Chennai-Kovai Vande Bharat Train டிக்கெட்கள் 3 மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தது! விலை என்ன தெரியுமா?
இந்திய ரயில்வே நிர்வாகம் நாட்டில் வந்தேபாரத் ரயில்களின் பயன்பாட்டை அதிகரிக்க நாட்டின் முக்கியமான நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இப்படியாக இந்தியாவின் 13வது வந்தே பாரத் ரயிலாக சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி பிரதமர் மோடி இந்த ரயில் சேவையை நாளை (ஏப்ரல் 9ம் தேதி) பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இத்துடன் சேர்த்து சென்னை விமான நிலைய புதிய முனையத்தையும் திறந்து வைக்கிறார். சென்னை-கோவையிடையே வந்தேபாரத் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து விரிவாகக் காணலாம்.

சென்னை-கோவையிடையே தற்போது உள்ள ரயில் பயண நேரமாக 7 மணி நேரம் 35 நிமிடத்தை இந்த வந்தே பாரத் ரயில் 5 மணி நேரம் 50 நிமிடமாகக் குறைத்து விடுகிறது. புதன் கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் இந்த ரயில் கோவையிலிருந்து சரியாக காலை 6 மணிக்கு கிளம்புகிறது.
இந்த ரயில் சரியாக 11.50க்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைகிறது. அதன்பின்னர் மதியம் சரியாக 2.25 மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பி இரவு 8.15 மணிக்குக் கோவையை வந்தடைகிறது. இந்த ரயிலில் மொத்தம் 350 ஏசி சேர் கார் சீட்களும், 35 எக்ஸிக்யூட்டிவ் கிளாஸ் சீட்களும் உள்ளன.

இந்த ரயிலில் சென்னையிலிருந்து கோவைக்குப் பயணம் செய்ய ஏசி சேர் காரில் ரூ1365 ஒரு நபருக்கான டிக்கெட் விலை எனவும், எக்ஸிக்யூட்டிவ் சேர் காரில் ரூ2465 ஒரு நபருக்கான டிக்கெட் விலை எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுவே கோவையிலிருந்து சென்னைக்குப் பயணிக்க ஏசி சேர் காரில் ஒரு நபருக்கு ரூ1215 கட்டணமாகவும், எக்ஸிக்யூட்டிவ் சேர் காரில் ஒரு நபருக்கு ரூ2310 கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவு கடந்த வெள்ளிக்கிழமையே துவங்கிவிட்டது.
இந்த ரயிலுக்கான முன்பதிவு துவங்கப்பட்ட 3 மணி நேரத்திலேயே முதல் நாளுக்கான மொத்த டிக்கெட்டும் விற்றுத் தீர்ந்தது. இந்த ரயில் மொத்தம் திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும். இதில் திருப்பூரிலிருந்து சென்னை வர ரூ1130 டிக்கெட் விலையாகவும், ஈரோட்டிலிருந்து ரூ 1055 டிக்கெட் விலையாகவும், சேலத்திலிருந்த ரூ970 ஆகவும் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ரயிலுக்காகக் கோவை - பெங்களூரு டபுள் டக்கர் ரயில், கோவை - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில், கோவை - சென்னை இன்டர்சிட்டி, ஆகிய ரயில்களின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சென்னை-கோவை வந்தே பாரத் ரயிலைத் துவக்கி வைப்பதற்காகப் பிரதமர் மோடி நாளை சென்னை வருகிறார்.
சென்னை விமான நிலையம் வரும் அவர் அங்கு முதலில் புதிய முனையத்தை திறந்துவைத்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக அடையாறு வருகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாகச் சென்னை சென்ட்ரல் வருகிறார். அங்கு இந்த வந்தே பாரத் ரயிலை பச்சை கொடியசைத்துத் துவக்கி வைக்கிறார். இந்த ரயில் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








