இந்தியால பெட்ரோல் போடுறதுக்கு கட்டுப்பாடுகள் அறிவிப்பு... டேங்க் ஃபில் செய்ய கூடாதென எச்சரிக்கை! ஏன் தெரியுமா?
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ஏற்கனவே மிக அதிகமாக இருக்கின்றது. இதனை, எங்கே திடீர்னு அதிகமாக்கிடுவாங்களோ (ஏத்துருவாங்களோ) என்கிற அச்சத்தில் ஒரு சிலர் டேங்க் நிரம்பி வழிகின்ற அளவிற்கு தங்களின் வாகனங்களில் எரிபொருளை நிரப்புகின்றனர். இதுபோன்று வாகனங்களில் அதிகளவு எரிபொருளை நிரப்புபவர்களுக்கே அரசு தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதாவது, டேங்க் ததும்ப, ததும்ப பெட்ரோல், டீசல் நிரப்ப வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கார், ஸ்கூட்டர் மற்றும் பைக் என எந்த வாகனமாக இருந்தாலும் இந்த எச்சரிக்கை பொருந்தும். நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகமே இத்தகைய அறிவுறுத்தலை வாகன பயன்பாட்டாளர்களுக்கு வழங்கி இருக்கின்றது.

இதுகுறித்த ஓர் சுற்றறிக்கையையும் அமைச்சகம் கடந்த மார்ச் 26 அன்று வெளியிட்டது. வாகனங்களில் வழங்கப்பட்டு இருக்கும் எரிபொருள் தொட்டியின் முழு கொள்ளளவில் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை குறைவாகவே எரிபொருள் நிரப்ப வேண்டும் என்றே அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வாகன பயன்பாட்டாளர்களின் நலனை கருத்தில் கொண்டே இத்தகை அறிவுறுத்தலை அமைச்சகம் வெளியிட்டு இருக்கின்றது. அண்டை நாடுகள் சிலவற்றில் தற்போது பெட்ரோல், டீசல் தட்டுபாடு தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, பாகிஸ்தானில் ஏற்பட்டு இருக்கும் பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டில் வரலாறு காணாத அளவு பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்ந்துக் காணப்படுகின்றது.

இதுதவிர, அவற்றின் விற்பனையிலும் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கின்றது. இத்தகைய சூழல் இந்தியாவில் ஏற்பட்டிருக்குமோ என யாரும் அஞ்சத் தேவையில்லை. அதிகரித்து வரும் அதிக வெப்ப நிலையை கருத்தில் கொண்டே முழுமையாக வாகனங்களில் எரிபொருள் நிரப்ப வேண்டாம் என்கிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கின்றது.
நாட்டில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்குகளும் எரிபொருள் சேகரிப்பு தொட்டியை நிலத்தடியில் கொண்டிருக்கின்றன. வளிமண்டலத்தைக் காட்டிலும் நிலத்தடியில் வெப்பநிலை சற்றுக் குறைவாக இருக்கும். இந்த நிலையில் எரிபொருள் வாகனங்களில் நிரப்படும் எனில், அது வெளிப்புற வெப்ப நிலைக்கு விரிவடைய தொடங்கும். இந்த நிலை பெரும் ஆபத்தானது.

இத்தகைய சூழலில் வாகனங்களில் உள்ள எரிபொருள் தொட்டியில் போதிய இடம் இல்லை எனில் அது மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் வெடிக்க செய்யலாம். இதுமட்டுமில்லைங்க, எஞ்ஜின் திறனிலும் இது பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக அதன் செயல் திறனை குறைக்கச் செய்யும். இத்துடன், அதிகப்படியான ஹைட்ரோகார்பனை வெளியேற்றக் கூடியவையாகவும் அவை மாறிவிடும்.
இதுபோன்று இன்னும் பல்வேறு சிக்கல்களை டேங்கை முழுமையாக நிரப்பும்போது நாம் சந்திக்க வேண்டி இருக்கும். இத்தகைய பாதிப்புகளை தவிர்க்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அரசு தற்போது களமிறங்கி இருக்கின்றது. சென்ற ஆண்டில் போட்ரோல் வாகனங்கள் தொடங்கி மின்சார வாகனங்கள் வரை பல திடீர் விபத்துகளுக்கு ஆளாகின. இந்த தீ விபத்துகளுக்கு பின்னால் அதிக வெயிலும் ஓர் காரணமாக இருக்கின்றது.
இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கின்றது. அடுத்து வரும் மாதங்களில் வெயிலின் தாக்கம் இன்னும் பலமடங்கு அதிகமாக இருக்கும் என கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே இந்த அறிவுறுத்தலை மத்திய அமைச்சகம் இந்திய வாகன பயன்பாட்டாளர்களுக்கு வழங்கி இருக்கின்றது. இன்றைய (மார்ச் 27) நிலவரப்படி பெட்ரோல் லிட்டர் ரூ. 102.63-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ. 94.24க்கும் விற்கப்படுகின்றது.
இவ்ளோ விலை இருக்கும்போது எங்க இருந்து டேங்க் ஃபில் பண்ணுறது என கேக்குறீங்களா?, பலர் எந்த சூழலையும் பொருட்படுத்தாமல் டேங்கை ஃபில் செய்து வருகின்றனர். இவர்களுக்காகவே இந்த அறிவுறுத்தலை அரசு வெளியிட்டு இருக்கின்றது. இதுகுறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு வழங்க பெட்ரோல் உற்பத்தியாளர்களுக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
எரிபொருள் தொட்டியை டேங்கை முழுமையாக நிரப்பினால் பல்வேறு ஆபத்துகள் ஏற்படுவதுடன், மைலேஜ் திறனிலும் பாதிப்பு ஏற்படும். குறிப்பாக, ஃபுல் டேங்க் செய்துவிட்டு வண்டியை நீண்ட நாட்கள் பயன்படுத்தப்படாமல் எஞ்ஜினில் கூடுதல் பாதிப்புகள் ஏற்படலாம். ஆகையால், ஃப்யூவல் டேங்கை எப்போதும் முழுமையாக நிரப்ப வேண்டாம் என்பதே எங்களின் வேண்டுகோள் ஆகும். தேவைக்கேற்ப எரிபொருளை நிரப்புவதே மிக சிறந்த செயல்கூட.


Click it and Unblock the Notifications