மாருதி, டாடாவை ஒரு கை பார்க்க போகும் ஹோண்டா! ஒட்டுமொத்த கூட்டத்துக்கும் செக்! கேப் விடாம அடிக்க போறாங்க!
இந்திய சந்தையில் ஹோண்டா (Honda) நிறுவனத்தின் கார்களுக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. குறிப்பாக ஹோண்டா சிட்டி (Honda City) போன்ற கார்கள், வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிடித்த தயாரிப்பாக உள்ளன. இந்த பெருமையை தக்க வைத்து கொள்வதற்காக வலுவான எதிர்கால திட்டங்களை ஹோண்டா தீட்டியுள்ளது.
இதன்படி இந்திய சந்தையில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஹோண்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இவை புத்தம் புதிய கார்களாகவோ அல்லது ஏற்கனவே விற்பனையில் உள்ள கார்களின் அப்டேட் செய்யப்பட்ட மற்றும் புதிய தலைமுறை மாடல்களாகவோ இருக்கலாம்.

இதுதவிர வெளிநாடுகளில் இருந்து ஒரு சில கார்களை இந்தியாவிற்கு இறக்குமதி செய்து, விற்பனை செய்வதற்கு ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் வெகு விரைவில் ஐசிஇ (ICE - Internal Combustion Engine) இன்ஜினில் இயங்க கூடிய எஸ்யூவி (SUV) ரக கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.
இந்திய சந்தையில் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) மற்றும் கியா செல்டோஸ் (Kia Seltos) ஆகிய கார்களுக்கு போட்டியாக, ஹோண்டா நிறுவனத்தின் இந்த புதிய எஸ்யூவி கார் களமிறங்கவுள்ளது.

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மற்றும் சேல்ஸ் பிரிவின் மூத்த துணை தலைவரும், இயக்குனருமான குணால் பெஹ்ல் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். இந்த கார் இந்திய சந்தைக்கான ஹோண்டா நிறுவனத்தின் அடுத்த மிகப்பெரிய லான்ச் என்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவல் அதிகரித்துள்ளது.
அனேகமாக இந்த புதிய கார் வரும் ஏப்ரல் மாதம் பொது பார்வைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து நடப்பு 2023ம் ஆண்டு தீபாவளி பண்டிகை சமயத்தில், விலை (Price) அறிவிக்கப்பட்டு, முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
ஹோண்டா நிறுவனத்தின் இந்த புதிய காரில் அடாஸ் தொழில்நுட்ப வசதி ADAS (Advanced Driver Assist Systems) வழங்கப்படலாம் என வெளியாகியுள்ள தகவலும், வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவலை அதிகரிக்க செய்துள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களில் தற்போது அடாஸ் பாதுகாப்பு வசதி மிகவும் வேகமாக பிரபலமடைந்து கொண்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
இதுதவிர இந்திய சந்தையில் கூடிய விரைவில் எலெக்ட்ரிக் கார்களையும் (Electric Cars) விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்திய சந்தையில் தற்போது எலெக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. எனவேதான் எலெக்ட்ரிக் கார் சந்தையையும் ஒரு கை பார்க்க ஹோண்டா முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் தற்போது முதலிடத்தில் உள்ள டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்திற்கு வரும் காலங்களில் இது நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. பல்வேறு புதிய மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதால், தனது உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் ஹோண்டா நிறுவனம் எடுத்து வருகிறது.


Click it and Unblock the Notifications








