டாடா, மஹிந்திராவுக்கு ஆப்பு! டெஸ்லா எலெக்ட்ரிக் காரை இந்தியா கொண்டு வர கதவை திறக்க மத்திய அரசு திட்டம்!
மத்திய அரசு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான இறக்குமதி வரியை குறைக்க ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் தற்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 70%-100% இறக்குமதி வரி விதிக்கிறது. இது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் பொருந்தும். அதாவது வெளிநாட்டில் ரூபாய் 10 லட்சம் கொடுத்து ஒரு காரை வாங்கினால், அந்த காரை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்ய வரியாக மட்டும் இன்னொரு 10 லட்சம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை தற்போது இருக்கிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் கார்களின் விலை இரண்டு மடங்காக இருக்கிறது.

இந்தியா இந்த இறக்குமதி வரிக் கொள்கையை இந்தியாவிலேயே கார்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்கவும், இந்தியாவின் பொருளாதாரத்தை வளர்க்கவும் இப்படியான ஒரு வரி விதிப்பை அரசு செய்து வருகிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசு மிகவும் தெளிவாக இருக்கிறது.
உள்ளூர் தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே சலுகை எனவும் வெளிநாடுகளில் இருந்து தயாரிக்கப்பட்டு இந்தியாவிற்குள் விற்பனை செய்யப்படும் வாகனங்களுக்கு அதிக வரி என்ற கொள்கையை பின்பற்றி வருகிறது. இருந்தாலும் இந்தியா போன்ற நாடுகள் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை வேகமாக விற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

இந்தியாவில் மாசு அதிகமாக வெளியேறுவதால் அதை கட்டுப்படுத்த தற்போது எலெக்ட்ரிக் வாகனம் தான் மிகப்பெரிய உறுதுணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களின் தயாரிப்பு மிக குறைவாக இருக்கிறது. இது எலெக்ட்ரிக் கார்களை எவ்வளவு வேகமாக மக்கள் வாங்க வேண்டுமோ அந்த அளவுக்கு தயாரிப்பு எண்ணிக்கை இல்லை.
இந்நிலையில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை அதிகரிக்க மத்திய அரசு இந்த இறக்குமதி வரி விதிப்பில் சில சமரசங்களை செய்து கொள்ள ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வெளிநாடுகளில் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் அந்நாட்டில் தயாரிக்கப்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவிற்கு கொண்டு வந்து விற்பனை செய்யும் போது அவர்களுக்கு குறைவான இறக்குமதி விதிக்கலாம் என திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.

ஆனால் இவ்வாறாக விதிக்கப்படும் குறைவான இறக்குமதி வரி குறிப்பிட்ட நிபந்தனையின் கீழ் தான் விதிக்கப்பட வேண்டும் என மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது. இதன்படி வெளிநாடுகளில் கார்களை தயாரித்து இந்தியாவிற்குள் குறைவான வரியில் இறக்குமதி செய்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பின் இந்தியாவில் ஆலைகள் அமைத்து வாகனங்களை தயாரிக்கும் உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த புதிய வரிக் கொள்கையின் மூலம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் டெஸ்லா போன்ற மிகப்பெரிய கார் நிறுவனங்கள் சுலபமாக தங்கள் கார்களை இறக்குமதி செய்து விற்பனை செய்ய முடியும். இந்தியாவில் டெஸ்லாவின் கார்கள் அதிகம் விற்பனையானால் அந்நிறுவனம் இந்தியாவிலேயே புதிய ஆலைகளை அமைத்து கார்களை உற்பத்தி செய்து இந்தியாவில் விற்பனை செய்வது மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யும் பணியை மேற்கொள்ளும்.
இந்தியாவில் தற்போது இறக்குமதி வரி என்பது 40,000 அமெரிக்க டாலர் என்ற விலைக்கு அதிகமான கார்களுக்கு 100% அதைவிட குறைவான விலையில் உள்ள கார்களுக்கு 70% விதிக்கப்படுகிறது. வெளிநாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் தான் அதிகமான வரி விதிக்கப்படுகிறது. அமெரிக்காவில் வெறும் 2.5% ஆஸ்திரேலியாவில் 5% கனடாவில் 6.1% பிரான்ஸில் 10% இருக்கிறது. சவுதி அரேபியாவில் 15% சீனாவில் 23% பிரேசில் நாட்டில் 35% என வரி விதிப்பு கொள்கை இருக்கிறது.
மத்திய அரசின் தற்போதைய எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான வரி விதிப்பு கொள்கையை சமரசம் செய்து குறைத்தால் அது சர்வதேச அளவில் உள்ள டெஸ்லா, ஆடி, பிஎம்டபிள்யூ ஆகிய நிறுவனங்களுக்கு வசதியாக இருக்கும். இதில் ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் ஏற்கனவே எலெக்ட்ரிக் கார்களை இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகின்றன. அந்த கார்களின் விலை குறையும்.
அதே நேரம் டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா போன்ற நிறுவனங்களுக்கு இது ஒரு பிரச்சினையாக அமையும். இந்நிறுவனம் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய இதுவரை பல கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. இந்நிறுவனத்தின் கார்களுக்கு போட்டியாக டெஸ்லா உள்ளிட்ட கார்கள் விற்பனையானால் இந்நிறுவனத்தின் லாபம் குறையும். இதனால் இந்நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன பிரிவை வெளிநாட்டிற்கு மாற்றவும் வாய்ப்பு உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா ஆட்டோமொபைல் உலகில் ஒரு அசைக்க முடியாத அளவில் வளர்ச்சியை பெற்று வருகிறது. இந்தியா போன்ற நாடுகளில் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து விற்பனை செய்ய அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் கார்களை இறக்குமதி செய்தால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இதை கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த புதிய வரி விதித்துக் கொள்கையை மீண்டும் பரிசீலிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









