அதீத மகிழ்ச்சியில் ஹூண்டாய்.. இந்த சந்தோஷத்துக்கு முழுக்க முழுக்க நம்ம இந்தியர்கள்தான் காரணம்!
பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் (Hyundai) மட்டற்ற மகிழ்ச்சியில் திக்குமுக்காடிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு இந்திய சந்தையும், இந்தியர்களே காரணம். இதுவரை எந்த ஆண்டிலும் இல்லாத அதீத எண்ணிக்கையில் ஹூண்டாய் நிறுவனத்தின் கார்கள் இந்தியாவில் விற்பனையாகி இருக்கின்றது.
இதுவே நிறுவனத்தின் அதீத மகிழ்ச்சி முக்கிய காரணம் ஆக இருக்கின்றது. 2022-2023 ஆம் நிதியாண்டில் 7.20 லட்சம் யூனிட்டுகள் ஹூண்டாய் வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன. உள் நாட்டு விற்பனை மற்றும் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி என இரண்டும் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

உள்நாட்டில் மட்டும் 5,67,546 லட்சம் யூனிட் ஹூண்டாய் கார்கள் விற்பனையாகி இருக்கின்றது. இது சென்ற நிதியாண்டைக் காட்டிலும் 17.9 சதவீதம் அதிக விற்பனை எண்ணிக்கை ஆகும். 2021-22 நிதியாண்டில் உள் நாட்டு சந்தையில் 4,81,500 யூனிட் ஹூண்டாய் வாகனங்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது.
க்ரெட்டா, வென்யூ, அல்கஸார், டக்சன், அவுரா மற்றும் கிராண்ட் ஐ10 நியாஸ் இவைகளே நிறுவனத்தின் அதிகம் விற்பனையான கார் மாடல்களாக இருக்கின்றன. இவற்றிற்கே இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்திருக்கின்றது. இதன் விளைவாகவே 2022-23 நிதியாண்டை வெற்றிகரமான ஆண்டாக ஹூண்டாய் கடந்திருக்கின்றது.

வெளிநாடுகளுக்கு சுமார் 1.5 லட்சம் யூனிட் ஹூண்டாய் வாகனங்கள் 2022-2023 நிதியாண்டில் ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றன. இது கடந்த நிதியாண்டைக் காட்டிலும் 18.4 சதவீதம் அதிக ஏற்றுமதி ஆகும். 2021-22 நிதியாண்டில் 1,29,260 யூனிட்டுகள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், 2022-23 நிதியாண்டில் அது 1,53,019 யூனிட்டுகளாக உயர்ந்திருக்கின்றன.
இதன் வாயிலாக, உள் நாடு மற்றும் வெளிநாடு என இரண்டிலும் ஹூண்டாயின் தயாரிப்புகளுக்கு சென்ற நிதியாண்டில் அமோக வரவேற்புக் கிடைத்திருப்பது தெளிவாக தெரிகின்றது. இத்தகைய அமோக வரவேற்பின் காரணத்தினாலேயே ஹூண்டாய் தற்போது மிகப் பெரிய மகிழ்ச்சிக்கு ஆளாகி இருக்கின்றது. மேலும், சென்ற நிதியாண்டு அவர்களுக்கு மறக்க முடியாத ஆண்டாகவும் மாறி இருக்கின்றது.

2022-23 நிதியாண்டின் கடைசி மாதமான 2023 மார்ச்சிலும் இந்த நிறுவனத்தின் கார்கள் மிக மிக அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி இருக்கின்றன. உள்நாட்டில் 50,600 யூனிட்டுகள் விற்பனையாகி இருக்கின்றன. அதேவேளையில் வெளிநாடுகளுக்கு சுமார் 10,900 யூனிட்டுகள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றன. இது சென்ற ஆண்டின் மார்ச் மாதத்தைக் காட்டிலும் 11.2 சதவீதம் அதிக விற்பனை ஆகும்.
இவ்வாறு புதிய நிதியாண்டு தொடங்கியது முதல் இறுதி வரை நல்ல விற்பனை வளர்ச்சியையே ஹூண்டாய் இந்தியாவில் சந்தித்து இருக்கின்றது. இதனால், கடந்த நிதியாண்டை நிறுவனம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடத் தொடங்கி இருக்கின்றது. இதுவரை எந்த ஆண்டிலும் இந்த அளவு அதிக எண்ணிக்கையில் ஹூண்டாய் கார் விற்பனையாகியது இல்லை என்பதால் மிகப் பெரிய வரலாற்று நிகழ்வாகும் இதனை ஹூண்டாய் பாவிக்கின்றது.

இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனம் 12 கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், ஐசிஇ வாகனங்கள் பிரிவில் கிராண்ட் ஐ10 நியாஸ் (Grand i10 NIOS), ஐ20 (i20), ஐ20 என்-லைன் (i20 N Line), அவுரா (Aura), வென்யூ (Venue), வென்யூ என்-லைன் (Venue N Line), வெர்னா (New Verna), க்ரெட்டா (Creta), அல்கஸார் (Alcazar) மற்றும் டக்சன் (Tucson) ஆகிய மாடல்களை விற்பனைக்கு வழங்குகிறது.
இதைத்தொடர்ந்து மின்சார கார்கள் பிரிவில் கோனா எலெக்ட்ரிக் (Kona Electric) மற்றும் ஐயோனிக் (IONIQ 5) ஆகிய இரு எலெக்ட்ரிக் கார் மாடல்களையும் ஹூண்டாய் இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதுதவிர இன்னும் சில எலெக்ட்ரிக் கார்களையும் விற்பனைக்குக் களமிறக்கும் முயற்சியில் ஹூண்டாய் ஈடுபட்டு வருகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து
ஹூண்டாய் இந்தியாவில் இருந்து 85க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்துக் கொண்டிருக்கின்றது. ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், லத்தீன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆசியா பசிபிக்கில் கண்டங்களுக்கு அது கார்களை ஏற்றுமதி செய்து வருகின்றது. இங்கும் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதையே தற்போதைய ஏற்றுமதி புள்ளி விபரங்கள் நமக்கு தெரியப்படுத்துகின்றன.


Click it and Unblock the Notifications









