பி.எம்.டபிள்யூ கார் சேல்ஸ் பிச்சிக்குது!! இந்தியர்கள் போட்டி போட்டு வாங்குறாங்க - எத்தனை கார்கள் விற்பனை?
இந்தியாவில் சொகுசு கார்கள் விற்பனையில் மெர்சிடிஸ் பென்ஸுக்கு அடுத்து 2வது இடம் வகிக்கும் பிஎம்டபிள்யூ இதுவரையில் இல்லாத உச்சத்தில் கடந்த 9 மாதங்களில் கார்கள் விற்பனையை பதிவு செய்துள்ளது. இதன்படி பார்க்கும்போது, ஒரு வருடத்தின் முதல் 9 மாதங்களில் இத்தனை பிஎம்டபிள்யூ கார்கள் எப்போதும் விற்பனையானது இல்லை.
இந்த 2023ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் (ஜனவரி - செப்டம்பர்) மொத்தம் 9,580 கார்களை பிஎம்டபிள்யூ நிறுவனம் விற்பனை செய்துள்ளது. சராசரியாக, ஒரு மாதத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான கார்களை பிஎம்டபிள்யூ விற்பனை செய்துள்ளது. அதேபோல், பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனத்தில் 6,778 மோட்டார்சைக்கிள்கள் விற்பனையாகி உள்ளன.

பிஎம்டபிள்யூ பைக்குகள் விற்பனை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் 26% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மோட்டார்ராட் மட்டுமின்றி, மினி பிராண்டும் பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கு கீழ் தான் செயல்படுகிறது. மினி பிராண்டில் இருந்து தனியாக 582 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10% அதிகமாகும்.
கடந்த 9 மாதங்களில் விற்கப்பட்ட 9,580 பிஎம்டபிள்யூ கார்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவை எலக்ட்ரிக் கார்கள் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 2023இன் முதல் 9 மாதங்களில் 9,580 கார்களை விற்பனை செய்துள்ள பிஎம்டபிள்யூ நிறுவனம், கடந்த 2022இல் முதல் 9 மாதங்களில் 8,998 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

இந்த வகையில் பார்க்கும்போது, பிஎம்டபிள்யூ கார்கள் விற்பனை ஆனது 10% உயர்ந்துள்ளது. பிஎம்டபிள்யூ பிராண்டில் இருந்து மிக சமீபத்தில் ஐ.எக்ஸ்1 இவி என்ற எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், முதல் நாளிலேயே நிர்ணயிக்கப்பட்ட அனைத்து ஐ.எக்ஸ்1 இவி கார்களும் விற்பனையாகி விட்டன. பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கு இந்த 2023 அமோகமான வருடம் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஏனெனில், இந்த ஆண்டில் முதல் 6 மாத விற்பனை எண்ணிக்கையும் கடந்த 2022ஐ விட அதிகமாக பதிவாகி இருந்தது. "கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை கடந்த ஆண்டில் பதிவு செய்தோம். அதனை தொடர்ந்து, 2023இல் சிறந்த அரையாண்டு மற்றும் சிறந்த ஜனவரி -செப்டம்பர் விற்பனைகளை பதிவு செய்துள்ளோம்" என பிஎம்டபிள்யூ க்ரூப் இந்தியா நிறுவனத்தின் தலைவர் விக்ரம் பாவா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

விலை குறைவான பிஎம்டபிள்யூ கார்களுக்கே தேவை அதிகமாக இருப்பதாக கூறும் விக்ரம் பாவா, அதேநேரம் விலை உயர்ந்த மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கும் தேவை நிலையான வேகத்தில் உயர்ந்து வருவதாகவும் கூறியுள்ளார். முக்கியமாக, முதல்முறையாக பிரீமியம் தரத்திலான காரை வாங்க விரும்புவோரை பிஎம்டபிள்யூ வரவேற்பதாகவும் விக்ரம் பாவா தெரிவித்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தங்களது கார்கள் விற்பனை வெகுவாக முன்னேற்றம் கண்டுவருவதாக மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் கூற சமீபத்தில் தான் கேட்டிருந்தோம். மெர்சிடிஸை தொடர்ந்து, தற்போது பிஎம்டபிள்யூ நிறுவனமும் தங்களது விற்பனை வளர்ச்சியை கண்டு வருவதாக கூறியுள்ளது. ஆக மொத்தத்தில் இந்தியாவில், சொகுசு கார்களை வாங்க கூட்டம் பெருகி வருகிறது என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.


Click it and Unblock the Notifications









