10 வருட போராட்டாத்திற்கு கிடைத்த வெற்றி... நீதிமன்றம் வரை சென்று ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தை அலறவிட்ட சென்னைவாசி!
ஒரு காரை கார்க்கும் விற்கும்போது, தேன் இனிப்பதை போல் பேசும் வாகன விற்பனையாளர்கள், அந்த காரில் ஏதேனும் சிக்கல் அல்லது பழுது இருப்பது கண்டறியப்பட்டு, அதை சரி செய்யும்படி கேட்டு வந்தால், அப்போதுதான் அவர்களின் உண்மையான முகம் தெரியும். இதற்கு முன் பார்த்திராத ஓர் முகத்தை அவர்கள் அப்போதே காட்டுவார்கள்.
இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால், வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் வில்லன்களாகவே மாறிவிடுகின்றனர். இந்தமாதிரியான ஓர் சூழ்நிலையையே சென்னையைச் சேர்ந்த ஓர் நபர் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தால் சந்தித்து இருக்கின்றார். சென்னை மவுண்ட் ரோடைச் சேர்ந்தவர் தேவராயன் சுப்பு. இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி அன்று ஃபோக்ஸ்வேகன் வென்டோ (Volkswagen Vento) காரை வாங்கி இருக்கின்றார்.

ஃபோக்ஸ்வேகன் மவுண்ட்ரோடு டீலர் வாயிலாகவே அவர் இந்த காரை வாங்கி இருக்கின்றார். வாங்கிய ஒரு மாத காலம் வரை இந்த கார் நல்ல நிலையில் இயங்கியதாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையில் முதல் சர்வீஸுக்காக அதிகாரப்பூர்வ ஃபோக்ஸ்வேகன் சர்வீஸ் மையத்தில் வென்டோ விடப்பட்டிருக்கின்றது.
சர்வீஸுக்கு சென்ற வென்டோ திரும்பி வந்த பின்னர் அதில் ஏதோ சிக்கல் ஏற்பட்டிருப்பதை தேவாரயன் உணர்ந்திருக்கின்றார். முன்பு இருந்ததைபோல் அது இருக்கவில்லை என்பதால் அதுகுறித்து சர்வீஸ் மையத்திலும் அவர் தெரிவித்திருக்கின்றார். அதிகப்படியான எஞ்ஜின் அதிர்வை அவர் உணர்ந்த காரணத்தினாலும், ஒவ்வொரு நாளும் அந்த காருடன் பொழுதை தள்ளுவது என்பது மிகுந்த சிரமமானதாக இருந்த காரணத்தினாலும் அவர் அடிக்கடி சர்வீஸ் சென்டருக்கு சென்று வந்த வண்ணம் இருந்திருக்கின்றார்.

கார் வாங்கப்பட்ட இரண்டு மாதங்களிலேயே அதிக சிக்கல் ஏற்பட்டதனால், டீலரை நாடி இந்த விஷயத்தில் உடனடி தீர்வு எட்ட வேண்டும் என நியாயமான முறையில் அவர் கோரிக்கை விடுத்திருக்கின்றார். ஆனால், பிற நிறுவனங்களைப் போலவே இந்த நிறுவனமும் வாடிக்கையாளரை (தேவராயனை) அலைக்கழித்து, அலட்சியம் காட்டி இருக்கின்றது.
எஞ்ஜினின் சிலிண்டரில் சிக்கல் இருப்பதாக கூறி, அதை சரிய செய்ய சில நாட்கள் ஆகும் என சர்வீஸ் மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. ஆனால், இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் கார் சரி செய்யப்படவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிய தேவராயன், தனது புத்தம் புதிய ஃபோக்ஸ்வேகன் வென்டோ பழுதடைந்திருப்பது குறித்தும், அதை சரி செய்யப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்படுவது குறித்தும் மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் ஓர் மனுவை சமர்பித்தார்.

இந்த மனுவிற்கு எதிராக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தரப்பில் பதில் மனு சமர்பிக்கப்பட்டது. வென்டோ ஓர் நிறுவனத்தின் பெயரில் வாங்கப்பட்டதாகவும், மனுதாரருக்கு இதுகுறித்து புகார் அளிக்க எந்த உரிமையும் இல்லை என மிக மோசமாக வாதிட்டது. நிறுவனத்தின் இந்த வாதத்தை ஏற்க மறுத்த நுகர்வோர் மன்றம், பாதிக்கப்பட்டவருக்கான நீதியை பெற்று தரும் விதமான கருத்துகளை முன் வைத்தது.
பழுதான காரை வாடிக்கையாளருக்கு விற்பனைச் செய்த காரணத்திற்காக அந்நிறுவனத்திற்கு அபராதம் வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆமாங்க, கடந்த 10 ஆண்டுகளுக்கும் அதிகமாக நடைபெற்று வந்த இந்த சட்ட போராட்டம் தற்போது தீர்ப்பை பெற்றிருக்கின்றது. பழுதான ஃபோக்ஸ்வேகன் வென்டோ காரை விற்பனைச் செய்தவர்களுக்கு கடுமையான அபராதங்கள் விதிக்கப்பட்டு இருக்கின்றது.

காருக்காக ரூ. 7.23 லட்சமும், இழப்பீடாக ரூ. 2.2 லட்சமும் வழங்கவும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. திருவாரூர் மாவட்ட நுகர்வோர் மன்றமே இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்தது. எஸ்ஜே சக்கரவர்த்தி, என் லக்ஷ்மணன் மற்றும் சி பக்கிலக்ஷ்மி ஆகியோர் அடங்கிய அமர்வே இந்த இந்த உத்தரவை பிறப்பித்தவர்கள் ஆவார்கள்.
பழுதான வாகனங்களை விற்பனைச் செய்ததற்காக ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும், பிற வாகன உற்பத்தியாளர்களும் கண்டிக்கப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகவும் இதுமாதிரியான சம்பவங்கள் நம்முடைய மாநிலத்திலும், நாட்டிலும் அரங்கேறி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. அண்மையில் இதேமாதிரியான சட்ட போராட்டத்தை செய்து சரவணா ஸ்டோர் உரிமையாளர் ஆடி நிறுவனத்தை அதிர விட்டார் என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









