சீனாவே வேண்டாம்... முழுசா கை கழுவிவிட்டு இந்தியாவை தேடி ஓடி வரவிருக்கும் பிரபல நிறுவனம்!
ஆப்பிள் ஐ-ஃபோன் தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ்கான் இந்தியாவில் மிகப் பெரிய முதலீட்டை புதிய தயாரிப்பு ஆலைக்காக மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சுமார் 700 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டிலேயே தனது புதிய ஆலையை அது இந்தியாவில் அமைக்க இருக்கின்றது.
இந்த ஆலை செல்போன் உற்பத்திக்காக மட்டுமின்றி, நிறுவனத்தின் மின்சார வாகன உற்பத்தியிலும் பங்கெடுக்கும் என கூறப்படுகின்றது. ஃபாக்ஸ்கான் நிறுவனம் செல்போன் உற்பத்தியை தொடர்ந்து மின்சார வாகன உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகின்றது. இந்த லட்சிய பணி தற்போது மிகவும் ஆரம்ப நிலையிலேயே இருக்கின்றது.

இதனை இந்திய முதலீட்டின் வாயிலாக ஃபாக்ஸ்கான் விரிவாக்கம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது, இந்த முதலீட்டிற்கு பின்னர் இந்தியாவை மையப்படுத்தி தன்னுடைய எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை பலமடங்கு வேகப்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவிலேயே நிறுவனத்தின் புதிய ஆலை திறக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 300 ஏக்கர் நிலப்பரப்பில் உற்பத்தி ஆலை உருவாக்கப்பட இருக்கின்றது. இங்கு ஆப்பிள் ஐ-போன் உதிரிபாகங்கள் தயாரிக்கப்பட இருக்கின்றன. இவற்றுடனேயே மின் வாகன உற்பத்தி பணிகளும் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. மேலும், இந்த மிக பெரிய முதலீட்டைத் தொடர்ந்து ஃபாக்ஸ்கான் நிறுவனம் சீனாவை கை கழுவ இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

அண்மைக் காலமாக சீனாவில் கோவிட் 19 வைரஸ் காரணமாக கெடுபிடி அதிகரித்துக் காணப்படுகின்றது. இதன் விளைவாக புதிய மாடல் ஐ-போன் உற்பத்தி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, பிற சாதனங்களின் உற்பத்தியும் மிகக் கடுமையாக பாதிப்படைந்திருக்கின்றது. நிறுவனத்திற்கு சொந்தமாக ஷெங்ஸூ பகுதியில் மிகப் பெரிய ஆலை இயங்கிக் கொண்டிருக்கின்றது.
இங்கு மட்டும் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் நேர்முகமாகவும், மறைமுகமாகவும் பணியாற்றி வருகின்றனர். இது மிகவும் பிரமாண்டமான ஆலை ஆகும். இத்தகைய பிரமாண்ட ஆலைக்கே தற்போது ஆப்பு ஏற்படும் நிலை உருவாகி இருக்கின்றது. கடுமையான கோவிட் 19 விதிகள் காரணமாக ஃபாக்ஸ்கான் - சீனா இடையில் முரண்பாடான சூழல் ஏற்பட்டு இருக்கின்றது.

இந்த நிலை காரணமாகவே நிறுவனம் சீனாவில் மேற்கொள்ளப்படும் உற்பத்தியை இந்தியாவிற்கு மாற்ற திட்டம் போட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பெரும் நிறுவனங்கள், இந்தியாவில் மின்சார வாகனம் மற்றும் மின்சாதன பொருட்களை தயாரிக்க அதிகளவில் விருப்பம் தெரிவித்த வண்ணம் இருக்கின்றன. மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி செய்வதற்கான மிக சிறந்த மையமாக இந்தியா விளங்குவதாக நிறுவனங்கள் நம்புகின்றன.
இதன் அடிப்படையிலேயே முன்னணி நிறுவனங்கள் தங்களின் ஆலையை இந்தியாவில் அமைக்க விருப்பம் தெரிவித்த வண்ணம் இருக்கின்றன. பிரபல ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஆசியாவின் மிகப் பெரிய எலெக்ட்ரிக் வாகன ஆலையை தமிழகத்தின் ஓசூரில் அமைத்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதுபோலவே தன்னுடைய பிரமாண்ட ஆலையை பெங்களூருவில் திறக்க இருக்கின்றது, ஃபாக்ஸ்கான்.

இதன் வருகை மிகப் பெரிய வரலாற்று சம்பவத்தை இந்தியாவில் செய்ய இருக்கின்றது. ஒரே இடத்தில் செல்போன் மற்றும் எலெக்ட்ரிக் வாகனம் உற்பத்தி செய்யப்பட இருப்பதே இதற்கு காரணம். ஃபாக்ஸ்கான் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே தனது மாடல் சி புதுமுக எலெக்ட்ரிக் காரை உலகளவில் வெளியீடு செய்தது. இந்த எலெக்ட்ரிக் காரின் உற்பத்தி பணிகள், பெங்களூருவில் அமைய இருக்கும் புதிய ஆலையில் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முன்னதாக சீனாவில் இருந்தே இந்த காரை தயாரித்து உலக நாடுகளுக்கு ஏற்றமதி செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகின. நிறுவனம் தற்போது சீனாவை விட்டு வெளியேற இருப்பதனால் இந்த பிளானில் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. புகழ்பெற்ற சூப்பர் கார் உற்பத்தி நிறுவனமான பினின்ஃபரினா (Pininfarina) உதவியுடனேயே ஃபாக்ஸ்கான் அதன் எலெக்ட்ரிக் கார் உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









