அமெரிக்காவில் பேச்சுவார்த்தை நடந்தது என்னமோ டெஸ்லாவுக்காகதான்.. ஆனா ஜியோவுக்கு ஆப்பு உருவாகிருச்சு..
பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக அமெரிக்காவிற்கு பயணித்திருக்கின்றார். இந்த பயணத்தின்கீழ் முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் பாதுகாப்பு துறைக்கான ஒப்பந்தம் உள்ளிட்டவற்றை அவர் மேற்கொள்ள இருக்கின்றார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின்பேரில் இந்த அரசு முறை பயணம் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது.
அமெரிக்கா சென்ற அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அமெரிக்காவின் பெரும் பணக்காரரும், முன்னணி மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் சிஇஓ-வுமான எலன் மஸ்க்கை பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பு இந்தியாவிற்கு முதலீட்டை ஈர்க்கும் வகையில் நடைபெற்றதாகக் கூறப்படுகின்றது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக எலன் மஸ்க் சில தகவல்களை அமெரிக்க செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியுள்ளார். அவர் கூறியதாவது, "நான் பிரதமர் மோடியின் ரசிகன் ஆகிவிட்டேன். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். அவர் புதிய நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கு முழு ஆதரவை வழங்கி வருகின்றார். இது இந்தியாவுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்" என்றார்.
தொடர்ந்து பேசி அவர், "இந்தியாவின் எதிர்காலம் குறித்து நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இந்தியாவிற்கு விரைவில் வருகை தருவேன்" என்றார். ஆகையால், இந்தியாவில் விரைவில் டெஸ்லாவின் உற்பத்தி ஆலை அமைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் கால் தடம் பதிக்க டெஸ்லாவும் நீண்ட காலமாக முயற்சித்து வருகின்றது.
ஆனால், அது வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் தன்னுடைய எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனைக்கு வழங்கும் திட்டத்துடனேயே களமிறங்க பிளான் போட்டு இருக்கின்றது. ஆனால், இந்தியாவின் எதிர்பார்ப்போ, நம் நாட்டில் ஆலையை அமைத்து, இங்கிருந்து இந்தியாவிற்கும், உலக நாடுகளுக்கும் வாகனங்களை எடுத்து செல்ல வேண்டும் என்பதாகும்.
இதுதவிர, டெஸ்லா நிறுவனம் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு விதிக்கப்படும் அதிகப்படியான வரியை குறைக்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் நீண்ட காலமாக இந்திய அரசிடம் முன் வைத்து வருகின்றது. ஆனால், இதற்கும் எந்த விதமான இசைவும் இந்தியா வழங்கவில்லை. எனவே டெஸ்லாவின் இந்திய வருகை நீண்ட காலமாக வெறும் கனவாகவே இருக்கின்றது.
இந்த மாதிரியான சூழலிலேயே அமெரிக்கா பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி, டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க்கைச் சந்தித்து உரையாடி இருக்கின்றார். இவர்கள் இருவரும் இதுபோன்று சந்தித்துக் கொள்வது முதல் முறையல்ல இதற்கு முன்னதாகவும் இவர்கள் இருவரும் சந்தித்து உரையாற்றி இருக்கின்றனர்.
கடந்த 2015ஆம் ஆண்டிலேயே இந்த சந்திப்பு அரங்கேறியது என்பது குறிப்பிடத்தகுந்தது. எலன் மஸ்க் இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவையை கொண்டு வருவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நகரம் முதல் கிராமப்புற பகுதி வரை இந்த சேவை விரிவாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் அம்பானியின் ஜியோவிற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதேபோல், டெஸ்லாவின் இ-கார்கள் விற்பனைக்கு வரும் எனில் அது டாடாவின் மின்சார கார்களுக்கு கடும் போட்டியாக அமையும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டெஸ்லா மின்சார கார்களுக்கு எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. ஆனால், வரி குறைப்பிற்கு இந்திய அரசு ஒத்துழைக்காததனால் அதன் வருகை நீண்ட நாட்களாக தள்ளிப் போயிக் கொண்டிருக்கின்றது. சமீபத்தில்கூட இதுகுறித்து பேச்சுவார்த்த நடத்திட டெஸ்லாவின் முக்கிய அதிகாரிகள் இந்தியா வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








