மாற்றுத் திறனாளிகளும் இனி வாகனம் ஓட்டலாம்... புதிய சட்டத் திருத்தம் கொண்டு வந்த மத்திய அரசு!
இந்தியாவில் புதிதாக ஒரு வாகனம் வாங்கினால் அந்த வாகனத்தைப் பதிவு செய்வது கட்டாயம். வாகன உற்பத்தியாளர்கள் தங்கள் டீலர்கள் வாகனங்களை விற்கும் போது அதைப் பதிவு செய்து விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இதன்படி ஷோரூமிலிருந்து வெளியே வரும் அனைத்து வாகனங்களுக்கும் வாகனப் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான வாகனங்களுக்கான புதிய சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இந்தியாவில் மாற்றுத் திறனாளிகள் வாகனம் ஓட்ட அனுமதி கிடையாது. ஆனால் வாகனங்களில் ஒரு சில மாற்றம் செய்தால் மாற்றுத் திறனாளிகளால் வாகனம் ஓட்ட முடியும் என்றால் அவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுகிறது. ஆனால் அவர்கள் சாதாரண கார்களில் அவர்களுக்குத் தகுந்தார் போல சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் தான் அவர்களால் வாகனம் ஓட்ட முடியும்.

இந்நிலையில் தற்போது மாற்றுத் திறனாளிகள் தாங்கள் ஓட்டுவதற்கு வாகனம் வாங்க வேண்டும் என்றால் அதை அவர்கள் வாகனத்தைவாங்கி அதற்கான தற்காலிக பதிவு எண்ணை வாங்கும் முன்னரே தேவையான மாடிஃபிகேஷன்கள் செய்யப்பட வேண்டும் அதன் பின்னர் தான் வாகனம் மாற்றப்பட வேண்டும். ஆனால் இப்படிச் செய்வதில் கார் தயாரிப்பாளர்கள், அல்லது டீலர்களுக்கு அதிகமான சிக்கல்கள் இருக்கிறது.
இந்நிலையில் இந்த விதிமுறையில் மாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மோட்டார் வாகன சட்டம் 53 ஏ மற்றும் 53பி ஆகியவற்றில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 53ஏவில் முழுமையாகத் தயாரிக்கப்பட்ட ஒரு வாகனத்தை கஸ்டமைஸ்டு வாகனமாக மாற்ற முடியும் என்ற விதியையும், 53பியின்படி தற்காலிக நம்பர் பிளேட் வாங்கப்பட்ட பின்பு ஒரு வாகனத்தை கஸ்டமைஸ் செய்து முறையாகப் பதிவு செய்ய 45 நாட்கள் அவகாசம் வழங்கியும் மாற்றப்பட்டுள்ளது.
அதனால் இனி மாற்றுத் திறனாளிகள் கஸ்டமைஸ் செய்யப்பட்ட வாகனத்தை வாங்க விரும்பினால் அவர்கள் ஒரு வாகனத்தைச் சொந்தமாக வாங்கி அதைத் தற்காலிகமாகப் பதிவு செய்து அடுத்த 45 நாட்களுக்குள் அந்த வாகனத்தை கஸ்டமைஸ் செய்து அதைப் பதிவு செய்து கொள்ள முடியும். இந்த விதிமுறை மாற்றுத் திறனாளிக்கு வாகனம் ஓட்டுவதில் மிக முக்கியமான வரப்பிரசாதமாகப் பார்க்கப்படுகிறது.
தற்போது வரை சில கார் தயாரிப்பாளர்கள் பதிவிற்கு முன்பே வாகனத்தை கஸ்டமைஸ் செய்து மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்குவதில் இருக்கும் சிக்கல் காரணமாக அதைத் தவிர்த்து வந்தனர் இனி வாகனத்தை கஸ்டமைஸ் செய்ய வாகன தயாரிப்பு நிறுவனத்தை நம்பியிருக்க வேண்டிய அவசியம் இல்லை ஆஃப்டர் மார்கெட்டில் கூட மாற்றுத் திறனாளிகள் தேவையான மாற்றங்களைச் செய்து பதிவு செய்து கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








