தமிழகமா-தாய்லாந்தா.. குழப்பத்தில் ஐ-போன் நிறுவனம்! நமக்கு ஜாக்பாட் அடிக்க நிறைய சான்ஸ் இருக்கு! முழு விபரம்!
ஃபாக்ஸ்கான் (Foxconn), இந்த நிறுவனத்தை அறியாத நபர்களைக் காண்பது மிகவும் அரிது. குறிப்பாக, இந்த நிறுவனத்தை அறியாத செல்போன் பிரியர்களை (காதலர்களை)ப் பார்ப்பது மிக மிக கடினமானது. ஏனெனில், இந்த நிறுவனம்தான் உலக புகழ் பெற்ற ஆப்பிள் ஐ-போன்களை தயாரித்துக் கொண்டு இருக்கின்றது.
இது பலர் அறிந்த விஷயமே. இதேபோல், இந்த நிறுவனம் தற்போது வாகன உற்பத்தியிலும் களமிறங்கி இருக்கின்றது. இந்த தகவலும் சமீப சில காலமாக இணையத்தில் வெளியாகிக் கொண்டிருப்பதால் வாகன ஆர்வலர்கள் பலருக்கு இதுவும் தெரிந்த விஷயமாக இருக்கலாம். ஆனால், தற்போது நாம் இந்த பதிவில் பார்க்க இருப்பது இதுவரை வெளிவராத புதிய தகவல்கள் ஆகும்.

ஃபாக்ஸ்கான் நிறுவனம் பேட்டரியால் இயங்கும் சிறிய காரை உருவாக்க திட்டமிட்டிருப்பதே அந்த புதிய தகவல் ஆகும். அதுதவிர, தாய்லாந்து உடன் போட்டியிடும் இடத்தில் தற்போது இந்தியா இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆமாங்க, ஃபாக்ஸ்கான் எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் தயாரிக்கும் நோக்கத்தில் இருக்கின்றது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதுபோலவே ஓர் தகவல் வெளியாகியது. அதாவது, ஃபாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய முதலீட்டை விரிவாக்கம் செய்ய இருப்பதாகவும், இதன் அடிப்படையில் தன்னுடைய செல்போன் உற்பத்தி ஆலையை ஃபாக்ஸ்கான் விரிவாக்கம் செய்ய இருப்பதாகவும் அந்த தகவல்கள் தெரிவித்தன.
விரிவாக்கம் செய்யப்படும் அந்த ஆலையிலேயே மின் வாகனங்களை உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலை இடம் பெறும் என கூறப்பட்டது. இந்த நிறுவனத்தின் செல்போன் ஆலை தமிழகத்தில் அமைந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே ஃபாக்ஸ்கான் இந்தியாவில் மின் வாகன உற்பத்தியைத் தொடங்க இருப்பதை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக தற்போது புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தமிழகத்திலேயே அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மொபிலிட்டி இன் ஹார்மோனி (Mobility in Harmony) இந்த துணை பிராண்டின் வாயிலாகவே ஃபாக்ஸ்கான் அதன் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய இருக்கின்றது. இந்த பிராண்ட் 20 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கும் குறைவான விலையில், அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் 16 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் ஓர் 3 சீட்டர் இவியை உற்பத்தி செய்ய இருக்கின்றது.
ஒருவேளை ஃபாக்ஸ்கான் நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் தயாரிக்கத் தொடங்கும் எனில் இந்த விலை குறைவான இ-காரின் உற்பத்தி பணிகள் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், துரதிரஷ்டவசமாக இந்த காரை ஆரம்ப கட்டத்தில் கார்பரேட் நிறுவனங்களின் டெலிவரி பிரிவிற்கு மட்டுமே விற்பனைக்கு வழங்க அந்நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது.
ஆகையால், இது பயணிகள் பயன்பாட்டு வாகனமாக விற்பனைக்கு வருமா என்பது கேள்விக் குறியாக மாறி இருக்கின்றது. அதேநேரத்தில், வெகு விரைவில் இதன் கான்செப்ட் மாடலை வெளியீடு செய்ய இருப்பதை முன்னிட்டு, வாங்குவோரை ஈர்க்கும் முயற்சியில் மொபிலிட்டி இன் ஹார்மோனி நிறுவனம் களமிறங்கி இருக்கின்றது.
முன்னணி ஆன்லைன் ஸ்டோர்கள், கார் வாடகை சேவை நிறுவனம் மற்றும் கூரியர் நிறுவனம் என பலதரப்பட்ட சேவை நிறுவனங்களுடன் அது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. மொபிலிட்டி இன் ஹார்மோனி நிறுவனம் தன்னுடைய இந்த மின்சார காரின் கான்செப்ட் மாடலை வரும் அக்டோபர் மாதம் ஜப்பானில் நடைபெற இருக்கும் ஆட்டோ டிரேட் ஷோவில் காட்சிப்படுத்த திட்டமிட்டு இருக்கின்றது.
இந்த தகவலை அந்நிறுவனத்தின் சிஇஓ ஜேக் செங்-ம் உறுதிப்படுத்தி இருக்கின்றார். அதேநேரத்தில், தாய்லாந்து அல்லது இந்தியா இரண்டில் ஏதேனும் ஓர் நாட்டிலேயே நிறுவனத்தின் மின்வாகன உற்பத்தி ஆலை தொடங்கப்பட இருக்கின்றது. நிறுவனத்தின் நீண்ட வளர்ச்சிக்கு இந்தியா முக்கிய பங்கினை வகிக்கும் என்று நிறுவனம் எதிர்பார்க்கின்றது.
ஆகையால், அதன் ஆலை இந்தியாவில் அமைவதற்கான வாய்ப்புகள் பல மடங்கு அதிகமாக இருக்கின்றது. மேலும், அக்டோபரில் வெளியீடு செய்த பின்னர் சுமார் 18 அல்லது 24 மாதங்களுக்குள் தன்னுடைய மின் வாகன உற்பத்தி பணியைத் தொடங்கவும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது.
இதைத்தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டில் ஆறு இருக்கைகள் கொண்ட ஓர் எலெக்ட்ரிக் காரையும், 2025 ஆம் ஆண்டில் 9 இருக்கைகள் கொண்ட எலெக்ட்ரிக் காரையும் உற்பத்தி செய்ய மொபிலிட்டி இன் ஹார்மோனி திட்டமிட்டு இருக்கின்றது. மேலும், உலக மின் வாகன சந்தையில் 5 சதவீத பங்கை பெறுவதை இலக்காகக் கொண்டு இந்த நிறுவனம் இயங்கத் தொடங்கி இருக்கின்றது.
டெஸ்லா நிறுவனத்தின் ஷாங்காய் உற்பத்தி ஆலையை போலவே மிகப் பெரிய மற்றுமொரு ஆலையை நாங்கள் உருவாக்க இருக்கின்றோம் என்றும் நிறுவனத்தின் சிஇஓ கூறி இருக்கின்றார். இந்த தகவல் ஐ-போன் பிரியர்களின் கவனத்தை மேலும் ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக, நிறுவனத்தின் மின் வாகன உற்பத்தி ஆலையை அமைப்பதற்கான திட்டத்தில் ஃபாக்ஸ்கான் இருப்பது இந்திய ஐ-போன் பிரியர்கள் மற்றும் மின் வாகன பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மின்சார கார்களுக்கு இந்தியாவில் மிகப் பெரிய வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் காரணத்தினாலேயே இந்தியாவில் களமிறங்க வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஆர்வம் காட்டிக் கொண்டிருக்கின்றன. டெஸ்லா போன்ற முன்னணி நிறுவனங்கள்கூட இந்தியாவில் கால் தடம் பதிக்க ஆவலுடன் காத்திருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே ஃபாக்ஸ்கானும் அதன் இ-வாகன உற்பத்தியை இந்தியாவில் தொடங்கும் நோக்கில் இருப்பது தெரிய வந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








