ஒரே நேரத்துல 13பேர் பயணிக்கலாம்.. நம்ம வீடு,பக்கத்து வீடுனு பெரிய பட்டாளமே போகலாம்! ஆனா நமக்கு விற்க மாட்டாங்க
இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் (Force Motors)-ம் ஒன்றாகும். இந்த நிறுவனம் புதிய ட்ராக்ஸ் க்ரூஸர் ஜங்கிள் சஃபாரி (Force Trax Cruiser jungle safari SUV) எனும் எஸ்யூவி வாகன மாடலை இந்தியாவில் வெளியீடு செய்திருக்கின்றது.
இந்த வாகனத்தில் ஒரே நேரத்தில் 13 பேர் வரை பயணிக்க முடியும். ஆமாங்க, 13 பேர் அமர்ந்து பயணிக்கும் வகையில் ஆறு இருக்கை அமைப்பையே இந்த வாகனத்தில் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் வழங்கி இருக்கின்றது. ஆகையால், ஒரு குடும்பம் மட்டுமல்ல ரெண்டு - மூன்று குடும்பம்கூட மிக தாரளமாக அமர்ந்து இந்த வாகனத்தில் பயணிக்க முடியும்.

ஆனால், இந்த வாகனத்தை தனி நபர் பயன்பாட்டிற்கு ஃபோர்ஸ் மோட்டார்ஸ் விற்பனைக்கு வழங்காது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜங்கிள் சஃபாரிக்கு (வன விலங்கை காணச் செல்வதற்கு) என்றே பிரத்யேக வடிவமைக்கப்பட்ட வாகனம் இது ஆகும். ஆகையால், இந்த மாதிரியான சேவைக்கு மட்டுமே புதிய ட்ராக்ஸ் க்ரூஸர் விற்பனைக்கு வழங்கப்பட இருக்கின்றது.
ஜங்கிள் சஃபாரிக்காக இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டு இருந்தாலும், சிறப்பம்சங்களை இந்த வாகனத்தில் வழங்க அது தவரவில்லை. மிக முக்கியமாக சன்ரூஃப், பின்னிருக்கைகளுக்கு என தனி ஏசி வெண்டுகள் என ஏகப்பட்ட அம்சங்கள் அதில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இரண்டு சன்ரூஃப்கள் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

வழக்கமாக ஒரு சன்ரூஃபே ஓர் வாகனத்தில் வழங்கப்படும். ஆனால், புதிய ட்ராக்ஸ் க்ரூஸர் ஜங்கிள் சஃபாரி-யில் இரண்டு கொடுக்கப்பட்டு இருக்கின்றது. அது அதிக நீளம் கொண்ட வாகனம் என்பதால் இந்த கூடுதல் சிறப்பம்சம் சேர்ப்பை தாராளமாக ஏற்றிருக்கின்றது. 5.1 மீட்டர் நீளம் கொண்ட இந்த புதிய எஸ்யூவி ஆகும்.
இரண்டு சன்ரூஃப் வசதி கொடுக்கப்பட்டு இருப்பதால், காடுகளை விசிட் செய்யும்போது, பார்வையாளர்களால் தெளிவாக மேலே இருப்பவற்றையும் பார்த்து ரசிக்க முடியும். உதாரணமாக, ஜூராஸிக் படத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் கார்களைப் பார்த்திருக்கின்றீர்களா, அதைபோலவே காடுகளை தெளிவாகக் காண இந்த அம்சம் உதவியாக இருக்கும்.

மேலும், இந்த அம்சத்தை வேறு எந்த ஃபோர்ஸ் டிராக்ஸ் வாகனத்திலும் பார்க்க முடியாது. இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் அனைத்தும் லெதர் போர்த்தப்பட்ட இருக்கைகள் ஆகும். இதுதவிர பாதுகாப்பிற்காக ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. மிக முக்கியமாக வாகனத்தின் வெளிப்புறத்தில் புல் குவார்டு போன்ற அம்சங்கள்கூட வழங்கப்பட்டு இருக்கின்றன.
ஆனால், இந்த அம்சத்தை வழக்கமான சாலை பயன்பாட்டு வாகனங்களில் பயன்படுத்த முடியாது. இதேபோல், விண்ட்ஷீல்டு பாதுகாக்கும் விதமாகவும் ஓர் குவார்டு வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் கண்ணாடிகளை அவ்வளவு எளிதில் முடியாது. கொஞ்சம் ஸ்ட்ராங்கான கண்ணாடிகளே ஜன்னல், முன் மற்றும் பின் பக்கங்களில் தயாரிப்பு நிறுவனம் பயன்படுத்தி இருக்கின்றது.
இத்துடன், பயணிகள் தங்களின் செல்போன்களை சார்ஜ் செய்துக் கொள்ள ஏதுவாக சார்ஜிங் பாயிண்ட் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்பட்டு இருக்கின்றன. எஞ்சினைப் பொருத்தவரை ஃபோர்ஸ் ட்ராக்ஸ் க்ரூஸர் ஜங்கிள் சஃபாரி எடிசனில் 2.6 லிட்டர் டீசல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 91 எச்பி மற்றும் 250 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.
இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கின்றது. பாதுகாப்பான பிரேக்கிங்கிற்காக ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் எலெக்ட்ரானிக் பிரேக் ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூசன் ஆகிய அம்சங்களும் இந்த வாகனத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதே வசதிகளை ட்ராக்ஸ் க்ரூஸர் மற்றும் சிட்டிலைனிலும் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் வழங்கி இருக்கின்றது.
இதில், பயன்படுத்தப்பட்டு இருக்கும் மோட்டாரானது மெர்சிடிஸ் பென்ஸின் தயாரிப்பு ஆகும். இந்த வாகனத்தை ஆர்டரின் பேரில் மட்டுமே தயாரிக்க நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது. ஒரு யூனிட்டை ரூ. 20 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்பனைச் செய்ய அது திட்டமிட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிக இருக்கை வசதிக் கொண்ட வாகனங்களுக்கு சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், ஃபோர்ஸ் மோட்டார்ஸ் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கும் இந்த வாகனத்தை காடுகளைச் சுற்றி பார்க்கும் விதமாக அழைத்துச் செல்லும் துறைகளுக்கு மட்டுமே விற்பனைக்கு வழங்கப்படும் என நிறுவனம் அறிவித்து இருப்பது பலருக்கு வேதனையாக அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications









