்படுத்தப்பட உள்ளது. இன்னும் சொல்லப்போனால், பாரத் என்சிஏபி-இல் முதலாவதாக சோதனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற கார்களுள் ஒன்றாக ஹூண்டாய் எக்ஸ்டர் உள்ளது.

எக்ஸ்டருக்கு அடுத்து, விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய கிரெட்டா எஸ்யூவி கார் 2வது ஹூண்டாய் காராக பாரத் என்சிஏபி-இல் உட்படுத்தப்படலாம். ஹூண்டாய் மட்டுமின்றி, மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா போன்ற இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களும் தங்களது கார்களை பாரத் என்சிஏபி-இல் சோதனை செய்யவுள்ளன.
இந்த வரிசையில் கியாவையும் இணைத்துக் கொள்ளலாம். ஏனெனில், ஹூண்டாய் எக்ஸ்டரை போன்று, பாரத் என்சிஏபி-இல் முதலாவதாக சோதனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் காராக 2024 கியா சொனெட் பார்க்கப்படுகிறது. புதிய சொனெட் ஃபேஸ்லிஃப்ட் காரை மிக சமீபத்தில்தான் கியா நிறுவனம் வெளியீடு செய்தது. க்ளோபல் என்சிஏபி-இல் பின்பற்றப்படும் பெரும்பான்மையான விதிமுறைகள் தான் பாரத் என்சிஏபி-யிலும் பின்பற்றப்பட உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒவ்வொரு நாட்டுக்கும் என்சிஏபி அவசியமாகும். ஏனெனில், அப்போதுதான் தங்களது நாட்டில் விற்பனை செய்யப்படும் கார்களின் தரம் குறித்து பொது மக்களுக்கு தெரிய வரும். இந்த விஷயத்தில் நம் மத்திய அரசு தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இதனால்தான், உலகிலேயே 5வது நாடாக இந்தியா தனக்கென என்சிஏபி-ஐ அறிமுகம் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications









