Electronic Stability Control System.. இது இருந்தா மட்டும் காரை வாங்குங்க.. ஏன் என்பதற்கான பதில் இதோ!
வாகன உலகின் தொடக்க காலத்தில் பாதுகாப்பிற்காக பிரேக் எனும் ஒற்றை விஷயம் மட்டுமே வழங்கப்பட்டது. இதுமட்டுமே ஆபத்துகளில் இருந்து பயணிகளை பாதுகாக்கும் ஒரே கருவியாகவும் இருந்தது. ஆனால், இந்த நிலை இப்போது மாறி இருக்கின்றது. ஏர் பேக், சீட் பெல்ட் என எக்கசக்க அம்சங்கள் பயணிகளின் பாதுகாப்பிற்காக வாகனங்களில் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், இப்போதைய நவீன கார்களில் பாதுகாப்பிற்கு வழங்கப்படும் மிக முக்கியமான அம்சங்களில் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம் (Electronic Stability Control) ஒன்றாக இருக்கின்றது. இது ஓர் மின்னணு சிஸ்டம் ஆகும். பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்குவதில் இந்த அம்சம் முக்கிய பங்கினை வகிக்கின்றது.

குறிப்பாக, திடீர் திருப்பங்களின் மிக சிறந்த கன்ட்ரோலையும், வழ வழப்பான சாலையில் க்ரிப்பான இயக்க அனுபவத்தையும் அது வழங்கும். இத்தகைய அம்சங்களைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்த கருவி மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது. மேலும், புதிய காரை வாங்க செல்லும்போது, ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம் இருக்கும் காரை பார்த்து வாங்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றது.
சவாலான நேரங்களில் கூட மிக சிறந்த வாகன கட்டுப்பாட்டை அது வழங்கும். ஆகையால், இந்த அம்சம் கொண்ட வாகனம் விபத்தை எப்போதும் சந்திக்காது. அப்படியே அது விபத்தைச் சந்தித்தாலும் கடுமையான பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம் பாதுகாக்கும்.

ஆரம்ப காலத்தில் இந்த அம்சம் மிக மிக விலை உயர்ந்த சொகுசு கார்களில் மட்டுமே வழங்கப்பட்டன. ஆனால், இப்போது சில மலிவு விலை கார் மாடல்களிலும் வாகன உற்பத்தியாளர்கள் வழங்குகின்றனர். அந்தவகையில், இந்தியாவின் விலை குறைவான கார் மாடலான ரெனால்ட் க்விட், டாடா டியாகோ, நிஸான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் ட்ரைபர் ஆகிய கார் மாடல்களில் வழங்கப்படுகின்றன.
இந்த கார்களின் விலை ரூ. 4.70 லட்சம் தொடங்கி ரூ. 8.97 லட்சம் வரை மட்டுமே ஆகும். இதுபோன்று இன்னும் பல மலிவு விலை கார் மாடல்களில் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம் வழங்கப்படுகின்றது. இந்த அம்சம் சென்சார்களைக் கொண்டு இயங்குகின்றது. கார் இயங்க ஆரம்பித்த உடன் இந்த சென்சார்களும் இயங்க ஆரம்பித்துவிடும்.

இந்த நிலையிலேயே வாகனம் கட்டுப்பாட்டை இழப்பதைக் கண்டறிந்தால், உடனடியாக அந்த கருவி பிரேக்குடன் இணைந்து செயல்படும். இவ்வாறே தன்னுடைய பாதுகாப்பு பணிகளை அது விரைந்து செய்யும். இந்திய வாகன உலகம் இரு வெவ்வேறு விதமான பெயர்களில் இந்த பாதுகாப்பு அம்சத்தை குறிப்பிடுகின்றது.
ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம் (Stability Control System) மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் (Electronic Stability Control) ஆகிய பெயர்களிலேயே அது அறியப்படுகின்றது. இந்தியாவில் சாலை விபத்துகள் முன்பைக் காட்டிலும் இப்போது பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. மேலும், விபத்துகளின்போது ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்துக் காணப்படுகின்றது.
இதைக் குறைக்கும் பொருட்டு வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் மலிவு விலை கார் மாடல்களிலும் எலெக்ட்ரிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் போன்ற மிக முக்கியமான பாதுகாப்பு சாதனங்களை வழங்கத் தொடங்கி இருக்கின்றன. அனைத்து அம்சங்களும் விபத்துகளின்போது ஏற்படும் பெரும் இழப்புகளையும், பாதிப்புகளையும் குறைக்க உதவும். குறிப்பாக, விபத்து ஏற்படும் உயிரிழப்புகளை இந்த அம்சங்கள் தவிர்க்க பெரும் உதவியாக இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகனம் வாங்குவது பெரிய விஷயம் அல்ல. அதில் குறிப்பிட்ட பாதுகாப்பு அம்சங்கல் இருக்கின்றதா என்பதை கட்டாயம் பார்த்து வாங்க வேண்டும். அந்தவகையில், நீங்கள் பார்க்க வேண்டிய கட்டாய பாதுகாப்பு அம்சங்களில் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டமும் ஒன்றாகும். இது ஆபத்தான சூழல்களில் சிறப்பான பாதுகாப்பை வழங்கும்.


Click it and Unblock the Notifications









