ஹூண்டாய் மெது மெதுவா வளர்ந்துட்டே வராங்க! இது தெரிஞ்சா மாருதிக்கு இப்ப பயம் வந்துருமே!
ஹூண்டாய் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் கார்கள் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளது. உள்நாட்டு விற்பனை மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதியிலும் இந்நிறுவனம் வளர்ச்சியை பெற்றுள்ளது. பண்டிகை காலத்தில் பலர் இந்நிறுவனத்தின் கார்களை வாங்கியுள்ளனர். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
நவம்பர் மாதம் துவங்கிய விட்ட நிலையில் ஒவ்வொரு வாகன தயாரிப்பு நிறுவனங்களும் தங்கள் அக்டோபர் மாத விற்பனை விபரங்களை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி ஹுண்டாய் நிறுவனமும் தற்போது தனது அக்டோபர் மாத விற்பனை விவரத்தை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் அனைத்து செக்மெண்டிலும் வளர்ச்சியை கண்டுள்ளது.

ஹுண்டாய் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் மட்டும் மொத்தம் 55,128 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெறும் 48,001 வாகனத்தை மட்டும் தான் விற்பனை செய்திருந்தது. அதைவிட தற்போது 7127 வாகனங்கள் அதிகம் விற்பனையாகியுள்ளது. இந்த விற்பனை என்பது 14.85 சதவீத விற்பனை வளர்ச்சியாகும்.
ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த விற்பனை வளர்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. முக்கியமாக வாடிக்கையாளர்களுக்கு தேர்வு செய்யும் வகையில் அதிகமான வேறு வேரியன்ட்களை இந்நிறுவனம் வைத்துள்ளது. அதேபோல வாகனங்களை புக் செய்தவுடன் உடனுக்குடன் டெலிவரி செய்கிறது. மேலும் தங்கள் வாகனங்களில் 6 ஏர் பேக்குகளை சேர்த்துள்ளது. ஹுண்டாய் கார்களின் பாதுகாப்பு அம்சங்களும் அதிகமாகி உள்ளன. இதன் காரணமாக பலர் ஹூண்டாய் கார்களை தேர்வு செய்ய துவங்கி விட்டனர்.

இந்த அக்டோபர் மாத விற்பனையை கடந்த செப்டம்பர் மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது அதுவும் நல்ல வளர்ச்சி தான் பெற்றுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் மொத்தம் 54,241 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே சுமார் 887 வாகன விற்பனை வளர்ச்சியாகும். அதாவது 1.64 சதவீதம் ஒரே மாதத்தில் இந்நிறுவனம் வளர்ச்சி அடைந்துள்ளது.
அடுத்ததாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி குறித்த விபரத்தை பார்க்கும் போது ஹூண்டாய் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் மட்டும் 13,600 கார்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. அதே நேரம் கடந்தாண்டு இதே அக்டோபர் மாதம் வெறும் 10,005 கார்களை தான் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்திருந்தது. தற்போது கூடுதலாக 3595 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது 35.99 சதவீத ஏற்றுமதி வளர்ச்சி ஆகும்.

ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றை சேர்த்து ஹூண்டாய் நிறுவனம் 68,728 வாகனங்களை இந்தியாவில் உற்பத்தி செய்து விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு அக்டோபர் மாதம் 58,006 கார்களை மட்டுமே உற்பத்தி செய்து விற்பனை செய்திருந்தது. தற்போது 10,722 கார்களை கூடுதலாக தயாரித்து விற்பனை செய்துள்ளது. இது 18.48 சதவீத வளர்ச்சியாகும்.
வாடிக்கையாளர்கள் பலர் ஹூண்டாய்காரர்களை விரும்பி வாங்க ஹூண்டாய் நிறுவனத்தைத் தேடி வருகின்றனர். அதே நேரம் ஹூண்டாய் நிறுவன டீலர் ஷிப்புகளும் புக்கிங் செய்தவர்களுக்கு தொடர்ந்து டெலிவரியை வழங்கிக் கொண்டே வருகின்றன. வாடிக்கையாளர்களுக்கு திருப்திகரமான சேவையை வழங்குவதால் இந்நிறுவனத்தின் விற்பனை படிப்படியாக வளர்ந்து கொண்டே இருக்கிறது.

ஹூண்டாய் நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சி பாதையை சென்று கொண்டே இருக்கிறது. இந்தியாவில் மாருதி நிறுவனம் தான் அதிகமான எண்ணிக்கையில் வாகனங்களை விற்பனை செய்து வந்தாலும், அதற்கு அடுத்த இடத்தில் பெரும்பாலும் ஹூண்டாய் நிறுவனம்தான் இருக்கிறது. அவ்வப்போது டாடா நிறுவனம் ஹூண்டாய் நிறுவனத்தின் விற்பனையை முந்தி சென்றாலும் ஹூண்டாய் நிறுவனம் தொடர்ந்து நிலையான வளர்ச்சியை பெற்று வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் நீண்ட ஆண்டுகளாக கார்களை விற்பனை செய்து இந்திய மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. இந்நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பது இந்தியர்கள் இந்நிறுவனத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது. மேலும் பண்டிகை காலம் என்பதால் இந்நிறுவனத்தின் கார்களை பலர் விரும்பி வாங்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications









