இன்னும் எத்தன காலத்துக்கு ஹூண்டாய், டாடா, மாருதினே வாங்கிட்டு இருப்பீங்க.. நாங்க இந்தியா வரோம்!
அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம் இந்தியாவில் விரைவில் கால் தடம் பதிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது எந்த நிறுவனம்?, என்ன மாதிரியான காரை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஃபிஸ்கர்-ம் ஒன்று. இந்த நிறுவனம் டெஸ்லாவிற்கு போட்டி அளிக்கும் வகையில் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் டெஸ்லாவைப் போலவே மின்சார கார் உற்பத்தியை மட்டுமே முக்கிய தயாரிப்பாகக் கொண்டு அது இயங்கிக் கொண்டிருக்கின்றது.

இத்தகைய ஓர் நிறுவனமே வெகு விரைவில் இந்திய சந்தையில் கால் தடம் பதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒட்டுமொத்த நாடும் டெஸ்லாவின் எலெக்ட்ரிக் கார்களை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்ற சூழலில், அதன் போட்டி நிறுவனம் நம் நாட்டில் கால் தடம் பதிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது இந்திய மின்சார வாகன பிரியர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
நிறுவனம் முதன் முதலில் ஓர் முழு சார்ஜில் 500க்கும் அதிகமான கிமீ ரேஞ்ஜை தரக் கூடிய எலெக்ட்ரிக் காரையே விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு வரும்பட்சத்தில் தற்போது விற்பனையில் இருக்கும் அனைத்து எலெக்ட்ரிக் கார்களையும் தூக்கி சாப்பிடும் வகையில் அதன் வருகை அமையும்.

ஃபிஸ்கரின் புகழ்பெற்ற தயாரிப்பாக ஓசோன் இவி இருக்கின்றது. இதையே இந்தியாவிற்கான முதல் தயாரிப்பாக ஃபிஸ்கர் நாட்டின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இது இன்னும் ஓரிரு மாதங்களில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுவிடும் என்றும் கூறப்படுகின்றது. முதலில் இந்த கார் இந்த மாத இறுதிக்குள் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டது.
ஆனால், தற்போது செப்டம்பருக்குள் ஃபிஸ்கரின் இந்திய நுழைவு அரங்கேறிவிடும் என கூறப்படுகின்றது. முதல் கட்டமாக 100 யூனிட் ஓசோன் எலெக்ட்ரிக் காரையே நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொருத்தே அடுத்தடுத்த யூனிட்டுகளை அது விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது.

இதுதவிர, இந்தியாவிலேயே தன்னுடைய வாகன உற்பத்தியைத் தொடங்கும் திட்டத்திலும் ஃபிஸ்கர் நிறுவனம் இருக்கின்றது. ஆனால், இந்த பணிகள் எல்லாம் தொடங்க இன்னும் ஒரு சில ஆண்டுகள் ஆகிவிடும். ஃபிஸ்கர் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தியை தொடங்கும் எனில் அதன் தயாரிப்புகளை சற்று குறைவான விலையில் விற்பனைக்கு வழங்க முடியும்.
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு பல மடங்கு அதிகமாக வரி வசூல் செய்யப்படுவதால், இப்போது விற்பனைக்கு வர இருக்கும் முதல் 100 யூனிட் ஃபிஸ்கர் ஓசோன் இவி எலெக்ட்ரிக் சற்று அதிக விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 65 லட்சம் வரையில் இருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.

ஆனால், இது துள்ளியமான விலை விபரம் அல்ல. விற்பனைக்கு வரும்போதே அதன் விலை விபரம் உறுதியாக தெரிய வரும். ஃபிஸ்கர் ஓசோன் ஓர் எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் காராகும். இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 563 கிமீ வரை பயணிக்க முடியும்.
இத்தகைய அதிக ரேஞ்ஜ் தருவதற்காக இந்த காரில் மிகப் பெரிய பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, காரை சுலபமாக சார்ஜ் செய்துக் கொள்ள ஏதுவாக குறிப்பிட்ட சில தேர்வுகளில் சோலார் ஸ்கை எனும் ரூஃப் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த ரூஃப் சூரிய ஒளியில் இருந்து மின்சாரத்தைச் சேகரிக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதுதவிர, 17.1 அங்குல தொடுதிரை சிஸ்டம், டிஜிட்டல் ரியர் வியூவ் மிர்ரர், பவர் லிஃப்ட்கேட், ஃபிஸ்கர், பல்ஸ் ஆடியோ சிஸ்டம், ஸ்மார்ட் டிராக்சன், முன் மற்றும் பின் பக்கங்களில் ஹீட் வசதி கொண்ட இருக்கைகள் என ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஆகையால், இந்த கார் தொழிலதிபர்கள் மற்றும் லக்சூரி கார் பிரியர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த சூழலை தங்களுக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொள்ள சில நிறுவனங்கள் திட்டமிட்டு இருக்கின்றன. அதில், ஒன்றாக அமெரிக்காவைச் சேர்ந்த ஃபிஸ்கர் நிறுவனம் மாறி இருக்கின்றது. இதன் வருகையால் இந்தியாவின் மின்சார கார் பிரிவு கூடுதல் அழகானதாக மாற இருப்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









