ஒரு துளி பெட்ரோல் கூட தேவையில்ல!! மத்திய அமைச்சர் வெளியீடு செய்ய போகும் கார் - நாடே அதற்கு தான் வெயிட்டிங்!
டொயோட்டா இன்னோவா இ100 காரை மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி வருகிற ஆகஸ்ட் 29ஆம் தேதி வெளியீடு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய இன்னோவா காரை ஏன் மத்திய அமைச்சர் போன்ற உயர் பதவியில் இருப்பவர் வெளியீடு செய்ய வேண்டும்? இந்த இன்னோவா காரில் அப்படி என்ன இருக்க போகிறது? வாருங்கள் செய்திக்குள் போவோம்.
பெட்ரோல் & டீசல் வாகனங்களை குறைக்க வேண்டும் என்கிற கொள்கை உடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதன் வெளிப்பாடாகவே எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க அதிக ஆர்வத்தை காட்டுவதோடு, மானியங்களையும் மத்திய அரசு வழங்கி வருகிறது. எலக்ட்ரிக் வாகனங்கள் ஒருபுறம் இருக்க, அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு வாகனங்கள் மற்றும் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் மூலம் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டையும் அதிகரிக்க, முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் குறிப்பாக, எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலில் இயங்கும் வாகனங்களை அரசு வாகனங்களாக கூட பயன்படுத்த வேண்டும் என்கிற திட்டத்தில் மத்திய அரசு உள்ளது. இதன் ஒரு பகுதியாகவே, வருகிற ஆகஸ்ட் 29ஆம் தேதி டொயோட்டா இன்னோவா காரின் எலக்ட்ரிக் எத்தனால் வெர்சனை மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி வெளியீடு செய்ய உள்ளார்.
கடந்த 2023 ஜூன் 1ஆம் தேதி முதல் இந்தியாவில் பிஎஸ்6-இன் 2ஆம் கட்ட விதிமுறைகள் அமலுக்கு வந்தன. 2020 ஏப்ரலில் அமலுக்குவந்த முதல்கட்ட விதிமுறைகளுக்கு பின்னர் கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு பிறகு அமலுக்கு வந்துள்ள 2ஆம் கட்ட விதிமுறைகளின் மூலம் சில புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன. அதில் ஒன்று, நாட்டில் விற்பனை செய்யப்படும் எரிபொருள் என்ஜின் வாகனங்கள் அனைத்தும் 20% எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலை ஏற்க வேண்டும் என்பதாகும்.

அதாவது, அதற்கேற்ப வாகனங்களின் என்ஜின் ட்யூன் செய்யப்பட வேண்டும் என்பதாகும். இதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மூலப் பொருட்களின் தேவை குறையும் என்பது மத்திய அரசின் திட்டம். இதன்படி, ஒவ்வொரு வாகனங்களாக அப்டேட் செய்யப்பட்டு, கடந்த சில மாதங்களாக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகஸ்ட் 29ஆம் தேதி வெளியீடு செய்யவுள்ளது முற்றிலும் எத்தனால் மூலமாக இயங்கும் டொயோட்டா இன்னோவா இ100 காரை ஆகும்.
இதனால்தான் காரின் பெயருக்கு பின்னால் இ100 என குறிப்பிடப்பட்டுள்ளது. இ என்பது எத்தனாலையும், 100 என்பது 100 சதவீதத்தையும் குறிக்கிறது. நிதின் கட்கரியின் அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பிஎஸ்6 நிலை-2இல் 100% எத்தனாலை ஏற்கும் முதல் காராக டொயோட்டா இன்னோவா விளங்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அதேநேரம், அமைச்சர் நிதின் கட்கரி வெளியீடு செய்யும் இன்னோவா இ100 ஓர் மின்மயமாக்கப்பட்ட கார் என்பதையும் மறந்துவிட வேண்டாம்.

டொயோட்டா இன்னோவா இ100 காரின் அறிமுகம் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது, "ஆகஸ்ட் 29ஆம் தேதி, பிரபலமான இன்னோவா காரை 100% எத்தனாலில் நான் அறிமுகம் செய்ய உள்ளேன். சுயசார்பாக செயல்படும் நாடாக நாம் மாற வேண்டுமென்றால், எண்ணெய் இறக்குமதியை பூஜ்ஜியத்திற்கு கொண்டுவர வேண்டும். தற்சமயம் இது ரூ.16 லட்சம் கோடியாக உள்ளது. இது பொருளாதாரத்தில் மிக பெரிய இழப்பாக உள்ளது.
நாம் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளோம், ஆனால் இந்த முயற்சிகளை இன்னும் அதிகமாக எடுக்க வேண்டும், ஏனெனில் மாசு முக்கிய பிரச்சனையாக உள்ளது. சுற்றுச்சூழல் மிக முக்கியமானது. காற்று மற்றும் நீர் மாசுவை நாம் குறைத்தே ஆக வேண்டும். நமது ஆறுகளின் நீர் தரத்தை நாம் மேம்படுத்த வேண்டும். இது மிக பெரிய சவால். சுற்றுச்சூழலை நாம் பாதுகாக்க வேண்டும்" என்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மத்திய அமைச்சர் கூறுவது போல், உலகளவில் கச்சா எண்ணெய்யை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளுள் முதன்மையானதாக நம் இந்தியா விளங்குகிறது. இதனால், 100% எத்தனாலுக்கு மாற வேண்டியது அவசியமாகிறது. இந்த இலக்கை எட்டும் முனைப்பில் உள்ள மத்திய அரசு அதற்காக ஒவ்வொரு படியாக தாண்டி வருகிறது. இந்த வகையில், 2வது படியாக இ20 -இல் தற்சமயம் நாம் உள்ளோம்.


Click it and Unblock the Notifications









