என்னங்க இறக்கி வச்ச பிரியாணி டபரா காலியா போச்சுன்ற மாதிரி சொல்றாங்க.. இந்த காருக்கு இவ்ளோ டிமாண்டா!!
ஃபேமஸான பிரியாணி கடைகளில் டபராவை இறக்கி வச்ச உடனேயே கூட்டம் அலை மோதிக் கொண்டு பிரியாணியை வாங்கியே அந்த டபராவை காலி செஞ்சிருவாங்க. இந்த பிரியாணி டபராவை போலவே பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஓர் கார் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட சில மணி நேரங்களிலேயே விற்று தீர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
பிஎம்டபிள்யூ நிறுவனம் சமீபத்தில் ஐஎக்ஸ்1 எனும் புத்தம் புதிய கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது ஓர் எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் காராகும். செப்டம்பர் 28 ஆம் தேதி அன்றே இந்த காரை நாட்டில் அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வந்தது.

இந்த நிலையிலேயே, இப்போதே எலெக்ட்ரிக் கார் விற்பனைக்குக் கிடைக்காது என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு காரணமாக அந்த கார் மாடல் அனைத்தும் முழுவதுமாக விற்று தீர்ந்துவிட்டதாக அந்நிறுவனம் காரணம் தெரிவித்து இருக்கின்றது. அதுவும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட சில மணி நேரங்களிலேயே எலெக்ட்ரிக் கார் முழுவதுமாக விற்றுவிட்டதாகவும் ஆச்சரியளிக்கும் தகவலை நிறுவனம் வெளியிட்டு இருக்கின்றது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த ஆண்டிற்கு என குறிப்பிட்ட சில யூனிட்டுகளை மட்டுமே இந்தியாவிற்காக ஒதுக்கி வைத்திருந்தது. இவை அனைத்தும்தான் தற்போது விற்று தீர்ந்திருக்கின்றன. எனவே, அடுத்த ஆண்டிலேயே இந்த கார் மீண்டும் விற்பனைக்குக் கிடைக்கும். அதேவேளையில், ஐஎக்ஸ்1க்கு டிமாண்ட் அதிகரித்து இருப்பதால், விரைவில் கூடுதல் சில யூனிட்டுகள் விற்பனைக்குக் களமிறக்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் நிறுவனம் வெளியிடவில்லை. அதுமட்டுமில்லைங்க, இந்தியாவிற்காக எத்தனை யூனிட் ஐஎக்ஸ்1 எலெக்ட்ரிக் கார் மாடல்களை அது களமிறக்கியது என்கிற தகவலையும் அது வெளியிடவில்லை. ஆகையால், ஐஎக்ஸ்1 எலெக்ட்ரிக் காரின் விற்பனை பற்றிய விபரத்தை முழுவதுமாக எங்களால் அறிவிக்க முடியவில்லை.
இந்த காரை முழுவதுமாக கட்டியமைக்கப்பட்ட கார் மாடலாகவே வெளிநாட்டில் இருந்து விற்பனைக்குக் களமிறக்கியது. இருப்பினும், அதற்கு சற்று குறைவான விலையே அது நிர்ணயம் செய்தது. ரூ. 66.90 லட்சம் என்கிற விலையே அதற்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விலை மிக அதிகமானது என்று நீங்கள் உணரலாம்.
ஆனால், நிறுவனத்தின் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் மாடல் இதுவே ஆகும். இதனால்தான் இந்த கார் விற்பனைக்கு வந்த சில மணி நேரங்களிலேயே விற்று தீர்ந்திருக்குமோ என்கிற சந்தேகம் தற்போது எழும்பி இருக்கின்றது. இந்த அமோக வரவேற்பு, பிஎம்டபிள்யூ நிறுவனம் விரைவில் இந்த காரின் உற்பத்தியை உள்ளூரிலேயே தொடங்குவதற்கான சூழலை உருவாக்கி இருக்கின்றது.
பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்1 எலெக்ட்ரிக் காரில் ஓர் முழு சார்ஜில் 440 கிமீ தூரம் டிராவல் செய்ய முடியும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக 66.4 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இத்துடுன் ஐந்தாம் தலைமுறை இடிரைவ் தொழில்நுட்பம் கொண்ட மின்சார மோட்டாரே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இது ஓர் அனைத்து வீல் இயக்கம் கொண்ட மின்சார காராகவும் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. 308 பிஎச்பி மற்றும் 494 என்எம் டார்க்கை இந்த எலெக்ட்ரிக் கார் வெளியேற்றும். மேலும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 180 கிமீ ஆகும். இதுமட்டுமில்லைங்க, இந்த எலெக்ட்ரிக் கார் வெறும் 5.6 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் திறனையும் கொண்டிருக்கின்றது.
அதி வேகமாக ஓடும் திறனை மட்டுமே இந்த எலெக்ட்ரிக் கொண்டிருக்கவில்லை. அது அதிக வேகத்தில் சார்ஜாகும் திறனையும் கொண்டிருக்கின்றது. 130 kW டிசி ஃபாஸ்ட் சார்ஜர் வாயிலாக இந்த காரை சார்ஜ் செய்யும்போது வெறும் 20 நிமிடங்களிலேயே 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்துக் கொள்ள முடியும்.
அதேவேளையில், இந்த காரை 11 kW ஏசி சார்ஜர் பாயிண்ட் வாயிலாகவும் சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். இதைப் பயன்படுத்தும்பட்சத்தில் 6.3 மணி நேரத்திலேயே முழுமையாக சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். இதுபோன்ற பன்முக சிறப்பு திறன்களை பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்1 கொண்டிருப்பதாலேயே அதற்கு வரவேற்பு நாட்டில் அமோகமாக கிடைத்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார காருக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. குறிப்பாக, அதிக பிரீமியம் அம்சங்கள் கொண்ட எலெக்ட்ரிக் காருக்கு டிமாண்ட் அதிகமாக உள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்1 எலெக்ட்ரிக் காரின் விற்பனை அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








