இதுக்குதான் பீச்சுல வண்டிய ஓட்டக் கூடாதுனு சொல்றது.. தார் இல்லைனா கதையே வேற மாதிரி ஆகியிருக்கும்!
பலருக்கு ஆறுதல் தரும் இடமாக கடற்கரைகள் இருக்கின்றன. காதல் தோல்வியுற்றவர்கள், குடும்ப பிரச்னை, அலுவலகத்தில் பிரச்னை என மூலை முழுக்க பிரஷ்ஷரில் இருப்பவர்களுக்குக்கூட இங்கு வந்தால் ஓர் மன நிம்மதியும், அமைதியும் கிடைத்துவிடும். இத்தகைய ஓர் இடமாகவே கடற்கரைகள் இருக்கின்றன. மேலும் ஏழைகளுக்கான பொழுதுபோக்கு இடமாகவும் அவை இருக்கின்றன.
ஓர் ஏழை தன்னுடைய குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வேண்டும் எனில், அவர் தேர்ந்தெடுக்கும் இடத்தில் முதல் இடமாக கடற்கரைகள் இருக்கும். சினிமா, உயிரியல் பூங்காக்கள் போன்றவற்றிற்கு செல்ல ஆயிரக் கணக்கில் செலவாகும். ஆனால் கடற்கரைக்கு குடும்பத்துடன் சென்று வர ஓரிரு நூறு ரூபாய்கள் இருந்தாலே போதுமானது.

குறிப்பாக, பேருந்துக்கான செலவு இருந்தால் மட்டுமே போதும். எனவேதான் ஏழைகளின் மிக சிறந்த சுற்றுலா தளமாக பீச்சுகள் இருக்கின்றன. எத்தனை முறை பீச்சுக்கு சென்றாலும் அதன் அழகு முதல் முறை பார்ப்பதை போலவே இருக்கும். இத்தகைய கடற்கரையை ஒரு சிலர் வேறு விதமான பொழுதுபோக்கிற்காக பயன்படுத்திக் கொள்கின்றனர்.
அந்தவகையில், வாகனங்களை ஓட்டி எஞ்ஜாய் செய்ய ஒரு சிலர் கடற்கரைகளைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். ஆனால், இதை இந்தியாவின் அனைத்து கடற்கரைகளிலும் செய்து கொள்ள முடியாது. நாட்டின் குறிப்பிட்ட ஒரு சில கடற்கரைகளில் மட்டுமே 'கடற்கரை டிரைவ்' செய்து கொள்ள அனுமதி வழங்கப்படுகின்றது.

அந்தவகையில், கேரளாவில் உள்ள முழபிளாங்காடு கடற்கரையில் பிரத்யேகமாக வாகனங்கள் கடற்கரையில் இயக்கிக் கொள்ள அனுமதி வழங்கப்படுகின்றது. இங்கேயே பயணிகள் வாகனமான ஃபோர்ஸ் டிராவல்லர் சிக்கி இருக்கின்றது. ஆபத்தான நிலையில் இருந்த டிராவல்லரை மஹிந்திரா தார் கார் உதவியுடன் மீட்டிருக்கின்றனர். இதுகுறித்த வீடியோவே இணையத்தில் தற்போது வைரலாகிக் கொண்டிருக்கின்றது.
இதுபோன்று வாகனங்கள் கடற்கரையில் சிக்கிக் கொள்ளும் நிகழ்வு இந்தியாவில் அரங்கேறுவது முதல் முறையல்ல. ஏற்கனவே இந்த மாதிரியான சம்பவங்கள் பல நாட்டில் அரங்கேறி இருக்கின்றன. ஆனால், டிராவல்லர் போன்ற ஓர் வாகனம் கடற்கரையில் சிக்கிக் கொள்வது இதுவே முதல் முறை என கூறலாம்.

பெரிய உருவம் கொண்ட ஃபோர்ஸ் டிராவல்லரை அதைவிட பலமடங்கு சிறிய உருவம் கொண்ட தார் மீட்டெடுத்திருக்கின்றது. இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். அது எப்படி தார் காரால் கடற்கரையில் சிக்காமல் ஓட முடிந்திருக்கும்போது, ஏன் ஃபோர்ஸ் டிராவல்லாரால் முடியவில்லை?, அதன் பெரிய உருவம் அது சிக்குவதற்கு காரணமாக இருந்திருக்குமோ என்கிற சந்தேகங்கள் உங்களுக்கு எழும்பி இருக்கக் கூடும்.
ஆனால், அந்த வாகனத்தின் உருவத்திற்கும் அது சிக்கியதற்கும் எந்த சந்தேகமும் இல்லை. அவ்வாகனத்தில் 4X4 டிரைவ் சிஸ்டம் மற்றும் ஆஃப் ரோடு பயன்பாட்டிற்கான வசதி உள்ளிட்டவை இல்லாததே டிராவல்லர் கடற்கரையில் சிக்குவதற்கு காரணமாக அமைந்திருக்கின்றது. இந்த அம்சம் இருந்திருந்தால் அதனாலும் மஹிந்திரா தார் காரை போல இயங்கி இருக்க முடியும்.
ஆமாங்க, ஆஃப் ரோடில் கெத்து காட்டுவதற்கான அனைத்து வசதிகளும் தார் காரில் இடம் பெற்றிருக்கின்றன. இதனாலேயே அதனால் முறையான சாலை இல்லாத பகுதிகளிலும் இயங்க முடிகின்றது. எனவேதான், அதனால் பிரமாண்ட தோற்றம் கொண்ட ஃபோர்ஸ் டிராவல்லரையும் ஆபத்தில் இருந்து மீட்டெடுக்க முடிந்திருக்கின்றது.
ஏன் பீச்சில் ஓட்டக் கூடாது: கடற்கரை பலதரப்பட்ட உயிர்களுக்கு வாழ்வாதரமாக இருக்கின்றது. கடற்பாசி, பவள பாறைகள் தொடங்கி மீன், ஆமை என பலவகைப் பட்ட உயிரிகள் கடலை நம்பி இருக்கின்றன. இவற்றிற்கு அச்சுறுத்தலாக வாகனம் ஓட்டுவது மாறிவிடும். இதனால்தான் கடற்கரையில் வாகனம் ஓட்டுவது தவிர்க்கப்படுகின்றது.
குறிப்பாக, கடல் ஆமைகள் மற்றும் கடல் வாழ் பறவைகள் கடற்காரை ஓரங்களிலேயே கூடு கட்டும். வாகனம் ஓட்டும்போது இதுவும் சேதப்படலாம் என அஞ்சப்படுகின்றது. இதைக் காரணமாக காட்டியும் வாகனங்கள் கடற்கரையில் ஓட்ட அனுமதி வழங்கப்படுவதில்லை. இருப்பினும், ஒரு சில பகுதிகளில் அரசின் அனுமதியுடன் வாகனங்கள் இயக்கிக் கொள்ள அனுமதி வழங்கப்படுகின்றது.
கடற்கரை வாகனங்கள் ஓட்ட உகந்தவை அல்ல: சாலைகளை வாகனங்களால் கடற்கரையில் செயல்பட முடியாது. நிலை தன்மையற்ற மணல் பரப்பே இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. மேலும், கடல் அலைகள் வரும்போது வாகனங்கள் கடற்கரை ஓரங்களில் சிக்கிக் கொள்ளும் எனில் அது பெரிய ஆபத்தை சந்திக்க நேரிடலாம்.
குறிப்பாக, கடல் அலைகளால் அவை கடலுக்குள்ளேயே இழுத்துச் செல்ல நேரிடலாம். இத்தகைய ஆபத்துகளைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே கடற்கரையில் வாகனங்கள் இயக்க அனுமதி வழங்கப்படுவதில்லை. இதுதவிர, சுற்றுச்சூழல் பாதிப்பு, கடற்கரையை கண்டு ரசிக்க வருபவர்களுக்கும் இன்னல்களை ஏற்படுத்துவது பல இக்கட்டான சூழல்களை வாகனங்கள் ஏற்படுத்தும் என்பதாலும் கடற்கரையில் வாகனங்களை ஓட்ட அனுமதி வழங்குவதில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃபோர்ஸ் டிராவல்லர் வாகனத்தில் குறைந்தபட்சம் ஆஃப்-ரோடை சமாளிக்கும் டயர் மற்றும் வாகனங்களை ஓட்டுவதில் கைதேர்ந்த ஓர் ஓட்டுநர் இருந்திருந்தால் அது மோசமான சூழலை சந்தித்து இருக்காது. பல சமயங்களில் வாகனங்கள் இக்கட்டான சூழலில் சிக்கிக் கொள்ள அதன் டிரைவர்களே காரணமாக இருக்கின்றது. போதுமான ஓட்டும் பயிற்சி இல்லாததன் விளைவு பெரும் ஆபத்துகளில் அவை சிக்க நேரிடுகின்றது.


Click it and Unblock the Notifications









