ஹூண்டாய் கார்கள் இனி இது இல்லாமல் கிடைக்காது!! வாங்கும்முன் ஒருமுறை செக் செஞ்சிடுங்க!
ஹூண்டாய் அல்கஸார் (Hyundai Alcazar) காரில் 6 ஏர்பேக்குகள் நிலையான தேர்வாக வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், அல்கஸார் காரை இனி எந்த வேரியண்ட்டில் வாங்கினாலும் 6 ஏர்பேக்குகள் நிச்சயமாக கிடைக்கும். இத்துடன், இந்த ஹூண்டாய் எஸ்யூவி காரில் வழங்கப்படும் மற்ற பாதுகாப்பு அம்சங்கள் என்னென்ன என்பதை பற்றி இனி பார்க்கலாம்.
கார்களில் ஏர்பேக்குகள் மிக அவசியமான ஒன்றாக மாறி வருகிறது. தற்சமயம் பெரும்பாலான கார்களில் முன் இருக்கை பயணிகளுக்கு இரு ஏர்பேக்குகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இதனை 6 ஏர்பேக்குகளாக அதிகரிக்கக் கோரி கடந்த சில வருடங்களாக மத்திய அரசின் சார்பில் கார் நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

அதாவது, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து கார்களிலும் குறைந்தது 6 ஏர்பேக்குகள் இருக்க வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கம். ஆனால், இதனை அனைத்து விதமான கார்களிலும் கொண்டுவருவது தற்போதைக்கு இயலாத காரியமாக கார் நிறுவனங்களால் பார்க்கப்படுகிறது. ஏனெனில், ஏர்பேக்குகளை அதிகமாக வழங்கினால், அதற்கேற்ப காரின் விலைகளையும் அதிகரிக்க வேண்டியிருக்கும். இது கார்களின் விற்பனையை பாதிக்கும்.
ஆனால், இந்தியாவில் கார்கள் விற்பனையில் முன்னணி இருக்கும் நிறுவனங்களுள் ஒன்றான ஹூண்டாய் அதன் கார்களில் 6 ஏர்பேக்குகளை தைரியமாக ஸ்டாண்டர்ட் அம்சமாக கொண்டுவந்துள்ளது. ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா அதன் கார்களில் வழங்கும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த விபரங்களை சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி பார்க்கும்போது, தற்போது இந்தியாவில் அனைத்து ஹூண்டாய் கார்களிலும் 6 ஏர்பேக்குகள் நிலையான அம்சமாக இடம்பெற்றுள்ளன.

விலை குறைவான ஹூண்டாய் கார்களான அவ்ரா, கிராண்ட் ஐ10 நியோஸ் மற்றும் வென்யூவில் கூட இப்போது 6 ஏர்பேக்குகள் இடம்பெற ஆரம்பித்துவிட்டன. இந்த அப்டேட் தற்போது அல்கஸார் காருக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அல்கஸாரில் ஏற்கனவே 6 ஏர்பேக்குகள் சில வேரியண்ட்களில் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், நிறைய வேரியண்ட்களில் 2 ஏர்பேக்குகள் மட்டுமே கிடைத்தன.
ஆனால், தற்போது அல்கஸாரின் அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் நிலையான அம்சமாக மாறியுள்ளன. அல்கஸாரிலும் 6 ஏர்பேக்குகளை வழங்கியுள்ளதன் மூலமாக, தனது அனைத்து கார்களிலும் 6 ஏர்பேக்குகளை வழங்கும் இந்தியாவிலேயே முதல் நிறுவனமாக ஹூண்டாய் புகழப்படுகிறது. இதற்கிடையில், ஹூண்டாய் நிறுவனம் அதன் புதிய தலைமுறை வெர்னா செடான் காரை க்ளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டிற்கு உட்படுத்தியது.

கடந்த அக்டோபர் மாதத்தில் இந்த கிராஷ் டெஸ்ட்டிற்கு உட்படுத்தப்பட்ட ஹூண்டாய் வெர்னா க்ளோபல் என்சிஏபி-இல் முழு 5 நட்சத்திரங்களையும் பெற்று அசத்தியுள்ளது. க்ளோபல் என்சிஏபி-ஐ தொடர்ந்து, இந்தியாவின் பாரத் என்சிஏபி டெஸ்ட்டிலும் கார்களை சோதனைகளுக்கு உட்படுத்த ஹூண்டாய் தயாராகி வருகிறது. பாரத் என்சிஏபி வருகிற டிசம்பர் 15ஆம் தேதி முதல் செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார்களில் 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுவது, அமெரிக்கா, சீனா போன்ற பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளில் எப்போதோ சாதாரணமான விஷயமாகி விட்டது. இதனை மேற்கோள் காட்டியே இந்தியாவிலும் கார்களை 6 ஏர்பேக்குகளுடன் விற்பனை செய்ய மத்திய அரசு கட்டாயப்படுத்தி வருகிறது. இதில் முதல் நிறுவனமாக, தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் வந்திருப்பது மகிழ்ச்சியான செய்தியாகும்.


Click it and Unblock the Notifications
