அனல் பறக்கும் ஏலம்... மஹிந்திராவின் 16 லட்ச ரூபா காரை கோடிகளை கொட்டி வாங்க முந்தியடிக்கும் கோடீஸ்வரர்கள்!
"ஒன் ஆஃப் ஒன்" (ஒரே ஒரு மாடல்)ஆக உருவாக்கப்பட்டு இருக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் காரின் ஸ்பெஷல் எடிசனை வாங்க இந்திய தொழிலதிபர்கள் போட்டி போட்டுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
மஹிந்திரா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலாக எக்ஸ்யூவி 400 (Mahindra XUV400) இருக்கின்றது. எக்ஸ்யூவி 300 கார் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த வாகனம் இந்தியாவில் டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக களமிறக்கப்பட்டு உள்ளது. இந்த காரின் டெலிவரி பணிகள் வெகு விரைவில் நாட்டில் தொடங்கப்பட உள்ளன. இதற்கான புக்கிங் பணிகள் மிக சமீபத்திலேயே தொடங்கியது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ரூ. 21 ஆயிரம் முன் தொகையில் புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் காரின் விலையை வெளியிட்டு வெகுநாட்கள் ஆகின்றன. ஆனால், புக்கிங்குகள் நாட்டின் 74வது குடியரசு தினத்திலேயே தொடங்கியது. இது நாட்டிற்கும், நாட்டின் தயாரிப்பிற்கும் பெருமிதம் சேர்க்கும் வகையில் அமைந்தது. எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் காருக்கு அறிமுக விலையாக ரூ. 15.99 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஆரம்ப நிலை வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே இது ஆகும். அதேவேளையில், இதன் உயர்நிலை தேர்வு ரூ. 18.99 லட்சத்திற்கு விற்பனைக்குக் கிடைக்கும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இத்தகைய ஓர் விலைக் கொண்ட எலெக்ட்ரிக் கார் மாடலையே டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கோடி ரூபாய் கொடுத்து வாங்க முன் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. "என்ன சொல்றீங்க 16 லட்சம் தொடங்கி 19 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் விற்பனைக்கு வந்திருக்கும் எலெக்ட்ரிக் காரையே கோடி ரூபாய் கொடுத்து முன் வந்திருக்காரு" அப்படினு யோசிக்கிறீங்களா?..

தொழிலதிபர் வாங்க முன் வந்திருப்பது வழக்கமான எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் கார் அல்ல என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். அது ஓர் ஸ்பெஷல் எடிசன் ஆகும். மஹிந்திரா நிறுவனம் ஒன் ஆஃப் ஒன் எனும் திட்டத்தில் இந்த காரை உருவாக்கி இருக்கின்றது. அதாவது, இந்த சிறப்பு பதிப்பில் ஒரே ஒரு எக்ஸ்யூவி 400 மாடலை மட்டுமே உருவாக்கி உள்ளது. இத்தகைய ஓற் வாகனத்தையே டெல்லியை சேர்ந்த நபர் கோடி ரூபாய் கொடுத்து வாங்க முன் வந்திருக்கின்றார்.
வழக்கமான எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக்கைக் காட்டிலும் பலமடங்கு அதிக சிறப்பு வசதிகளைக் கொண்டதாக இதனை மஹிந்திரா உருவாக்கி இருக்கின்றது. மேலும், இதுவே நிறுவனம் உருவாக்கிய முதல் எக்ஸ்யூவி 400 இ-காரும் ஆகும். இதன் உருவாக்கம் மற்றும் அலங்கரிப்புப் பணிகளை பிரத்யேகமாக மஹிந்திரா நிறுவனத்தின் தலைமை வடிவமைப்பு அதிகாரியான பிரதாப் போஸ் மற்றும் பேஷன் டிசைனர் ரிம்சிம் தது ஆகியோர் இணைந்தே மேற்கொண்டனர்.

இவர்களின் கை வண்ணத்திலேயே பல மடங்கு சிறப்புமிக்க காராக தொழிலதிபர் வாங்க முன் வந்திருக்கும் கார் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த சிறப்பு பதிப்பை ஏலத்தின் வாயிலாக விற்க இருப்பதாகவும், ஏல பணிகள் நாட்டின் குடியரசு தினத்தின்போது தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி ஜனவரி 26 காலை 11 மணியளவில் ஏல பணிகள் நாட்டில் தொடங்கின. இது இம்மாதம் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த ஏலத்திலேயே பெரும் முதலாளிகள் மற்றும் தொழிலதிபர்கள் பங்கேற்று வருகின்றனர். ஆகையால், இப்போதே ஏல களம் பல மடங்கு சூடுபிடித்துக் காணப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே டெல்லியைச் சேர்ந்த எம்பி ராமகுமார் எனும் நபர் 1.13 கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏலம் முடிவுற இன்னும் சில நாட்கள் இருப்பதால் இந்த தொகை இன்னும் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.
ஏன் நாம் இந்த செய்தியைப் படித்துக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்திலேயே ஏலத் தொகை அதிகரித்திருக்க வாய்ப்புகள் உள்ளன. ஏலத்தில் பெற இருக்கும் இந்த பெரும் தொகையை மஹிந்திரா சஸ்டைனபிளிட்டி விருதை வென்றவர்களுக்கு பரிசாக வழங்க இருக்கின்றது, மஹிந்திரா நிறுவனம். இவர்கள் கிளீன் ஏர், கிளீன் எனெர்ஜி, கிரீன் மொபிலிட்டி மற்றும் கிளீன் வாட்டர் ஆகியவற்றிற்காக பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.
மேலும், ஏலத்தில் வெற்றி பெறும் நபருக்கு ஆனந்த் மஹிந்திரா கைகளினாலேயே ஸ்பெஷல் எடிசன் எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் கார் பரிசளிக்கப்பட இருக்கின்றது. வரும் பிப்ரவரி 10ம் தேதி இந்த நிகழ்வை நிகழ்த்த மஹிந்திரா நிறுவனம் திட்டம் போட்டு உள்ளது. இதுதவிர, ஏல வெற்றியாளருக்கு ஹைதராபாத்தில் வரும் 11 ஆம் தேதி நடைபெற இருக்கும் மின்சார வாகன ஃபைபா ஃபார்முலா இ சாம்பியன்ஷிப் போட்டியைக் காண்பதற்கான பாஸ்களும் வழங்கப்பட இருக்கின்றன.
காரின் உட்பகுதியை பிரத்யேக ஃபேப்ரிக்கை (துணியை)க் கொண்டு மஹிந்திரா நிறுவனம் அலங்கரித்து இருக்கின்றது. இருக்கை, ஹெட்ரெஸ்ட் மற்றும் கதவுகளின் சைடு பகுதி என பலவற்றில் மாறுபட்ட அழகான அந்த துணி அலங்கரிப்பைக் காணலாம். இந்த பிரத்யேக ஃபேப்ரிக்கை, பிரத்யேக செப்பு நிறத்தினாலான நூலைக் கொண்டு தைத்திருக்கின்றது. இது கூடுதல் சிறப்பான தோற்றத்தை அதற்கு வழங்கும் வகையில் உள்ளது. இத்துடன், இருக்கை உள்ளிட்ட பகுதிகளில் 'ரிம்ஜிம் தது எக்ஸ் போஸ் (Rimzim Dadu X Bose) என்று எழுத்துக்களும் இடம் பெற்றிருக்கும்.
இதுபோன்ற எக்கசக்க அலங்கரிப்பு பணிகளை மிகவும் தனித்துவமாக மஹிந்திரா நிறுவனம் ஸ்பெஷல் எடிசன் எக்ஸ்யூவி 400 காரில் மேற்கொண்டிருக்கின்றது. வெளிப்புறத்தில் பிரத்யேக வண்ண (ஸ்பெஷல் ப்ளூ நிற) அலங்காரம், செப்பு நிற அக்செண்டுகள் என பல சிறப்புகளை சேர்த்து உள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் கார் ஓர் ஃபுல் சார்ஜில் 456 கிமீ ரேஞ்ஜை தரும். இதற்காக 39.4 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும், 150 எச்பி மற்றும் 310 என்எம் டார்க்கை வெளியேற்றும் மின் மோட்டாரே எக்ஸ்யூவி 400 இவியில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









