505 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய ஃபோர்டு.. ஒரு கார் மாடல்கூட விற்பனையில் இல்ல அப்புறம் எப்படி இது சாத்தியம்!
ஒட்டுமொத்த வாகன உலகத்தையும் ஆச்சரியப்படச் செய்யும் வகையில் ஃபோர்டு(Ford) நிறுவனம் இந்தியாவில் வருமானத்தை ஈட்டி இருக்கின்றது. ஒரு யூனிட் காரைகூட விற்காத நிலையில் எப்படி அதனால் வருமானத்தை ஈட்ட முடிந்தது? வாங்க, முழு விபரத்தைப் பார்க்கலாம்.
உலகின் முன்னணி கார் பிராண்டுகளில் ஃபோர்டு (Ford)-ம் ஒன்றாகும். அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் சமீபத்திலேயே இந்தியாவில் மேற்கொண்டு வந்த தன்னுடைய அனைத்து செயல்பாட்டிற்கும் முற்றுப் புள்ளி வைத்தது. அதாவது, நாட்டை விட்டே வெளியேறியது. வர்த்தகம், வாகன உற்பத்தி என பலவற்றிற்கு அது முற்று புள்ளி வைத்திருக்கின்றது.

ஆகையால், நிறுவனத்தின் ஒரு கார் மாடல்கூட விற்பனையில் இல்லாத நிலையே தற்போது தென்படுகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே இந்த ஃபோர்டு நிறுவனம் 2022-23 நிதியாண்டில் ரூ. 505 கோடி வருமானத்தை ஈட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவலை ஆட்டோகார் இந்தியாவும் அதன் செய்தியின் வாயிலாக உறுதிப்படுத்தி இருக்கின்றது.
ஒரு கார் மாடல்கூட நிறுவனத்தின்கீழ் விற்பனையில் இல்லாத நிலையில், இந்த அளவு வருமானத்தை ஃபோர்டு நிறுவனத்தால் எப்படி ஈட்ட முடிந்தது என்பதே இப்போது பலரின் கேள்விக் குறியாகவும், சந்தேகமாகவும் உள்ளது. பலரை இந்த தகவல் ஆச்சரியத்தின் உச்சத்திற்கே எடுத்துச் சென்றிருக்கின்றது. நிறுவனத்தின் வருமானத்திற்கு ஒரு சிலவற்றை காரணமாக குறிப்பிடப்படுகின்றது.

ஃபோர்டு கார் உற்பத்தியை இந்தியாவில் கைவிட்டு இருந்தாலும், எஞ்ஜின் போன்ற முக்கிய உதிரிபாகங்களின் உற்பத்தியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. இதற்கு ஆகும் தேவையில்லா செலவுகளை அந்நிறுவனம் முழுமையாகக் குறைத்திருக்கின்றது. இதனாலேயே நிறுவனத்தால் கணிசமான அளவு வருமானத்தை ஈட்ட முடிந்திருக்கின்றது. மேலும், அது உற்பத்தியையும் அதிகரிக்கச் செய்திருப்பதாக கூறப்படுகின்றது.
இவை அனைத்தும் சேர்ந்தே நிறுவனத்திற்கு 2022-23 ஆம் நிதியாண்டில் 505 கோடி வருவாயை ஈட்டிக் கொடுத்திருக்கின்றது. அதேவேளையில், நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயாக 7,079 கோடி ரூபாய் உள்ளது. 2021 செப்டம்பரிலேயே இந்தியாவை விட்டு ஃபோர்டு வெளியேறியது. விற்பனை விகிதம் குறைவு, நஷ்டம் உள்ளிட்ட காரணங்களினாலேயே இந்த நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறியது.
வெளியேற்றத்தைத் தொடர்ந்து நிறுவனம் அடுத்து மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய இருப்பதாக அறிவித்தது. ஆனால், இந்த திட்டத்தையும் அது கைவிட்டது. ஃபோர்டு நிறுவனம் இந்தியர்களுக்கு புதிய படைப்புகளை வழங்க தவறியதே அதனால் இந்தியாவில் தாக்கு பிடிக்க முடியாமல் வெளியேற்றத்தைச் சந்தித்து இருக்கின்றது.
நிறுவனத்தின் வெளியேற்றத்தால் அதன் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்றான ஈகோஸ்போர்ட்கூட விற்பனைக்குக் கிடைக்காத சூழல் உருவாகி இருக்கின்றது. இந்த காரை வெகு விரைவில் இந்தியாவில் மின்சார வெர்ஷனில் விற்பனைக்குக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதை நிறுவனம் இப்போது வரை உறுதிப்படுத்தவில்லை. ஃபோர்டு ஈகோ ஸ்போர்ட் அதிக பாதுகாப்பு திறன்மிக்க காராகும்.
இந்த பெரும் விபத்துகளில் இருந்துகூட தன்னுள் பயணித்தவர்களைப் பத்திரமாக பாதுகாத்து இருக்கின்றது. இதற்கு சான்றாக பல்வேறு ஈகோஸ்போர்ட் விபத்து சம்பவங்கள் நாட்டில் அரங்கேறி இருக்கின்றன. இதேபோல், நிறுவனத்தின் என்டீயோவர் கார் மாடலும் அதிக பாதுகாப்பு மற்றும் தரத்திற்கு பெயர்போனதாக இருக்கின்றது. இருப்பினும் இந்த கார்கள் இந்தியர்களின் மனதைக் கவர தவறிவிட்டன. இதன் விளைவாக நிறுவனத்தின் ஒரு கார் மாடல்கூட விற்பனையில் இல்லாத சூழல் உருவாகி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஃபோர்டு நிறுவனம் எதிர்காலத்தில் மீண்டும் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த காலத்தில் ஜாவா, யெஸ்டி மற்றும் பிஎஸ்ஏ உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவே வேண்டாம் என நாட்டை வெளியேறின. ஆனால், அவை மீண்டும் கால் தடம் பதித்து, தற்போது விற்பனையில் கெத்துக் காட்டிக் கொண்டிருக்கின்றன. அதேவேளையில் அவை மஹிந்திராவின் கிளாசிக் லெஜண்ட்ஸ் பிராண்டின்கீழே இயங்கிக் கொண்டிருக்கின்றன.


Click it and Unblock the Notifications








