அமெரிக்க நிறுவனமே முடியாதென கைவிட்ட இந்திய தொழிற்சாலையை வாங்கும் ஹூண்டாய்!! வொர்க் அவுட் ஆகுமா?
ஹூண்டாய் மோட்டார்ஸ் (Hyundai Motors), ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் மற்றொரு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை இந்தியாவில் வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது. எந்த பகுதியில் தொழிற்சாலையை ஹூண்டாய் வாங்குகிறது? இதற்கு முன்னர் அந்த தொழிற்சாலையை எந்த நிறுவனம் உபயோகப்படுத்தி வந்தது? என்ற கேள்விகளுக்கான பதில்களை இனி பார்க்கலாம்.
தென்கொரியாவை சேர்ந்த பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்திய சந்தையில் மாருதி சுஸுகிக்கு அடுத்து 2வது மிக பெரும் கார் நிறுவனமாக விளங்குகிறது. குறிப்பாக, எஸ்யூவி ரக கார்களை விற்பனை செய்வதில் நம்பர் ஒன் பிராண்டாக ஹூண்டாய் உள்ளது. இந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் ஹூண்டாய் நிறுவனம் உள்ளது.

இதன் வெளிப்பாடாக, சமீபத்தில் கூட ஹூண்டாய் எக்ஸ்டர் என்ற மைக்ரோ எஸ்யூவி கார் அறிமுகப்படுத்தப்பட்டது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம். இவ்வாறு புதிய புதிய கார்கள் அறிமுகப்படுத்தப்படுவது ஒருபுறம் இருந்தாலும், கார்களை தகுந்த நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்ய உற்பத்தி பணிகளும் முழு வீச்சில் இருக்க வேண்டியது ஹூண்டாய் மட்டுமின்றி, எந்தவொரு கார் நிறுவனத்துக்கும் முக்கியமாகும்.
இதனை கருத்தில் கொண்டு, ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதியதாக ஒரு தொழிற்சாலையை வாங்குகிறது. ஹூண்டாய் புதியதாக வாங்கும் இந்த உற்பத்தி தொழிற்சாலையை இதற்கு முன்னர் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் பயன்படுத்தி வந்தது. அமெரிக்காவை சேர்ந்த பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் போதிய அளவில் வரவேற்பு கிடைக்காததால் இந்தியாவில் இருந்து கடந்த 2017ஆம் ஆண்டில் வெளியேறியது.
2000ஆம் ஆண்டில் முதன்முதலாக இந்தியாவில் நுழைந்த ஜெனரல் மோட்டார்ஸ் கிட்டத்தட்ட 17 வருடங்களாக நம் நாட்டில் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. ஜெனரல் மோட்டார்ஸிடம் இருந்து உற்பத்தி தொழிற்சாலையை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளதாக ஹூண்டாய் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் ஜெனரல் மோட்டார்ஸுக்கு மஹாராஷ்டிரா மாநிலத்தில் தலேகான் என்ற பகுதியில் தொழிற்சாலை உள்ளது.

தொழிற்சாலையின் கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலை அமைந்துள்ள நிலம் மட்டுமின்றி, தலேகான் தொழிற்சாலையில் உள்ள சில குறிப்பிட்ட மிஷின்களும் ஹூண்டாய்- ஜெனரல் மோட்டார்ஸ் இடையேயான ஒப்பந்தத்தில் அடங்குகின்றன. குர்காமில் நடைபெற்ற இந்த ஒப்பந்தத்தின் போது ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், சிஇஓ-வுமான உன்சூ கிம் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் துணை தலைவர் ஆசிஃப் ஹூசென் காட்ரி உடன் இருந்தனர்.
இந்த ஒப்பந்தத்திற்கு, சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் பங்குத்தாரர்களிடம் இருந்து இன்னும் ஒப்புதல் பெறப்படவில்லை. எங்களுக்கு கிடைத்துள்ள தகவலின்படி, ஹூண்டாய் நிறுவனம் தலேகான் தொழிற்சாலையில் கார் உற்பத்தியை வருகிற 2025ஆம் ஆண்டில் இருந்து துவங்கும். ஜெனரல் மோட்டார்ஸின் தலேகான் தொழிற்சாலையில் வருடத்திற்கு 1.30 லட்ச கார்களை உருவாக்க முடியும்.
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு ஏற்கனவே நம் தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்பத்தூரில் தொழிற்சாலை உள்ளது. ஹூண்டாயின் ஸ்ரீபெரும்பத்தூர் தொழிற்சாலை உடன் ஒப்பிடுகையில், தலேகான் தொழிற்சாலை உற்பத்தி திறனில் சிறியது ஆகும். ஏனெனில், ஸ்ரீபெரும்பத்தூர் தொழிற்சாலையில் வருடத்திற்கு சுமார் 10 லட்ச கார்களை உற்பத்தி செய்ய முடிகிறது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: மற்ற கார் நிறுவனங்களை போன்று ஹூண்டாய் மோட்டார்ஸும் எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தியில் முனைப்புடன் உள்ளது. இதற்காகவே, புதிய தொழிற்சாலையை வாங்கும் முடிவில் ஹூண்டாய் இறங்கியுள்ளது என நினைக்கிறோம். வருடத்திற்கு 1.30 லட்ச கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருப்பதால், தலேகான் தொழிற்சாலையை எலக்ட்ரிக் வாகனங்களுக்காக மட்டும் ஹூண்டாய் பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications








