கம்பேக் கொடுக்கிறதா ஃபியட் நிறுவனம்?.. கம்மி விலையில வேற கார்களை கொண்டு வர போறாங்களாம்! என்ன ஆக போகுதோ!!
ஜீப் (Jeep) மற்றும் சிட்ரோன் (Citroen) கார்களை தயாரித்துக் கொண்டிருக்கும் பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான ஸ்டெல்லண்டிஸ் (Stellantis)-க்கு சொந்தமான மற்றுமொரு கார் பிராண்டே ஃபியட் (Fiat) ஆகும். இந்த கார் பிராண்டையே ஸ்டெல்லண்டிஸ் மீண்டும் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த தகவல் கார் காதலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. குறிப்பாக, ஃபியட் கார் பிரியர்களுக்கு கூடுதல் குஷியை இந்த தகவல் ஏற்படுத்தி இருக்கின்றது. ஸ்டெல்லண்டிஸ் நிறுவனம் இந்தியாவிற்கான ஃபியட் கார்களை தயாரிக்க அதன் எஸ்டிஎல்ஏ எம் (STLA M) பிளாட்பாரத்தை பயன்படுத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு செய்யப்படும் எனில் குறைந்த முதலீட்டில் நிறுவனத்தால் ஃபியட் கார்களை இந்தியாவில் தயாரிக்க முடியும். மேலும், பட்ஜெட் விலையில் கார்களையும் அதனால் விற்பனைக்கு வழங்க முடியும் என தெரிகின்றது. நிறுவனம் தன்னுடைய எதிர்காலத்திற்கான பல கார் மாடல்களை இந்த தளத்தில் வைத்தே தயாரிக்க இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
குறிப்பாக, ஜீப் காம்பஸ் மற்றும் அடுத்த தலைமுறை சிட்ரோன் கார்களையும் அது இந்த தளத்தில் வைத்தே தயாரிக்க இருக்கின்றது. எஸ்டிஎல்ஏ எம் பிளாட்பாரம் என்பது நிறுவனத்தின் மாடுலர் வகை பிளாட்பாரம் ஆகும். இந்த தளத்தில் வைத்து 4.3 மீட்டர்கள் வகை கார்கள் தொடங்கி 4.9 மீட்டர் வரையிலான கார் வகைகளை உற்பத்தி செய்ய முடியும்.

மிக முக்கியமாக 'சி' மற்றும் 'டி' செக்மெண்ட் கார்களையும் இந்த தளம் ஆதரிக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. 2.7 மீட்டர் மற்றும் 2.9 மீட்டர் வரையிலான வீல்பேஸ் (wheelbase) கொண்ட கார்களைக் கூட இந்த தளத்தில் உற்பத்தி செய்ய முடியும்.
இத்தகைய சூப்பரான கார் உற்பத்தி தளத்திலேயே ஸ்டெல்லண்டில் விரைவில் இந்தியாவிற்கான ஃபியட் கார்களை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்னும் ஒரு சில தினங்களில் சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் (C3 Aircross) இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.
இதைத்தொடர்ந்து, ஃபியட் பிராண்டின் கார்களும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதன் துள்ளியமான வருகை நாள் பற்றிய விபரம் வெளியிடப்படவில்லை. இந்தியாவில் மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார்களுக்கு வரவேற்பு மிக அமோகமாக நிலவிக் கொண்டிருப்பதனால், அது முதலில் எஸ்யூவி காரையே இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரும் என யூகிக்கப்படுகின்றது.
மேலும், கடந்த முறை போன்று இருக்காமல் இந்த முறை மிகவும் கவனமாக இந்தியாவில் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இதன் இந்திய வருகை விரைவில் உறுதிச் செய்யப்பட இருப்பதால் அந்த நிறுவனத்தின் மின்சார கார்களும் விற்பனைக்கு வரும் என்கிற சூழல் உருவாகி இருக்கின்றது.
ஃபியட் நிறுவனம் சமீபத்தில் 600 இவி எனும் எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகப்படுத்தியது. இது ஓர் எலெக்ட்ரிக் காராகும். மிகவும் அழகான தோற்றத்திலும், நவீன அம்சங்கள் பலவற்றையும் கொண்டதாக இந்த கார் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் முழு சார்ஜில் 400 கிமீ தூரம் வரை பயணிக்கும்.
இந்த காரை அதிக வேகத்திலும் சார்ஜ் செய்து கொள்ள முடியும். ஃபியட் 500எக்ஸ் மாடலின் ரீ-பிளேஸ் கார் மாடலே 600 இவி என கூறப்படுகின்றது. ஃபியட் 600 இ-காரில் 154 குதிரை திறன் மற்றும் 260 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்ட மின் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கு மிக சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. எனவே ஃபியட் தன்னுடைய வருகையை எலெக்ட்ரிக் காரின் வாயிலாக தொடங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஏன் மேலே பார்த்த 600இவி-யைகூட அது விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








