இந்தியா வல்லரசு நாடாகிருச்சோ.. இதுக்கு முன்னாடி இந்தளவு கார்கள் விற்பனையானதே இல்ல.. 3 மில்லியனை தாண்டிருச்சு!
எந்த ஒரு வருடத்திலும் இல்லாத அளவிற்கு சென்ற நிதியாண்டில் (2022-2023) கார்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு சில நிறுவனங்களைத் தவிர, முன்னணி நிறுவனங்கள் பல தாங்கள் வரலாறு காணாத அளவில் அதிக கார்களை விற்பனைச் செய்திருப்பதாக தகவல் வெளியிட்டிருக்கின்றன.
டாடா மோட்டார்ஸ், மாருதி சுஸுகி மற்றும் ஹூண்டாய் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் பல 2022-23 நிதியாண்டில் அமோக விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றன. இந்த நிலையில், ஒட்டுமொத்தமாக சென்ற நிதியாண்டில் மட்டும் இந்தியர்கள் இதுவரை இல்லாத அளவாக 3.5 மில்லியன் புதிய கார்களை வாங்கி இருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த தகவலை ஃபடா (Federation of Automobile Dealers Associations of India)-வும் உறுதி செய்திருக்கின்றது. ஆகையால், உலக நாடுகள் அனைத்தும் இந்த தகவலைக் கேட்டு வாய் அடைத்து போயிருக்கின்றன.
அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் புதிய வாகனங்களின் விற்பனை மிகக் கடுமையான சரிவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றன.
குறிப்பாக, பாகிஸ்தானில் புதிய காரை வாங்க ஆளே இல்லாததைப் போன்ற சூழல் நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே, இந்தியாவில் புதிய கார்களின் விற்பனை அபரீதமான (வரலாறு காணாத) விற்பனை வளர்ச்சியைச் சந்தித்து இருக்கின்றது. இதேபோல், இருசக்கர வாகன விற்பனையும் பலமடங்கு உயர்ந்துக் காணப்படுகின்றது. இதற்கு பின்னால் ஐந்து காரணங்கள் இருப்பதாக கூறப்படுகின்றது. அவை என்ன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

புதுமுக கார்களின் வருகை: 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் கடுமையான விதிகள் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு (உலகம்) முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. இதன் விளைவாக சில புதுமுக கார்களின் வருகை தள்ளிப் போயின. அவை தற்போது இந்தியாவை நோக்கி படையெடுக்கும் விதமாக விற்பனைக்குக் களமிறங்கிக் கொண்டிருக்கின்றன. இரண்டு மற்றும் நான்கு சக்கரம் என இரு பிரிவிலும் புதுமுகங்கள் தொடர்ச்சியாக விற்பனைக்கு களமிறங்கிய வண்ணம் இருக்கின்றன.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராயல் என்பீல்டு ஹண்டர்350 மற்றும் டிவிஎஸ் ரோனின் உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்களும், மஹிந்திரா ஸ்கார்பியோ என் மற்றும் மாருதி கிராண்ட் விட்டாரா ஆகிய கார் மாடல்களும் சென்ற நிதியாண்டிலேயே விற்பனைக்குக் களமிறங்கின. இவையே இந்திய வாகன உலகில் விற்பனையை பூஸ்ட் செய்திருக்கின்றன. டாடா மோட்டார்ஸும் அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டாடா டியாகோ இவி, இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் காரையும் சென்ற ஆண்டிலேயே விற்பனைக்குக் களமிறக்கியது என்பது குறிப்பிடத்தகுந்தது.

சிறப்பு ஆஃபர்கள்: மஹிந்திரா போன்ற சில முன்னணி நிறுவனங்கள் விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு சலுகையை அறிவித்தன. இதுவும் இந்தியாவில் விற்பனை பலமடங்கு அதிகரிக்கக் காரணமாக அமைந்து உள்ளது. உதாரணமாக, ஸ்கார்பியோ என் உள்ளிட்ட கார் மாடல்கள் சிலவற்றை விற்பனைக்குக் களமிறக்கும்போது சிறப்பு யுக்தியாக நிறுவனம், அறிமுக சலுகை விலையை அறிவித்தது. இது அந்நிறுவனத்தின் விற்பனையை லேசாக உயர்த்தியது.
விழாக் காலம்: விழாக் காலத்தில் அதிகளவில் கார்கள் விற்பனையாகி இருப்பதை நம்மால் காண முடிகின்றது. குறிப்பாக, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, புத்தாண்டு ஆகிய பண்டிகை நாட்களிலும், வருடத்தின் இறுதி காலகட்டத்திலும் வாகனங்களின் சேல்ஸ் பலமடங்கு அதிகரித்து காணப்பட்டது. முன்னதாக விற்பனையில் வீழ்ச்சியைச் சந்தித்து வருவதாக கூறிய நிறுவனங்கள்கூட விழா நாட்களில் நல்ல விற்பனை வளர்ச்சியை பெற்றதாக அறிவித்தன.

எஸ்யூவி கார்களின் வருகை அதிகரிப்பு: இந்தியர்களின் பார்வை ஹேட்ச்பேக்கில் இருந்து திரும்பி எஸ்யூவி பக்கம் மாறி இருக்கின்றது. இது அரங்கேறி பல காலமாகின்றது. இதை உணர்ந்து வாகன உற்பத்தியாளர்கள் அதிகளவில் எஸ்யூவி ரக வாகனங்களைக் களமிறக்கத் தொடங்கி இருக்கின்றது. மஹிந்திரா முழுமையாக எஸ்யூவி கார் உற்பத்திக்கே மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
குறைவான விலை மற்றும் அதிக பிரீமியம் வசதிகள்: டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை குறைவான விலையிலேயே அதிக பிரீமியம் வசதிகள் கொண்டதாக விற்பனைக்கு வழங்க ஆரம்பித்திருக்கின்றன. வாகன உற்பத்தி நிறுவனங்களின் இந்த யுக்தியும் அவர்களை அதிகளவில் வாகனங்களைத் தூண்ட செய்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து:
இந்தியர்கள் பலர் தங்களின் அத்தியாவசிய தேவையாக வாகனங்களைக் கருதத் தொடங்கி இருக்கின்றனர். இதன் விளைவாகவே வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு 2022-23 ஆம் நிதியாண்டில் அதிக அளவில் வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன. குறிப்பாக, கார்களின் விற்பனை பலமடங்கு உயர்ந்து காணப்படுகின்றது. இதேபோல், சொகுசு கார்களின் விற்பனையும் பலமடங்கு இந்தியாவில் அதிகரித்துக் காணப்படுவது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









