பிளைட்ல குடிகாரங்க தொல்லை அதிகமாகிடுச்சு! எத்தனை பேரு மாட்டிருக்காங்க தெரியுமா?
சர்வதேச அளவில் விமானத்தில் புகைப்பிடித்தவர்கள், மது போதையில் கலாட்டா செய்தவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு உயர்ந்துள்ளது. விமானத்தில் பயணிகள் மோசமான முறையில் நடந்து கொண்ட சம்பவங்கள் குறித்து சர்வதேச விமான போக்குவரத்து அசோசியேன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரியவந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
உலகம் முழுவதும் தினமும் லட்சக்கணக்கான விமானங்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பறந்து வருகிறது. இந்த விமானங்களில் கோடிக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர். இந்த விமான போக்குவரத்தின் போது பயணிகள் சில நேரங்களில் மோசமான முறையில் நடந்து கொள்வார்கள். மது போதையில் கலாட்டா செய்வது, சக பயணிகளுக்கு தொந்தரவாக இருப்பது போன்ற சம்பவங்கள் நடக்கும்.

இப்படியான சம்பவங்கள் நடந்தால் அந்த பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இப்படியாக விமான பயணத்தில் ஒரு பயணி மோசமாக நடந்து கொண்டால் அது குறித்து ரிப்போர்ட் செய்யப்படும். இப்படியாக கடந்த 2022ம் ஆண்டு உலகம் முழுவதும் நடந்த சம்பவங்களை வைத்து சர்வதேச விமான போக்குவரத்து அசோசியேஷன் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டைவிட கடந்த 2022ம் ஆண்டில் விமானத்தில் மோசமான செயல்களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. அதாவது 2021ம் ஆண்டில் 835 விமான பயணங்களில் ஒரு சம்பவம் இப்படியாக மோசமான பயணிகள் நடவடிக்கை கொண்டதாக இருந்தது. ஆனால் 2022ம் ஆண்டு 568 விமான பயணங்களில் ஒரு மோசமான சம்பவம் நடக்கும் அளவிற்கு சம்பவங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

விமானத்தில் பறக்கும் போது சொல்லப்பட்ட விதிமுறைகளை மீறுவது, சக பயணி அல்லது விமான பணிப்பெண்களிடம் பேசதக்காத வார்த்தைகளில் பேசுவது, மது போதையில் கலாட்டா செய்வது உள்ளிட்ட சம்பவங்கள் தான் அதிகமான அளவு நடந்துள்ளது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் சம்பவம் 17200 விமான பயணங்களில் ஒரு சம்பவம் தான் அப்படி நடந்தாலும் கடந்த 2021ஐ ஒப்பிடும் போது 61 சதவீதம் அதிகமாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் விமானத்தில் பறக்கும் போது பின்பற்றவேண்டிய விதிமுறைகளை மீறும் சம்பவத்தில் அதிகமாக சிகரெட், மற்றும் இசிகரெட்களை விமானத்தின் கேபின் மற்றும் கழிவறையில் பிடிக்கும் சம்பவம் அதிகமாக இருக்கிறது. இது போக சீட்பெல்ட்களை போட மறுப்பது, லக்கேஜ்களை பாதுகாப்பாக வைக்க மறுப்பது, விமானத்திற்குள் சொந்தமாக மது பாட்டில்களை வாங்கி வந்து குடிப்பது போன்ற சம்பவங்கள் அதிகம் நடந்துள்ளது.
இது குறித்து அந்த அசோசியேசனின் துணை இயக்குநர் கான்ராட் கிளிஃப்போர்டு கூறும் போது : "மோசமான பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவது கவலையளிக்கிறது. ஆன்போர்டிங்கை பிரச்சனை இல்லாமல் இருக்க விமான நிறுவன ஊழியர்கள் முயற்சி செய்து தான் வருகின்றனர். நாங்கள் விடுமுறைக்கு வெளியூர் செல்லும் பயணிகளை தொந்தரவு செய்ய நாங்கள் விரும்பவில்லை.
சக பயணிகளுக்கு கிடைக்க வேண்டிய மரியாதைக்கு நாங்கள் தான் பொறுப்பு. பெரும்பாலான மக்களின் நன்மைக்காக சிலரை நாங்கள் கடினமாக கையாள வேண்டியது உள்ளது. மக்கள் மத்தியில் பொது இடத்தில் நடந்து கொள்ளும் விதம் குறித்த விழிப்புணர்வும் தெளிவும் அதிகரிக்க வேண்டும்."என கூறினார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகம் முழுவதும் விமானங்களில் பயணிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வருகிறது. அதே நேரத்தில் மோசமாக நடந்து கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகமாகியுள்ளது வருத்தமான செய்தி தான். மக்கள் மத்தியில் பொது இடத்தில் நடந்து கொள்ளும் விதம் குறித்த விழிப்புணர்வு அதிகமாக வேண்டும்.


Click it and Unblock the Notifications








