100சதவீதம் எத்தனாலில் ஓடும் இன்னோவா கார் நாளை வெளியீடு.. இதோட வருகையை ஏன் ஒட்டுமொத்த நாடும் எதிர்பாக்குது?
இந்தியர்கள் பலரின் விருப்பமான கார் மாடலாக டொயோட்டா இன்னவோ (Toyota Innova) இருக்கின்றது. இந்த கார் மாடலின் எத்தனால் (Ethanol) வெர்ஷனே நாளை அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த காரை யார் அறிமுகம் செய்ய இருக்கின்றார்?, இதன் சிறப்புகள் என்ன? இந்த காரின் வருகையை ஒட்டுமொத்த வாகன உலகமும் எதிர்பார்ப்பாதற்கான காரணம் என்ன? இதுபோன்ற அனைத்து முக்கிய விபரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியர்கள் பிரியமான கார் மாடல்களில் ஒன்றாக டொயோட்டா இன்னோவா (Toyota Innova) இருக்கின்றது. இது ஓர் எம்பிவி ரக காராகும். அதிக குடும்ப உறுப்பினர்களைக் கொண்டவர்கள் மத்தியில் இந்த காருக்கு அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. சொகுசு ரைடு அனுபவத்தை, மிகுந்த தாராளமான இட வசதியுடன் வழங்கும் காராக இன்னோவா இருப்பதனாலேயே அந்த காருக்கு வரவேற்பு மிக சூப்பராக இருக்கின்றது.

இந்த கார் இப்போது டீசல், பெட்ரோல் மற்றும் பெட்ரோல்+ஹைபிரிட் ஆகிய மோட்டார் தேர்வுகளில் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இந்த கார் மாடலின் எத்தனால் வெர்ஷனையும் டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது, டொயோட்டா. நாளைய (ஆகஸ்டு 29) தினமே இந்த நிகழ்வு அரங்கேற இருக்கின்றது.
அதாவது, 100 சதவீதம் எத்தனாலில் இயங்கும் வசதிக் கொண்ட இன்னோவா காரை டொயோட்டா நாளை வெளியீடு செய்ய இருக்கின்றது. இ20 ரக பெட்ரோலில் (20 சதவீதம் எத்தனால் மற்றும் 80 சதவீதம் பெட்ரோல் கலக்கப்பட்ட எரிபொருளில்) இயங்கும் வாகனங்கள் விற்பனைக்கு வந்துவிட்ட நிலையில், அடுத்து இ100 ரக (முழுமையாக எத்தனாலில் மட்டும் இயங்கும்) வாகனங்களும் விரைவில் விற்பனைக்கு வரும் என்பது இதன் வாயிலாக உறுதியாகி இருக்கின்றது.

இந்த வாகனத்தை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி-யே நாளை வெளியீடு செய்ய இருக்கின்றார். இதுவே உலகின் முதல் பிஎஸ்VI (ஸ்டேஜ் 2) முழுமையாக எத்தனாலில் இயங்கும் கார் மாடலாகும். கச்சா எண்ணெய் (பெட்ரோல், டீசல்) இறக்குமதிக்காக பெரும் தொகையை அரசு செலவழிக்க வேண்டியிருக்கின்றது.
இதில் இருந்து நாட்டை விடுவிக்கும் முயற்சியிலேயே மத்திய அரசு ஈடுபட்டு வருகின்றது. இதன் அடிப்படையிலேயே மின்சார வாகனம், ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் வாகனம் மற்றும் இயற்கை எரிவாயுவில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அரசு ஊக்குவித்து வருகின்றது. இந்த நிலையிலேயே 100 சதவீதம் எத்தனாலின் வாகனங்களை புரமோட் செய்யும் பணியிலும் அரசு களமிறங்கி இருக்கின்றது.

இதன் அடிப்படையிலேயே நாளைய அறிமுக விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கலந்துக் கொள்ள இருக்கின்றார். கடந்த ஆண்டும் இதேபோல் ஓர் புதுமையான வாகனத்தை டொயோட்டா வெளியீடு செய்தது. அந்த காரின் அறிமுக நிகழ்விலும் நிதின் கட்கரி கலந்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
அது ஹைட்ரஜன் ஃப்யூவலில் இயங்கக் கூடிய மிராய் காரையே வெளியீடு செய்தது. ஹைட்ரஜன் ஃப்யூவலில் இயங்கக் கூடிய இந்த காரானது துளி அளவும் மாசை வெளிப்படுத்தாது என்பது குறிப்பிடத்தகுந்தது. இன்னம் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் டொயோட்டா மிராய் அதன் எக்சாஸ்ட் வாயிலாக நீராவியையே வெளியேற்றும்.
இது சுற்றுச் சூழலுக்கு எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது. இந்த வாகனத்தை கடந்த ஆண்டு அறிமுகம் செய்த நிலையில் அடுத்ததாக 100 சதவீதம் எத்தனாலில் ஓடும் வாகனத்தை அறிமுகம் செய்யும் பணியில் டொயோட்டா களமிறங்கி இருக்கின்றது. ஆனால், இவை எப்போது விற்பனைக்கு வரும் என்கிற தகவல் இப்போது வரை வெளியிடப்படவில்லை. வெகு விரைவில் இதுகுறித்த தகவலை டொயோட்டா வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எத்தனால் என்பது விவசாய கழிவுகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எரிபொருள் ஆகும். உள்நாட்டிலேயே இதை தயாரித்துக் கொள்ளப்படும். ஆகையால், மிக மலிவு விலையில் எத்தனால் விற்பனைக்கு வருவதற்கான சூழல் உருவாகும். குறிப்பாக, பெட்ரோல் மற்றும் டீசலுக்கு ஆகக் கூடிய செலவைவிட இது பலமடங்கு குறைவாகவே இருக்கும். இதனால்தான் இதன் மீதான எதிர்பார்ப்பு நாட்டு மக்கள் மத்தியில் அதிகரித்துக் காட்சியளிக்கின்றது.


Click it and Unblock the Notifications









