Citroen Mid-size SUV விரைவில் லான்ச் ஆக போகுது... ஹூண்டாய் க்ரெட்டா நிலைமை என்ன ஆக போகுதோ!
இந்திய சந்தையில் தற்போது மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரகத்தை சேர்ந்த கார்களுக்கு வாடிக்கையாளர்கள் அமோகமான வரவேற்பை வழங்கி வருகின்றனர். எனவே அனைத்து நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு இந்த செக்மெண்ட்டில் பல்வேறு புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து கொண்டுள்ளன.
ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) போன்ற கார்கள் ஏற்கனவே இந்த செக்மெண்ட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

இந்த சூழலில், மேற்கண்ட கார்களுக்கு எல்லாம் போட்டியாக இந்திய சந்தையில் புதிய மிட்-சைஸ் எஸ்யூவி கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள தகவலை சிட்ரோன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. இது முழுக்க முழுக்க இந்தியாவிலேயே டிசைன் செய்யப்படவுள்ள கார் ஆகும்.
இந்த கார் வரும் ஏப்ரல் 27ம் தேதி அதிகாரப்பூர்வமாக பொது பார்வைக்கு கொண்டு வரப்படவுள்ளது. இதை தொடர்ந்து நடப்பு 2023ம் ஆண்டின் பண்டிகை காலத்தில், இந்த கார் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிட்ரோன் நிறுவனம் நடப்பாண்டில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள 2வது கார் இதுவாகும். இதற்கு முன்னதாக சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் (Citroen eC3 EV), கடந்த பிப்ரவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
சிட்ரோன் நிறுவனம் தனது புதிய மிட்-சைஸ் எஸ்யூவி காரை தற்போது இந்திய சாலைகளில் சோதனை செய்து வருகிறது. டிசைனை பொறுத்தவரையில், ஸ்பிளிட் ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில்லைட்கள், சுறா துடுப்பு ஆன்டெனா மற்றும் அலாய் வீல்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த காரில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
செயல்திறனை பொறுத்தவரையில் இந்த காரில், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. சிட்ரோன் நிறுவனத்தின் சிஎம்பி (CMP) பிளாட்பார்ம் அடிப்படையில், இந்த புதிய மிட்-சைஸ் எஸ்யூவி கார் கட்டமைக்கப்படவுள்ளது. அதேபோல் பல்வேறு வசதிகளையும் இந்த கார் பெற்றிருக்கும்.
இதன்படி டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், தட்டையான அடிப்பாகம் கொண்ட 3 ஸ்போக் ஸ்டியரிங் வீல், ட்யூயல் டோன் அப்ஹோல்ட்ரி என பல்வேறு வசதிகள் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓரளவிற்கு குறைவான விலையில் (Price) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுவதால், இந்த கார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








