பத்து லட்ச ரூபாக்கு இப்படி ஒரு காரா.. அதிகாரப்பூர்வமாக புக்கிங் தொடங்கிட்டாங்க.. முன்தொகையும் இவ்ளோ கம்மியா!
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹோண்டா எலிவேட் காருக்கான புக்கிங் பணிகள் இந்தியாவில் தொடங்கி இருக்கின்றது. இது ஓர் மிட்-சைஸ் எஸ்யூவி ரக காராகும். இந்த காருக்கே அதிகாரப்பூர்வமாக புக்கிங் பணிகளை ஹோண்டா இந்தியாவில் தொடங்கி உள்ளது. ரூ. 21 ஆயிரம் முன் தொகையில் இக்காரை புக்கிங் செய்துக் கொள்ளலாம்.
ஒருவேளை ஹோண்டா எலிவேட் வேண்டாம் என நினைத்தால் இந்த தொகையை நம்மால் முழுமையாக திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், இந்த காருக்கான விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. வெறும் புக்கிங் பணிகள் மட்டுமே தொடங்கப்பட்டு இருக்கின்றன. இதன் விலைகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.

செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதைத்தொடர்ந்து, வரும் ஏதேனும் ஓர் திருவிழா நாளில் இதன் டெலிவரி பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், சில குறிப்பிடத்தகுந்த தகவல்கள் இந்த கார்குறித்து அண்மையில் வெளியாகின. அந்தவகையில், கார் விற்பனைக்கு வர இருக்கும் விலைகள் பற்றிய தகவல்களும் வெளியாகின.
இதன்படி பார்க்கையில் பத்து அல்லது பதினோரு லட்ச ரூபாக்கும் குறைவான விலையில் ஹோண்டா எலிவேட் விற்பனைக்கு வர இருப்பது தெரிய வந்திருக்கின்றது. ஆனால், இந்த விலைகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த அளவு குறைவான விலையில் எலிவேட் வரும்பட்சத்தில் இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாக அது மாறுவதற்கான சூழல் ஏற்படும்.

கவர்ச்சிகரமான சிறப்பு வசதிகள், தொழில்நுட்பங்கள், பாதுகாப்பு அம்சங்கள் என எக்கச்சக்க சிறப்புகளுடன் ஹோண்டா எலிவேட் விற்பனைக்கு வர இருக்கின்றது. இதுவே இந்தியர்களின் கவனம் இந்த காரின் பக்கம் திரும்ப முக்கிய காரணமாக இருக்கின்றது. ஹோண்டா எலிவேட் ஒட்டுமொத்தமாக 7 விதமான ஒற்றை நிற தேர்வு மற்றும் 3 விதமான டூயல் டோன் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.
நவீன கால சிறப்பு தொழில்நுட்ப வசதிகளாக7 அங்குல டிஎஃப்டி திரை, 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஒயர்லெஸ் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் புஷ் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் என எக்கசக்க அம்சங்கள் இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றன.

இதுதவிர, பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் மிக தாராளமாக இடம் பெற இருப்பதாக இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில், அடாஸ், கொல்லிசன் மிடிகேஷன் பிரேக்கிங் சிஸ்டம், ரோடு டிபார்ச்சர் மிடிகேஷன் சிஸ்டம், லேன் கீப் அசிஸ்ட், அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோ ஹை பீம் அசிஸ்ட் மற்றும் கார் டிபார்ச்சர் மிடிகேஷன் சிஸ்டம் என எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
எஞ்ஜினை பொருத்த வரை 1.5 லிட்டர் 4 சிலிண்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல் மோட்டார் தேர்வே வழங்கப்பட இருக்கின்றது. இந்த மோட்டாரே ஹோண்டாவின் மற்றுமொரு பிரபல கார் மாடலான சிட்டியில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்ஜினால் 121 பிஎஸ் மற்றும் 145 என்எம் டார்க்கை வெளியேற்ற முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஹோண்டா எலிவேட் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் எனில் ஏற்கனவே மிட் சைஸ் எஸ்யூவி கார் பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக் மற்றும் எம்ஜி அஸ்டர் உள்ளிட்ட கார் மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இப்போதைய நிலவரப்படி ஹோண்டா நிறுவனத்தின்கீழ் மூன்று கார்கள் மட்டுமே விற்பனையில் உள்ளன. சிட்டி 5 ஆம் தலைமுறை, சிட்டி இ:எச்இவி (ஹைபிரிட் தேர்வு) மற்றும் அமேஸ் ஆகியவையே விற்பனையில் உள்ளன. இவற்றுடனேயே விரைவில் எலிவேட் இணைய இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே புக்கிங் பணிகள் அந்த காருக்கு தொடங்கி உள்ளன.


Click it and Unblock the Notifications









