மத்திய அரசு அடிக்குறது எல்லாம் சிக்ஸர் தான்! இதை பின்நாட்களில் வரலாறு பேசும்! பிற நாட்டை நம்பி இருக்க வேண்டாம்
மத்திய அரசு இந்தியாவிற்கான புதிய கார் மதிப்பீட்டு செயல்முறை (NCAP)-ஐ பாரத் என்சிஏபி என்கிற பெயரில் இன்று (ஆகஸ்ட் 22) அறிமுகப்படுத்தி உள்ளது. கார்களின் மதிப்பீட்டை தெரிந்துக் கொள்வது எந்த அளவிற்கு முக்கியமானது என்பதையும், இந்தியாவின் பாரத் என்சிஏபி-ஐ பற்றியும் இனி விரிவாக இந்த செய்தியில் பார்க்கலாம்.
எந்தவொரு பொருளின் தரத்தையும் நன்கு ஆராய்ந்து பார்த்து வாங்குவது அவசியமான ஒன்று. சில ஆயிர ரூபாய்கள் கொடுத்து வாங்கும் எலக்ட்ரானிக் பொருட்களின் தரத்தையே மிகவும் சரிப்பார்த்து வாங்குகிறோம் எனும்போது, பல இலட்ச ரூபாய்களை செலவழித்து வாங்கும் காரின் தரம் எவ்வாறு உள்ளது என்பதை அறிவது மிக அவசியமாகிறது. அதுமட்டுமின்றி, புதியதாக வாங்கிய எலக்ட்ரானிக் சாதனங்கள் சரியாக வேலை செய்யவில்லை என்றாலும் பெரியதாக பிரச்சனை இல்லை.

அதாவது, அவற்றை பயன்படுத்துவோரின் உயிருக்கு பெரியதாக எந்த பிரச்சனையும் ஏற்பட போவதில்லை. ஆனால், லிட்டர் கணக்கில் எரிபொருள் உடன் சாலையில் அதிவேகத்தில் இயங்கும் காரின் தரம் சிறப்பாக இல்லையென்றால், பெரிய அசம்பாவிதங்களில் சென்று முடியவும் வாய்ப்புள்ளது. தொழிற்சாலையில் உருவாக்கும் ஒவ்வொரு காரையும் மற்றும் அவற்றின் ஒவ்வொரு பாகங்களையும் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகே கார் தயாரிப்பு நிறுவனங்கள் பொருத்துகின்றன.
அதுமட்டுமின்றி, புதியதாக விற்பனைக்கு கொண்டுவரப்படும் கார்கள், அந்த நாட்டின் சாலைகளுக்கும், காலநிலை போன்ற பயணசூழலுக்கும் எவ்வாறு பொருந்துக்கின்றன என்பதை அறிய பல மாதங்களுக்கு பொது சாலைகளில் சோதனை ஓட்டங்களிலும் ஈடுப்படுத்தப்படுவது உண்டு. கார்களின் இந்த சோதனை ஓட்டம் தொடர்பான ஸ்பை படங்களை அவ்வப்போது இணையத்தில் பார்த்திருப்பீர்கள்.
இருந்தாலும், இந்த சோதனைகள் அனைத்தையும் காரை தயாரிக்கும் நிறுவனம் தான் மேற்கொள்வதால், காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மேலும் நம்பிக்கை ஏற்பட 3ஆம் தரப்பு அமைப்புகளிடம் கொடுத்து சில பல மோதல் சோதனைகளை மேற்கொண்டு, காருக்கான மதிப்பீட்டை வழங்குமாறு கார் நிறுவனங்கள் வேண்டுகின்றன. இத்தகைய 3ஆம் தரப்பு அமைப்புகளை என்சிஏபி என அழைக்கின்றனர்.
உலகளாவிய க்ளோபல் என்சிஏபி உள்ளது. அதேபோன்று ஆசிய, ஐரோப்பிய, லத்தீன் அமெரிக்க என ஒவ்வொரு கண்டத்திற்குமான என்சிஏபி அமைப்புகளும் உள்ளன. கண்டங்களுக்கான என்சிஏபி என வரும்போது, அந்த கண்டத்தில் ஏதேனும் ஒரு நாட்டில் விற்பனை செய்யப்படும் கார் அந்த என்சிஏபி-இல் சோதனை செய்து மதிப்பீடப்படும். இதில் இந்தியா தனது சொந்த நாட்டிற்கென கொண்டுவருவதே பாரத் என்சிஏபி ஆகும்.
நீண்ட கால எதிர்பார்ப்புக்கு மத்தியில், பாரத் என்சிஏபி அறிமுக நிகழ்ச்சி இன்று (ஆகஸ்ட் 22) மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியின் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் உள்ள 3.5 டன்கள் வரையில் எடை கொண்ட மோட்டார் வாகனங்களின் பாதுகாப்பு தரநிலையை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், கார் உற்பத்தியாளர்கள் தானாக முன்வந்து, ஆட்டோமொபைல் துறை தரநிலை (AIS) 197இன் படி சோதனை செய்ய கார்களை வழங்கலாம். சோதனைகளின் மூலம் செயல்திறன் அடிப்படையில், பெரியவர்கள் பாதுகாப்பு மற்றும் குழந்தை பயணிகளுக்கான பாதுகாப்புக்கு நட்சத்திர மதிப்பீடுகள் வழங்கப்படும். புதியதாக கார் வாங்க உள்ளோர் கார்களின் பாதுகாப்பு தரங்களை ஒப்பிட்டு, அதற்கேற்ப தங்களது முடிவை எடுக்க, இந்த நட்சத்திர மதிப்பீடுகளை பயன்படுத்திக் கொள்ளலாம்" என குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதன் மூலமாக கார் நிறுவனங்களுக்கு இடையே ஓர் ஆரோக்கியமான போட்டி ஏற்படும் என மத்திய அரசு நம்புகிறது. மஹாராஷ்டிராவில் புனேக்கு அருகே உள்ள மத்திய சாலை போக்குவரத்து கல்வி நிறுவனம் (CIRT)-இன் கீழ் செயல்பட உள்ள பாரத் என்சிஏபி வருகிற அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்குவர உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். வெவ்வேறான கார் நிறுவனங்களில் இருந்து 30க்கும் அதிகமான கார்களை சோதனை செய்ய விண்ணப்பங்கள் வந்துள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: என்சிஏபி ஒன்றும் புதியது கிடையாது. ஆனால் பாரத் என்சிஏபி-க்கு நாம் இந்த அளவிற்கு முக்கியத்துவம் அளிப்பதற்கு, இது மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட உள்ளது என்பதை ஓர் காரணமாக கூறினாலும், முக்கிய காரணம் வேறொன்று உள்ளது. அதாவது, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார் ஒன்று ஆசிய என்சிஏபி-இல் சோதனை செய்யப்பட்டாலும், சோதனையின்போது காரில் இருக்கும் தொழிற்நுட்பங்கள் வித்தியாசப்படுவது உண்டு.
இதனால், ஆசிய என்சிஏபி-இல் வழங்கப்படும் மதிப்பீட்டை முழுவதுமாக நம்மால் நம்ப முடியாது. ஆனால் பாரத் என்சிஏபி-இல் இந்தியாவில் விற்கப்படும் கார் அதே தொழிற்நுட்பங்களுடன் சோதனை செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








