400கிமீ -க்கு சார்ஜே போட தேவையில்லை!! ஹோண்டாவின் புதிய எலக்ட்ரிக் கார் - ஐரோப்பாவில் வெளியீடு!
ஹோண்டா இ:என்.ஒய்1 (Honda e:Ny1) எலக்ட்ரிக் எஸ்யூவி கார் சர்வதேச சந்தையில் வெளியீடு செய்யப்பட்டு உள்ளது. ஐரோப்பிய சந்தைக்காக கொண்டுவரப்படும் இதுதான் ஹோண்டாவின் முற்றிலும் புதிய முன்-சக்கர-டிரைவ் இ:என் எஃப் பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்ட முதல் கார் ஆகும். இந்த எலக்ட்ரிக் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
ஜப்பானிய நிறுவனமான ஹோண்டா நமது இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஓர் நிலையான இடத்தை பிடிக்க ஆரம்பத்தில் இருந்தே போராடி வருகிறது. சிட்டி, சிவிக், அமேஸ் என சில கார்களை தவிர்த்து பார்த்தால், ஹோண்டா பிராண்டில் இருந்து பெரியதாக எந்த காரும் கவனத்தை பெறவில்லை. இந்தியாவில் தற்சமயம் எஸ்யூவி கார்களுக்கே சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆனால் இந்த பிரிவில் ஹோண்டா பிராண்டில் இருந்து எந்த காரும் விற்பனையில் இல்லை.

இதற்கான முயற்சிகளில் இப்போதுதான் ஹோண்டா நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது. ஆகையால், மற்ற நிறுவனங்களை போல் எலக்ட்ரிக் கார்களை ஹோண்டா பிராண்டில் இருந்து இன்னும் சில வருடங்களுக்கு எதிர்பார்க்க முடியாது. ஆனால் உண்மையில், இந்திய சந்தையில் மட்டுமே ஹோண்டா செயல்படுகிறது. தாயக நாடான ஜப்பானில் சில ஹோண்டா எலக்ட்ரிக் கார்கள் ஏற்கனவே விற்பனையில் உள்ளன. சில எலக்ட்ரிக் கார்களை அங்கு அறிமுகம் செய்ய ஹோண்டா தயாராகி வருகிறது.
அதேபோன்று ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் செய்வதற்காகவும் ஹோண்டா சில எலக்ட்ரிக் கார்களை தயார் செய்து வருகிறது. அதில் ஒன்றான, ஹோண்டா இ:என்.ஒய்1 தற்போது சர்வதேச அளவில் வெளியீடு செய்யப்பட்டு உள்ளது. ஹோண்டாவின் புதிய B-பிரிவு எஸ்யூவி காரான இது, ஏற்கனவே கூறியதுப்போல் ஹோண்டாவின் புதிய பிளாட்ஃபாரத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது.

புதிய ஹோண்டா இ:என்.ஒய்1 எலக்ட்ரிக் காரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 400கிமீ-க்கும் அதிகமான தொலைவிற்கு காரை இயக்கி செல்ல முடியும். மற்றப்படி, இந்த எலக்ட்ரிக் காரில் பொருத்தப்பட்டுள்ள எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரி தொகுப்பு குறித்த விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஹோண்டா இ:என்.ஒய்1 எலக்ட்ரிக் காரில் தொழிற்நுட்ப அம்சங்கள் ஏகப்பட்டவை வழங்கப்பட்டு உள்ளன.
அவற்றுள் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், பனோராமிக் சன்ரூஃப், ஹீட்டட் லெதர் ஸ்டேரிங் சக்கரம் மற்றும் பிரீமியம் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்டவற்றை சொல்லலாம். இந்த காரின் பின்பக்க டெயில்கேட்டை கைகளின் உதவியின்றி எளிதாக திறந்து, மூடலாம். மற்ற தொழிற்நுட்ப அம்சங்களாக ஆட்டோ-டிம்மிங் மிரர்கள், 8 வழிகளில் எலக்ட்ரிக் மூலம் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை மற்றும் ட்யூயல்-ஸோன் ஏசி போன்றவை வழங்கப்பட்டுள்ளன.

இவற்றுடன், வயர்லெஸ் சார்ஜிங் பேட் மற்றும் மல்டிபிள் யுஎஸ்பி துளைகள், ஸ்மார்ட் எண்ட்ரீ மற்றும் புஷ் ஸ்டார்ட் பொத்தான் உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன. காரின் டேஸ்போர்டில் பெரிய அளவில் 15.1-இன்ச் சென்டர் டச் ஸ்க்ரீன் மற்றும் 10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் டிஸ்பிளே உள்ளன. ஆண்ட்ராய்டு ஆட்டோ & வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே இணைப்பு வசதியை கொண்டதாக விளங்கும் இந்த திரைகள் மூலம், பேட்டரி சார்ஜின் அளவுகள் உள்பட சில விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, சென்ஸிங் ஆக்டிவ் சேஃப்டி தொழிற்நுட்பம் ஹோண்டா இ:என்.ஒய்1 காரின் அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலமாக, மோதலை அறிந்து செயல்படும் பிரேக், பிளைண்ட் ஸ்பாட்டை பற்றிய தகவல்கள் போன்ற அட்வான்ஸான வசதிகளை பெறலாம். ஐரோப்பாவில் இ:என்.ஒய்1 எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகளை வருகிற அக்டோபர் மாத இறுதியில் இருந்து ஏற்கவுள்ளதாக அறிவித்துள்ள ஹோண்டா நிறுவனம் காரை டெலிவிரி செய்யும் பணிகளை 2024 ஜனவரியில் இருந்து துவங்கவுள்ளது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ஏற்கனவே கூறியதுதான், நம் இந்திய சந்தைக்காக மட்டுமே வேறு விதமான யுக்தியை ஹோண்டா கையாண்டு வருகிறது. ஆனால், ஜப்பான், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாட்டு சந்தைகளில் நன்கு ஆக்டிவ்வாகவே ஹோண்டா உள்ளது. குறிப்பாக, ஜப்பானில் எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியில் தீவிரமாக இறங்கவுள்ளதாக ஹோண்டா சமீபத்தில் அறிவித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications









