இந்தியாவில் வெறும் ரெண்டே கார்களை வெச்சிகிட்டு... ஹோண்டா கார்ஸின் மார்ச் மாத சேல்ஸ் ரிப்போர்ட்!!
இந்தியாவில் ஒவ்வொரு காராக விற்பனையை நிறுத்தி வரும் ஹோண்டா கார்ஸ் நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் விற்பனை செய்த கார்கள் எண்ணிக்கை குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி பார்க்கலாம்.
இந்திய சந்தையில் கடந்த மாதத்தில் ஹோண்டா பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை 6,692 ஆகும். அதுவே 2022 மார்ச் மாதத்தில் 6,589 கார்களை ஹோண்டா விற்பனை செய்து இருந்தது. இந்த வகையில் பார்த்தோமேயானால், இந்தியாவில் ஹோண்டா கார்களின் விற்பனை 1.56% அதிகரித்துள்ளது. அதுவே கடந்த 2023 பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மார்ச் மாத விற்பனை எண்ணிக்கை 9.96% அதிகமாகும்.

ஏனெனில் அந்த மாதத்தில் வெறும் 6,089 கார்களை மட்டுமே ஹோண்டா விற்பனை செய்து இருந்தது. இவ்வாறு மெல்ல மெல்ல வளர்ச்சி கண்டு வருவதாக சந்தோஷப்பட்டாலும், ஹோண்டா கார்களின் விற்பனை ஆனது வரும் மாதங்களில் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த மாதங்களில் மொத்தம் 5 கார் மாடல்களை இந்தியாவில் இந்த ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனம் விற்பனை செய்துவந்தது. ஆனால் அவற்றில் ஜாஸ், டபிள்யூ.ஆர்.வி மற்றும் 4ஆம் தலைமுறை சிட்டி கார்களின் விற்பனை ஏற்கனவே நிறுத்தப்பட்டு விட்டது.
இந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகளின் 2ஆம் கட்டத்தின் காரணமாக பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது டீசல் கார்களின் விற்பனையை நிறுத்தி கொண்டுள்ளன. அந்த வகையில், ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது அனைத்து கார்களில் இருந்தும் டீசல் வேரியண்ட்களின் விற்பனையை நிறுத்தி கொண்டது. இதன் எதிரொலியாக மேற்கூறப்பட்ட 3 ஹோண்டா கார்கள் இந்திய சந்தையை விட்டு நடையை கட்டியுள்ளன.

இதனால் தற்சமயம் ஹோண்டா பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்படும் கார் மாடல்களின் எண்ணிக்கை வெறும் 2 மட்டுமே ஆகும். ஹோண்டா அமேஸ் மற்றும் சிட்டி என்பவை தான் அவை ஆகும். 6,692 என்பது கடந்த மாதத்தில் இந்தியாவில் ஹோண்டா இந்தியா நிறுவனம் விற்பனை செய்த கார்கள் எண்ணிக்கை ஆகும். அதுவே கடந்த மாதத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஹோண்டா கார்களின் எண்ணிக்கை 3,189 ஆகும்.
ஆக மொத்தத்தில் கடந்த மார்ச் மாதத்தில் மொத்தம் 9,881 கார்களை இந்தியாவிலும், உலக சந்தைகளிலும் ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. 2022ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை ஆனது 8,832 ஆக பதிவானது. இந்த வகையில், கடந்த 2023 மார்ச் மாத விற்பனை எண்ணிக்கை 11.88% அதிகமாகும். 2022 மார்ச் உடன் ஒப்பிடுகையில், உள்நாட்டு விற்பனையில் பெரியதாக எந்த மாற்றமும் இல்லை.

ஆனால் வெளிநாட்டு சந்தைகளுக்கு ஹோண்டா கார்கள் 2022 மார்ச் மாதத்தை காட்டிலும் கடந்த மார்ச் மாதத்தில் 946 யூனிட்கள் அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்சமயம் விற்பனை செய்யப்படும் 2 ஹோண்டா கார்களுமே செடான் ரகத்தை சேர்ந்தவை ஆகும். ஆனால் நம் நாட்டு சந்தையில் சமீப ஆண்டுகளாக எஸ்யூவி கார்களுக்கே மார்க்கெட் நல்லப்படியாக உள்ளதால், மற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு சவால் அளிக்கும் வகையில் ஒரு காம்பெக்ட் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்த ஹோண்டா திட்டமிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து
ஜாஸ், டபிள்யூ.ஆர்.வி கார்களின் விற்பனையை ஹோண்டா நிறுத்தியது சரியான முடிவுதான். இதன் விளைவாக ஹோண்டா கார்களின் விற்பனை அடுத்த சில மாதங்களுக்கு கணிசமாக குறையும் என்றாலும், அவற்றின் இடத்தை நிரப்பும் பொருட்டு கொண்டுவரப்படும் காம்பெக்ட் எஸ்யூவி காரினால் ஹோண்டா நிறுவனத்திற்கு இந்திய சந்தையில் ஏதாவது நல்லது நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








