ஃப்யூவல் டேங்க் முழுசா காலியாற அளவுக்கு வண்டிய ஓட்டுவீங்களா? நீங்களே வண்டிக்கு சூன்யம் வச்சுட்டு இருக்கீங்க!
பெட்ரோல் டேங்க் முழுசா காலியாகுற அளவுக்கு வண்டிய ஓட்டினா அந்த வாகனத்தில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படக் கூடும். என்னென்ன மாதிரியான பாதிப்புகளை அந்த வாகனம் சந்திக்கும் என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். இதுகுறித்த விரிவான பதிவிற்குள் போகலாம், வாங்க.
கிட்டதட்ட ஃப்யூவல் காலியான நிலையில் இருக்கும் வாகனத்தை, மேலும் முழுசாக காலியாகும் அளவிற்கு அந்த வாகனத்தை இயக்கினால் அதில் பல்வேறு பிரச்னைகளைச் சந்திக்கக் கூடும். எனவேதான் இதனை வாகனத்திற்கு தீங்கை ஏற்படுத்தும் செயல் என்று வாகனத்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும், முழுசா எரிபொருள் தொட்டி காலியாகும் அளவிற்கு வாகனத்தை ஓட்டக் கூடாது என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

அப்படி என்ன மாதிரியான பாதிப்புகளை வாகனங்கள் சந்திக்கின்றன என்கிற கேள்வி உங்கள் மனதில் எழும்பியிருக்கக் கூடும். குறிப்பாக, முழுசாக எரிபொருள் காலியாகுற அளவுக்கு வாகனத்தை ஏன் ஓட்டக் கூடாது என்று கூறப்படுகின்றது? இதை மீறி முழுசா எரிபொருள் தொட்டி காலியாகும் அளவிற்கு வாகனத்தை ஓட்டினால் அந்த வாகனத்தில் என்ன மாதிரியான பாதிப்புகள் மற்றும் சிக்கல்கள் ஏற்படும்?, என்கிற சந்தேகங்கள் உங்களுக்கு எழும்பி இருக்கும். இந்த கேள்விகளுக்கான பதில்களே இங்கே உள்ளன.
கழிவுகள் எஞ்ஜினுக்குள் நுழையும்: நீண்ட நாட்கள் சுத்தம் செய்யப்படாத தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்தால் அதற்குள் ஏகப்பட்ட அழக்கும், தூசிகளும் இருப்பதை நம்மால் பார்க்க முடியும். இதேபோல், எரிபொருள் தொட்டியிலும் சிறு சிறு துகல்களும், அழுக்குகளும் இருக்கும். இந்த மாதிரியான சூழலில் எரிபொருள் தொட்டியை காலி ஆகும் அளவிற்கு வாகனத்தை ஓட்டினால், அடிப்பகுதியில் இருக்கும் தூசிகளும், அழுக்குகளும் நேரடியாக எஞ்ஜினிற்குள் நுழையும்.

இதனால் எஞ்ஜினின் இயக்கத்தில் பாதிப்பு ஏற்படக் கூடும். இதுவே, தொட்டிக்குள் இருக்கும் கசடு அளவில் பெரியதாக இருப்பின் அது அந்த வாகனத்தின் எந்திரத்தை மிக மோசமாக பாதிப்படையச் செய்யும். மேலும், அதிக செலவையும் ஏற்படுத்திவிடும். ஆகையால், நான்கு சக்கர வாகனமோ, இருசக்கர வாகனமோ எதுவாக இருந்தாலும், அந்த வாகனத்தில் எப்போதும் போதி அளவு எரிபொருளை நிரப்பி வைத்திருப்பதே நல்லது.
எரிபொருள் பம்ப் சேதமடைய வாய்ப்புகள் அதிகம்: எஞ்ஜின் பாதிப்பு மட்டுமில்லைங்க முழுசா எரிபொருள் காலியாகுற அளவிற்கு வண்டியை ஓட்டினா அதன் எரிபொருள் பம்ப்பும் மிக பெரிய சேதத்தைச் சந்திப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எரிபொருள் தொட்டியில் இருக்கும் எரிபொருளே ஃப்யூவல் பம்ப் வாயிலாக எஞ்ஜினுக்குள் பாயும்போது அதன் இன்சுலேஷன் மற்றும் லூப்ரிகேன்டாக செயல்படுகின்றது.

இந்த மாதிரியான சூழலில் போதிய அளவு ஃப்யூவல் டேங்கில் இல்லையெனில் பம்பிற்கு தேவையான போதிய அளவு லூப்ரிகேஷன் கிடைக்காது. இந்த நிலையில் தொடர்ந்து வாகனத்தை இயக்கினால் எரிபொருள் பம்ப் அதிக வெப்பத்திற்கு ஆளாகும். இவ்வாறு அதிக உஷ்னத்தை அது சந்திக்கும் எனில் விரைவில் அது சேதமடையக் கூடும். இது மிகப் பெரிய செலவிற்கு வழி வகுக்கும். எனவேதான் ஃப்யூவல் டேங்க் முழுசா காலியாகும் அளவிற்கு வண்டிய ஓட்ட வேண்டாம் என்கின்றனர்.
வாகனம் திடீரென நின்றுவிடும்: ஃப்யூவல் டேங்கில் கொஞ்சமாக பெட்ரோல் இருப்பதை பார்த்த உடனேயே அதனை நிரப்பாமல் தட்டிக் கழிக்கின்றீர்கள் எனில் நடு வழியில் உங்கள் வாகனம் நின்று விடுவதற்கான வாய்ப்புகளே மிக மிக அதிகம். குறிப்பாக, பெட்ரோல் பம்ப்புகள் சில கிமீட்டர்களுக்கு அப்பால் இருக்கும் எனில் உங்கள் வாகனத்தை மீண்டும் ஸ்டார்ட் செய்வது கஷ்டமானதாக மாறிவிடும்.

குறிப்பாக, நடு ரோட்டில் ஓடிக் கொண்டிருக்கும்போதே வாகனம் எரிபொருள் இல்லாமல் நிற்க நேரிடலாம். இது மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தக் கூடும். எஞ்ஜின் செயலிழந்துவிட்டால், வாகனத்தைக் கட்டுப்படுத்துவது சிரமமாகிவிடும். மேலும், செயலிழந்த அந்த வாகனத்தை தள்ளு ராஜா சர்வீஸ் செய்தே ஓரங்கட்ட வேண்டி இருக்கும். இந்த மாதிரியான சூழலை தனியாளாக கையாள்வது மிகக் கடினமானது. எனவே ரிஸ்க் எடுக்காமல் வாகனத்தில் போதிய அளவு எரிபொருளை நிரப்புவதே ராஜ தந்திரம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இப்போதைய நவீன கால கார்களில் பெட்ரோலின் அளவின் கண்கானிக்கு கருவிகள் வழங்கப்படுகின்றன. அவை எப்போதும் சரியான தகவலையே வழங்கும் என கூறிவிட முடியாது. சில நேரங்களில் அது சொன்னதைகாட்டிலும் முன் கூட்டியே வாகனம் பெட்ரோல் இல்லாமல் நிற்கக் கூடும். ஆகையால், ஓரளவுக் குறைவாக பெட்ரோல் டேங்க் இருப்பதை உணர்ந்த உடன் அதை மீண்டும் ஃபில் செய்ய முயற்சிக்க வேண்டும் என்பதே எங்களின் அறிவுறுத்தல் ஆகும்.


Click it and Unblock the Notifications
