இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட காருக்கு வெளிநாட்டில் கிடைத்த பெருமை!! மீண்டும் மீண்டும் பெருமைப்பட வைக்குது
லத்தீன் என்சிஏபி (Latin NCAP) மோதல் சோதனையில் உட்படுத்தப்பட்ட ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார் எல்லா விதமான மோதல்களையும் சமாளித்து, சோதனையில் சிறப்பான மதிப்பெண்ணை பெற்று அசத்தியுள்ளது. இதுகுறித்தும், ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி கார் குறித்தும் விரிவாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் வெண்டோ, போலோ கார்களின் விற்பனை நிறுத்தப்பட்டதற்கு பிறகு, ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் வெற்றிக்கரமான காராக டைகுனை சொல்ல வேண்டும். ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்துடன் இணைந்து இந்தியா 2.0 திட்டத்தில் 'எம்.க்யூ.பி ஏ0 இன்' என்ற பிளாட்ஃபாரத்தில் டைகுனை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் உருவாக்கியது.

இதே பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டவை தான் ஸ்கோடா குஷாக், ஸ்லாவியா மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன், விர்டுஸ் கார்கள் ஆகும். அதாவது, ஸ்கோடா குஷாக் காரின் ஃபோக்ஸ்வேகன் வெர்சன் தான் டைகுன் ஆகும். க்ளோபல் என்சிஏபி மோதல் சோதனையில் இந்த 4 கார்களும் முழு 5 நட்சத்திர மதிப்பெண்களை பெற்றுள்ளன. இந்த நிலையில் தற்போது, லத்தீன் என்சிஏபி மோதல் சோதனையிலும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார் முழு 5 நட்சத்திரங்களை தட்டி தூக்கியுள்ளது.
லத்தீன் என்சிஏபி மோதல் சோதனைகளில் உட்படுத்தப்பட்ட டைகுன் காரில் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் மற்றும் ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக் உள்ளிட்டவை இருந்தன. லத்தீன் என்சிஏபி மோதல் சோதனையில் இந்த ஃபோக்ஸ்வேகன் எஸ்யூவி கார் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் தலா 100க்கு 92 சதவீதத்தையும், பாதசாரிகள் மற்றும் மனவலிமையற்ற சாலை பயன்பாட்டாளர்களுக்கான பாதுகாப்பில் 55 சதவீதத்தையும் பெற்றுள்ளது.

காரில் உள்ள பாதுகாப்பு உதவி அமைப்பிற்காக 83 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சோதனையில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்த சோதனையில் உட்படுத்தப்பட்டது இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட டைகுன் கார் ஆகும். ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு இந்தியாவில் புனேவில் சாகான் என்ற பகுதியில் தொழிற்சாலை உள்ளது.
ஆனால் இந்திய மார்க்கெட்டுக்காக உற்பத்தி செய்யப்படும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார்களில் ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக் வழங்கப்படுவது இல்லை. இந்திய டைகுன் காரில் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், எலக்ட்ரானிக் பிரேக் உடன் ஆண்டி-லாக் பிரேக் சிஸ்டம், விபத்தின்போது கார் மேலும் மேலும் மோதலுக்கு உள்ளாகுவதை தடுக்கும் பிரேக்குகள், பிரேக் டிஸ்க் வைபிங் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

இவற்றுடன் பிரேக் உதவி, ஆண்டி-ஸ்லிப் ரெகுலேஷன், எலக்ட்ரானிக் டிஃப்ரென்ஷியல் லாக் சிஸ்டம், டயரில் காற்றழுத்தம் குறைவதை எச்சரிக்கும் வார்னிங், சீட்-பெல்ட் ரிமைண்டர்கள் உள்ளிட்டவை உடன் முன் இருக்கை பயணிகளுக்காக இரு ஏர்பேக்குகள் மட்டுமே இந்திய டைகுன் காரில் கொடுக்கப்படுகின்றன. விலைமிக்க டைகுன் வேரியண்ட்களில் கூடுதலாக சில ஏர்பேக்குகள் உடன் ஹில் ஸ்டார்ட் உதவியும் கிடைக்கிறது.
இந்தியாவில் தற்சமயம் ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.11.62 லட்சத்தில் இருந்து ரூ.19.46 லட்சம் வரையில் உள்ளன. டைனாமிக் மற்றும் பெர்ஃபார்மன்ஸ் என்ற இரு விதமான ட்ரிம் நிலைகளில் விற்பனை செய்யப்படும் டைகுன் காரின் டைனாமிக் ட்ரிம் நிலையில் கம்ஃபோர்ட்லைன், ஹைலைன் மற்றும் டாப்லைன் என 3 வேரியண்ட்கள் உள்ளன.

அதுவே பெஃபார்மன்ஸ் ட்ரிம் நிலையில் ஜிடி மற்றும் ஜிடி பிளஸ் என 2 வேரியண்ட்கள் உள்ளன. டைனாமிக் லைன் வேரியண்ட்கள் 1.0 லிட்டர், 3-சிலிண்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் உடன் விற்பனை செய்யப்படுகின்றன. பெர்ஃபார்மன்ஸ் லைன் வேரியண்ட்கள் ஆற்றல்மிக்க 1.5 லிட்டர் எவோ டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் உடன் விற்பனை செய்யப்படுகின்றன. எந்தவொரு வேரியண்ட்டை வாங்குபவரும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸை பெறலாம்.
லத்தீன் என்சிஏபி மோதல் சோதனையில் ஃபோக்ஸ்வேகன் டைகுன் 5 நட்சத்திர மதிப்பெண்ணை பெற்றிருப்பது குறித்து ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ-வும், நிர்வாக இயக்குனருமான பியூஷ் அரோரா கருத்து தெரிவிக்கையில், "எம்க்யூபி ஏ0-இன் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட எங்கள் வாகனங்களின் பாதுகாப்பு குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் பெற்ற 5-நட்சத்திர மதிப்பீடு ஆனது மெக்சிகன் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸுக்கு இதேபோன்று வழங்கப்பட்ட 5-நட்சத்திர லத்தீன் என்சிஏபி மதிப்பீட்டிற்கு அடுத்து கிடைத்துள்ளது. உண்மையில் ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ், ஸ்கோடா குஷாக் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா என்ற எங்களின் அனைத்து இந்தியா 2.0 மாடல்களும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக மதிப்புமிக்க க்ளோபல் என்சிஏபி 5-நட்சத்திர மதிப்பீடுகளை பெற்றுள்ளன.
எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்பை வழங்குவதில் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் உறுதிப்பாட்டிற்கு இது ஒரு சான்றாகும். இந்தியாவில் தயாரிக்கப்படுவது, ஆனால் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. #மேக்இன்இந்தியா-க்கான பிரச்சாரத்தின் திறன் என்ன என்பதற்கு ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. உலக சந்தைகளில் கிடைக்கும் பொருட்களுக்கு இணையான மிக உயர் தரத்திலான தயாரிப்புகளை இந்திய வாடிக்கையாளர்களுக்காக கொண்டு வருவதில் நாங்கள் தொடர்ந்து உறுதியாக இருக்கிறோம்" என்றார்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ஃபோக்ஸ்வேகன்-ஸ்கோடா கூட்டணியில் சமீபத்தில் உருவாக்கப்பட்ட மாடர்ன் கார்கள் அனைத்தும் தரமானவை என்பது க்ளோபல் என்சிஏபி மோதல் சோதனையின்போதே நமக்கு தெரிந்துவிட்டது. லத்தீன் என்சிஏபி மோதல் சோதனை டைகுனின் வலிமையை மேலும் பறைச்சாற்றுவதாக அமைந்துள்ளது. குறிப்பாக, குழந்தைகள் பாதுகாப்பிலும் 92%-ஐ டைகுன் பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications









