டாடா, மாருதிக்கு தொட நடுங்க ஆரம்பிச்சிருக்கும்.. ஹூண்டாய் எக்ஸ்டர் கார் உற்பத்தி பணிகள் தொடக்கம்..
ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் உற்பத்தி பணிகள் இந்தியாவில் தொடங்கிவிட்டதாகவும், முதல் யூனிட் எக்ஸ்டர் உற்பத்தி செய்யப்பட்டு ஆலையில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல் டாடா மோட்டார்ஸ் மற்றும் மாருசி சுஸுகி ஆகிய நிறுவனங்கள் மத்தியில் கலக்கத்தையும், பட்ஜெட் கார் விரும்பிகள் மத்தியில் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கின்றது.
இந்தியர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பைத் தூண்டிக் கொண்டிருக்கும் கார் மாடல்களில் ஹூண்டாய் எக்ஸ்டர்-ம் ஒன்று. இது ஓர் சப்-காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இதனை மைக்ரோ எஸ்யூவி என்றும் கூறலாம். இதன் உற்பத்தி பணிகளையே ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியாவில் தற்போது தொடங்கி இருக்கின்றது.

மேலும், முதல் யூனிட் எக்ஸ்டர் காரை உற்பத்தி ஆலையில் இருந்து அது வெளியேற்றி இருக்கின்றது. இந்த காரின் உற்பத்தி பணிகள் சென்னையில் உள்ள ஹூண்டாய் தொழில்சாலையிலேயே தொடங்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இங்கிருந்தே இந்தியாவிற்கும் உலக நாடுகள் சிலவற்றிற்கும் எக்ஸ்டர் விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றது.
ஜூலை 10 ஆம் தேதி அன்றே ஹூண்டாய் எக்ஸ்டர் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. இதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன. ஆகையால், நிறுவனம் எக்ஸ்டரின் உற்பத்தி பணிகளை தீவிரப்படுத்தி இருக்கின்றது. இந்த நிலையிலேயே முதல் யூனிட் எக்ஸ்டர் விற்பனைக்காக உற்பத்தி ஆலையில் இருந்து வெளியேற்றப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை உறுதிப்படுத்தும் விதமாக சில படங்களும் வெளியாகி உள்ளன. ஹூண்டாய் நிறுவனத்தின் ஊழியர்கள் முதல் யூனிட் எக்ஸ்டர் உடன் எடுத்துக் கொண்ட படங்களே இணையத்தில் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இந்த காருக்கான புக்கிங் பணிகள் தொடங்கிவிட்டன. ரூ. 11 ஆயிரம் முன் தொகை செலுத்தி எக்ஸ்டர் காரை உங்கள் பேரில் புக் செய்துக் கொள்ள முடியும்.
பார்க்க மிக குட்டியாக இந்த கார் இருந்தாலும் சிறப்பு வசதிகளை மிக தாராளமாகக் கொண்டிருக்கப் போகின்றது. சமீபத்தில் இந்த காரின் பக்கம் மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஹூண்டாய் சில டீசர் படங்களை வெளியிட்டது. அனைத்தும் எக்ஸ்டருடையதாகும். ஒவ்வொரு டீசர் படம் வாயிலாகவும் சில தகவல்களை அது இந்த உலகிற்கு தெரியப்படுத்தியது.

அந்தவகையில், ஹூண்டாய் பெயரைக் குறிக்கும் விதமாக 'எச்' வடிவ பகல் நேர எல்இடி லைட், சன் ரூஃப், டேஷ்கேம், 8 அங்குல தொடுதிரை, இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் என எக்கசக்க அம்சங்கள் இந்த காரில் இடம் பெற இருக்கின்றன. இதுதவிர, வீல் ஆர்ச்சுகள் மற்றும் கதவுகளில் பாடி கிளாடிங்குகள், ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்டுகள் பின் மற்றும் முன் பக்க பம்பர்களில் வழங்கப்பட்டு இருக்கும்.
இதுமாதிரியான பன்முக சிறப்பு வசதிகளுடனேயே எக்ஸ்டர் மைக்ரோ எஸ்யூவி கார் பிரிவில் பட்டையை கிளப்ப இருக்கின்றது. குறிப்பாக, இதன் உயர்நிலை வேரியண்டுகளில் வாய்ஸ் கன்ட்ரோல் வசதிகள் எல்லாம் கொடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த காரின் வருகை டாடா பஞ்ச், சிட்ரோன் சி3 மற்றும் மாருதி சுஸுகி இக்னிஸ் ஆகிய கார்களுக்கு கடுமையான போட்டியை வழங்க இருக்கின்றது.

குறிப்பாக டாடா பஞ்சிற்கே இந்த காரின் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்த இருக்கின்றது. இப்போதைக்கு குட்டி எஸ்யூவி கார் செக்மெண்டில் டாப் செல்லிங் காராக டாடா பஞ்ச் இருக்கின்றது. இதற்கு குந்தகம் விளைவிக்கும் விதமாகவே ஹூண்டாய் அதன் எக்ஸ்டர் காரை களமிறக்கும் பணியில் தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது.

இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டார் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 83 எச்பி பவரையும், 114 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இத்துடன், சிஎன்ஜி மோட்டார் ஆப்ஷனும் இந்த காரில் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

டாடா மோட்டார்ஸும் அதன் பஞ்ச் காரை சிஎன்ஜி தேர்வில் விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது. ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. வரும் ஜூலை 10ம் தேதி அன்றே அறிவிக்கப்பட இருக்கின்றது. ரூ. 5.லட்சம் அல்லது 5.5 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் இக்கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் எக்ஸ்டர் மிகக் குறைவான விலையில் விற்பனைக்கு வர இருக்கின்ற காரணத்தினாலேயே சில வாகன உற்பத்தி நிறுவனங்கள் மத்தியில் அதன் உற்பத்தி பணிகள் தொடங்கி இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் கலக்கத்தையும், பட்ஜெட் கார் பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









