தண்ணீரில் மூழ்கி சேதமான இவ்ளோதான் பில் வருமா!.. கொஞ்சம் உசரா இருங்க.. சொத்தையே எழுதி வைக்க சொல்லுவாங்கபோல!
மழை நீரால் பாதிக்கப்பட்ட சொகுசு காருக்கு மிகப் பெரிய தொகையை சர்வீஸ் மையம் ஒன்று போட்டிருப்பது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்து இருக்கின்றது. அப்படி எவ்வளவு தொகை அபராதம் போடப்பட்டு இருக்கின்றது? எங்கு இந்த சம்பவம் அரங்கேறியது? உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
ஏரிகள், குளம், குட்டைகளை ஆக்கிரமித்துதான் நம்மில் பலர் வீடுகளையும், அரசாங்கம் சாலை மற்றும் மேம்பாலங்களையும் அமைத்து இருக்கின்றன என்பதை இங்கு யாராலும் மறுக்க முடியாது. இதன் விளைவாகவே சிறிய மழையை கூட இந்தியாவின் சில முக்கிய நகரங்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை.

பத்து நிமிடம் பெய்த மழைக்கே சாலைகளில் வெள்ளம் நீர் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்துவிடுகின்றன. நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதை தவிர இதற்கு வேறு எந்த காரணமும் இல்லை. இந்தியாவில் மழைக் காலம் என்றால் ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும், மறுபக்கம் அது பெரும் வேதனையை ஏற்படுத்தக் கூடியதாக மாறிவிடுகின்றது.
குறிப்பாக, வாகன ஓட்டிகளுக்கு மிகப் பெரிய துயரத்தை மழையும், மழை நீரும் ஏற்படுத்துகின்றன. இதை உறுதிப்படுத்தக் கூடிய ஓர் சம்பவமே தற்போது நம்முடைய நாட்டில் அரங்கேறி இருக்கின்றது. தண்ணீரால் பாதிப்பைச் சந்தித்த ஓர் சொகுசு காருக்கு சொத்தையே எழுதி வாங்கும் அளவிற்கு சர்வீஸ் மையம் ஒன்று பில்லை போட்டுக் கொடுத்திருக்கின்றது.

"அப்படி எவ்வளவு தொகைக்கு பில் போடப்பட்டு இருக்கின்றது" என்றுதானே கேட்குறீங்க, ஒட்டுமொத்தமாக ரிப்பேருக்கு ரூ. 40 லட்சம் வரை சர்வீஸ் மையம் பில் போட்டுக் கொடுத்திருக்கின்றது. தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் உதய் தேஜா. இவர் சமீபத்தில் மழைப் பொழிந்துக் கொண்டிருந்த நேரத்தில் தன்னுடைய கர்ப்பிணி மனைவியின் அவசர தேவைக்காக மருத்துவரைச் சந்திக்க பிஎம்டபிள்யூ சொகுசு காரில் புறப்பட்டிருக்கின்றார்.
அது 5 சீரிஸ் செடான் ரக காராகும். கிரவுண்ட் கிளியரன்ஸ் கொஞ்சம் குறைவாகவே இருக்கும். இவ்வாறு இந்த காரில் அவர் சென்றுக் கொண்டிருக்கையில், அவருடைய பாதையில் மழை வெள்ள நீர் சூழ்ந்துக் காணப்பட்டிருக்கின்றது. காருக்குள் கர்ப்பிணி மனைவி இருந்த காரணத்தினால் பொறுமையாக அந்த மழை நீரைக் கடந்துச் செல்ல முயற்சித்து உள்ளார்.

ஆனால், அந்த சொகுசு கார் பாதி அளவுகூட கடந்திராத நிலையில் பிரேக் டவுன் ஆகியிருக்கின்றது. மீண்டும் ஸ்டார்ட் ஆகவே இல்லை. ஆகையால், உதய் தேஜா அவசர அவசரமாக இழுவை வாகனத்தை உதவிக்கு அழைத்திருக்கின்றார். ஆனால், பல மணி நேர தாமத்திற்கு பின்னரே சம்பவ இடத்திற்கு வந்து மழை நீரால் பாதிக்கப்பட்ட காரை அவர்கள் டோவ் செய்து சென்றிருக்கின்றனர்.
இந்த நிலையிலேயே காரை சர்வீஸ் செய்ய ரூ. 40 லட்சம் செலவாகும் என சர்வீஸ் மையத்தால் பில் போடப்பட்டு இருக்கின்றது. காரின் முக்கிய பாகங்களில் மழை நீர் புகுந்ததால் அவை ஹைட்ரோலாக் ஆகி கடுமையான சேதங்களுக்கு ஆளாகி இருக்கின்றது. இதையேக் காரணமாக கூறி சர்வீஸ் மையம் மிகப் பெரிய பில்லைப் போட்டுக் கொடுத்து இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மழை நீரால் ஏற்படும் பாதிப்புகள் மிகவும் காஸ்ட்லியானதாக இருக்கும் என நாங்களும் இதற்கு முன்னாள் ஏற்கனவே பலமுறை பல பதிவுகளை பதிவிட்டுள்ளோம். குறிப்பாக, ஆழம் தெரியாத மற்றும் பரீட்சையம் இல்லாத நீர் குட்டைகளில் வாகனங்களை இறக்கவே கூடாது என அறிவுறுத்தி இருக்கின்றோம்.
இருப்பினும் ஒரு சிலர் வேறு பாதை இல்லை மற்றும் அவசர தேவை என்பதற்காக அந்த பாதையை பயன்படுத்தி இதுபோன்ற சிக்கல்களில் சிக்கிக் கொள்கின்றனர். நீர் நிறைந்த சாலைகளை சமாளிக்க அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் அல்லது வாட்டர் வேடிங் திறன் கொண்ட கார்களைப் பயன்படுத்துவதே சரியான யுக்தியாகும். அதேவேளையில், அதிக ஆழமான அல்லது வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் வெள்ள நீர் நிறைந்த சாலையில் வாகனங்களை இயக்குவது முற்றிலும் ஆபத்தானது.


Click it and Unblock the Notifications









