Honda City Jazz WR-V கார்களின் உற்பத்தியை நிறுத்த போறாங்க! எல்லாமே நல்ல கார் ஆச்சே! கண்ணீரில் ரசிகர்கள்!
இந்தியாவில் காற்று மாசுபாடு (Air Pollution) பிரச்னை அதிகரித்து கொண்டே செல்கிறது. அத்துடன் சாலை விபத்துக்களால் (Road Accidents) உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் இங்கு மிகவும் அதிகமாக உள்ளது. இந்த பிரச்னைகளை கட்டுப்படுத்துவதற்காக, கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு பல்வேறு விதிமுறைகளை அரசு தொடர்ச்சியாக அமல்படுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகளின் 2வது கட்டம் (BS6 Phase 2) மற்றும் புதிய ஆர்டிஇ விதிமுறைகள் (RDE - Real Driving Emissions) வரும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வரவுள்ளன. இதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அனைத்து கார் நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளை புதிய விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில் அப்டேட் செய்து வருகின்றன.

அதே சமயம் ஒரு சில கார்கள் புதிய விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில் அப்டேட் செய்யப்படாமல், விற்பனையில் இருந்து விலக்கப்பட்டு கொண்டுள்ளன. இதன்படி வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து ஹோண்டா நிறுவனம் தனது பிரபலமான ஒரு சில கார்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்தவுள்ளது.
ஹோண்டா ஜாஸ் (Honda Jazz), ஹோண்டா டபிள்யூஆர்-வி (Honda WR-V) மற்றும் நான்காவது தலைமுறை ஹோண்டா சிட்டி (Fourth-gen Honda City) ஆகியவைதான் விற்பனையில் இருந்து விலக்கப்படும் ஹோண்டா நிறுவனத்தின் கார்கள் ஆகும். இந்த கார்கள் புதிய விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில் அப்டேட் செய்யப்படவில்லை.

எனவேதான் இந்தியாவில் இந்த கார்களின் விற்பனை நிறுத்தப்படுகிறது. இந்த கார்களின் விற்பனை நிறுத்தப்படுவதற்கு மற்றொரு முக்கியமான காரணமும் உள்ளது. விற்பனை 'டல்' அடித்து கொண்டிருப்பதுதான் அந்த மற்றொரு காரணம். ஆனால் நான்காவது தலைமுறை ஹோண்டா சிட்டி கார் மட்டும் இதற்கு விதிவிலக்கு.
ஹோண்டா ஜாஸ் மற்றும் ஹோண்டா டபிள்யூஆர்-வி ஆகிய 2 கார்களும் விற்பனையில் தடுமாறும் நிலையில், நான்காவது தலைமுறை ஹோண்டா சிட்டி காரின் விற்பனை ஓரளவிற்கு சிறப்பாகதான் உள்ளது. நான்காவது தலைமுறை ஹோண்டா சிட்டி கார் கடந்த 2014ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

கடந்த 2020ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஐந்தாவது தலைமுறை ஹோண்டா சிட்டி காருடன் இணைந்து, அதுவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விற்பனை சிறப்பாக இருந்தாலும் கூட, புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்படாமல் அதுவும் பிரியாவிடை பெறவிருப்பது வருத்தமான ஒரு விஷயம்தான்.
எனவே வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து, 5வது தலைமுறை ஹோண்டா சிட்டி மற்றும் ஹோண்டா அமேஸ் (Honda Amaze) ஆகிய கார்களை மட்டுமே ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும். எனினும் இந்திய சந்தையில் விற்பனை எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக வரும் காலங்களில் நிறைய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹோண்டா திட்டமிட்டுள்ளது.
அதாவது வரும் 2028ம் ஆண்டு வரை, ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹோண்டா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில், புதிய மிட் சைஸ் எஸ்யூவி கார்தான் முதலில் விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கியா செல்டோஸ் (Kia Seltos), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக ஹோண்டாவின் இந்த புதிய மிட்-சைஸ் எஸ்யூவி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.


Click it and Unblock the Notifications








