4 மாசம் காத்திருந்தாதான் இந்த கியா கார் கைகளுக்கு கிடைக்குமா? 4மாசம் என்ன வருஷமே காத்திருக்க நிறைய பேரு தயார்!
கியா (Kia) நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடலாக செல்டோஸ் (Seltos) இருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி ரக காராகும். இந்த காரையே இந்தியாவில் கால் தடம் பதித்த பின்னர் தன்னுடைய முதல் தயாரிப்பாக கியா விற்பனைக்குக் கொண்டு வந்தது. நிறுவனத்திற்கு வலுவான சந்தையை இந்தியாவில் ஏற்படுத்திக் கொடுத்ததே இந்த கார் மாடல்தான் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இத்தகைய கார் மாடலை சிறப்பிக்கும் விதமாகவே கியா நிறுவனம் அதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை தற்போது இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வந்து இருக்கின்றது. இதன் முந்தைய வெர்ஷனுக்குக் கிடைத்ததைப் போலவே புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனுக்கும் இந்தியர்கள் மத்தியில் அமோகமான வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது.

இதை உறுதிப்படுத்தக் கூடிய ஓர் தகவலே தற்போது வெளியாகி உள்ளது. கியா செல்டோஸ் எஸ்யூவி-க்கு காத்திருப்பு காலம் 4 மாதங்களாக உயர்ந்திருப்பதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆமாங்க, புதிய செல்டோஸ் எஸ்யூவி காரை இப்போது புக் செய்தால், அதனைக் கைகளில் பெற சுமார் 4 மாதங்கள் ஆகும் என கூறப்படுகின்றது.
இந்த தகவல் சற்று ஷாக்களிக்கும் வகையில் இருந்தாலும், இந்த அளவிற்கு கியா செல்டோஸுக்கு வரவேற்பு கிடைச்சிட்டு இருக்கா என நினைக்கும் வகையிலேயே அது அமைந்திருக்கின்றது. அதிக சிறப்பு வசதிகள், தொழில்நுட்ப வசதிகள் மற்றும் லக்சூரி அம்சங்கள் என பலவற்றைத் தாங்கிய வாகனமாக புதிய கியா செல்டோஸ் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.

புதிய செல்டோஸ் எஸ்யூவி விற்பனைக்கு வருவதற்கு முன்னரே இந்தியாவில் அதற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையிலேயே ஜூலை 21 ஆம் தேதி அக்கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. இது கியா செல்டோஸின் வருகையை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்தது.
இந்த நிலையிலேயே, தீரா பசியுடன் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு அன்லிமிடெட் சாப்பாடு கிடைத்ததைப் போலவே செல்டோஸ் பிரியர்கள் அதன் புதிய வெர்ஷனை வெறிக் கொண்டு புக் செய்துக் கொண்டிருக்கின்றனர். பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான மோட்டார் தேர்வுகளிலும் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
மேலும், புதுப்பித்தலின் அடிப்படையில் பல்வேறு சூப்பரான அம்சங்கள் இந்த காரில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், பனோரமிக் சன்ரூஃப், புதிய பம்பர், பெரிய கிரில், மறு வடிவமைப்பு செய்யப்பட்ட ஹெட்லைட் பகல் நேரத்தில் ஒளிரும் டே டைம் லைட் ஆகியவை புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கின்றன.
10.25 அங்குல இணைப்பு வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஆகியவையும் புதிய செல்டோஸில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் சென்டர் கன்சோலிலும் லேசாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஏசி வெண்ட்டுகளை சற்று சிறியதாகவும், புதிதாக எச்விஏசி கன்ட்ரோல்களையும் இந்த காரில் கியா சேர்த்து இருக்கின்றது.
இதுதவிர, கூடுதலாக சாஃப்ட் டச் மெட்டீரியல்கள் கேபினின் பல்வேறு பகுதிகளில் கியா சேர்த்து இருக்கின்றது. இவற்றுடன், மிக முக்கியமான அம்சமாக அடாஸ் அம்சத்தை கியா வழங்கி இருக்கின்றது. இந்த நவீன தொழில்நுட்பத்தின் வாயிலாக அவசரகால ஆட்டோமேட்டிக் பிரேக்கிங், ஃபார்வார்டு கொலிசன் வார்னிங் அசிஸ்ட், லேன் கீப் அசிஸ்ட் என பல பாதுகாப்பு வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இதுதவிர, கூடுதல் பாதுகாப்பை வழங்கும் விதமாக ஆறு ஏர் பேக்குகள், இஎஸ்சி, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள், டிபிஎம்எஸ் மற்றும் மும்முனை சீட் பெல்ட் என எக்கசக்க அம்சங்கள் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கியா செல்டோஸ் கார் மாடலில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கியாவின் புதிய செல்டோஸ்க்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பு போட்டி நிறுவனங்களுக்கு பொறாமையை ஏற்படுத்தும் அமைந்திருக்கின்றது. இந்த காரும் விரைவில் விற்பனை மற்றும் உற்பத்தியில் புதிய சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கியா நிறுவனம் இந்த காரை எலெக்ட்ரிக் வெர்ஷனில் கொண்டு வந்தால், அதற்கும் அமோக வரவேற்பே கிடைக்கும். ஆனால், இதன் எலெர்க்ட்ரிக் வெர்ஷன் எப்போது வரும் என்கிற எந்தவொரு தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.


Click it and Unblock the Notifications









